அருந்தமிழ் அமிழ்து
புலவர் குழந்தை
1. அருந்தமிழ் அமிழ்து
1. மின்னூல் உரிமம்
2. மூலநூற்குறிப்பு
3. மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை
4. புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு
5. முன்னுரை
6. அணிந்துரை
2. வள்ளுவர் கண்ட வளநாடு
3. இயற்கையின் எழுச்சி
4. தொல்காப்பியர் கால ஆட்சி முறை
5. ஆரமும் ஆழ்கடலும்
6. வண்புகழ் மூவர்
7. நனி நாகரிகம்
அருந்தமிழ் அமிழ்து
புலவர் குழந்தை
மூலநூற்குறிப்பு
நூற்பெயர் : அருந்தமிழ் அமிழ்து
தொகுப்பு : புலவர் குழந்தை படைப்புகள் - 8
ஆசிரியர் : புலவர் குழந்தை
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2008
தாள் : 16 கி வெள்ளைத் தாள்
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 16+ 264 = 280
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 175/-
படிகள் : 1000
நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : வ. மலர்
அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா, ஆப்செட் பிரிண்டர்ஸ், இராயப்பேட்டை, சென்னை - 14.
வெளியீடு : வளவன் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017., தொ.பே. 2433 9030
மின்னஞ்சல் : [email protected]
இணையதளம் : www.tamilmann.in
மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை
பெரும் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாளன்று தேனினும் இனிய ஆற்றினை நம் காதில் பொழியச் செய்தது மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு.
புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட 29 நூல்களையும் அரசுடைமையாக்கிப் பரிவுத் தொகையாக ரூபாய் 10 இலட்சத்தையும் அளித்துள்ளது.
பணம் என்பது ஒரு பொருட்டன்று; அதே நேரத்தில் பெரும் புலவரின் நூல்களை அரசுடைமை ஆக்கியதன் மூலம் அவருக்குச் சிறப்பானதோர் அங்கீகாரத்தை அளித்துள்ளது - அதுதான் குறிப்பிடத்தக்கது.
தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப் பட்டவர்; தன்மான இயக்கத்தில் தன்னை ஒப்படைத்தவர் - திராவிடர் கழகத்தில் கருஞ்சட்டை வீரராக வீர உலா வந்தவர்.
அவர் இயற்றிய “இராவண காவியம்” - இனவரலாற்றில் - இயக்க வரலாற்றில் ஈடு இணையில்லாதது.
4.9.1971 அன்று விழுப்புரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களுக்கு நடத்தப்பட்ட விழாவில் தந்தை பெரியார் பங்கு கொண்டு புலவர் குழந்தை அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டுரையும் புகன்றார்.
அவ்விழாவில் பகுத்தறிவாளர் கழக மாநிலப் புரவலர் என்கிற முறையில் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும் பங்கேற்றுப் பாராட்டுரை புகன்றார்.
அவ்விழாவில் பங்கேற்றுப் புலவர் குழந்தை அவர்கள் ‘இராவண காவியம் எழுதியது ஏன்?” என்பது குறித்துத் தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
“இராமன் கடவுளல்ல என்கின்ற உணர்ச்சியினைத் தமிழக மக்களிடையே ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக இராவண காவியத்தை எழுதினேன். எனக்குத் துணிவினைத் தந்தவர் தந்தை பெரியாரவர்களே ஆவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் (‘விடுதலை’ 29.9.1971 பக்கம் 3).
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆனாலும், புலவர் குழந்தையானாலும் தொடக்கத்தில் பக்திப் பாட்டெழுதிக் கிடந்தவர்கள்தாம். தந்தை பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பின்பே பகுத்தறிவுக் கருவை கவிதையின் மையமாக வைத்துப் பாட்டெழுதினார்கள் என்பது அடிக்கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.
விழுப்புரம் பாராட்டு விழாவில் தந்தை பெரியார் கூறினார்.
“புலவர் குழந்தையவர்கள் இராவண காவியம் எழுதி இருக்கின்றார், அது ஒரு இராமாயணம் போன்றதே! எத்தனையோ இராமாயணங்கள் இருக்கின்றன என்றாலும் நம் நாட்டிலிருப்பது பார்ப்பன இராமாயணமாகும். இந்த இராமாயணத்தின் தத்துவம் நம்மை இழிவுபடுத்துவதேயாகும். நம்மை அடக்கி ஒடுக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை வாய்த்தவரை செய்ய வேண்டியது; பார்ப்பான் தர்மத்தை நிலை நிறுத்த தன் மனைவியை விட்டுக் கொடுத்து, அதன் மூலம் அவனை ஒழிக்கலாம் என்பதை உணர்த்துவதற்காக எழுதப்பட்டதேயாகும்.
நமது புலவர்கள் மகா மோசமானவர்கள்; பார்ப்பான் எழுதியதைக் கண்டிக்காது, காது, மூக்கு வைத்துப் பெருமைப்படுகிறார்களே தவிர, அதனைக் கண்டித்து எழுதப் புலவர் குழந்தைபோல் எவரும் முன்வரவில்லை. முதன்முதல் நண்பர் பாரதிதாசன் அவர்கள்தான் துணிந்து பார்ப்பானைக் கண்டித்தார்.
புலவர் குழந்தை அவர்கள் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனங்களையெல்லாம் காவிய நடையில் எழுதியுள்ளார். அதுவும் இலக்கணப்படி எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தை நீங்களெல்லாம் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டும். பார்ப்பான் தன் இனத்திற்காக பிரச்சாரம் செய்கின்ற காலிகளையெல்லாம் சாமியாக்குகின்றான். அதுபோல நமக்காகப் பாடுபடுகின்றவர்களை, தொண்டு செய்கிறவர்களை, எழுதுகிறவர்களைப் பெருமைப் படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் துணிந்து முன்வருவார்கள்” (விடுதலை 29.9.1971 பக்கம் 3) என்று தந்தை பெரியார் பாராட்டுதலுடன் ஆழமான கருத்தினை எடுத்துரைத்தார்கள்.
சேலம் பேரணியில் முன்வரிசையில் புலவர் குழந்தை
1971 (சனவரி 21) அன்று திராவிடர் கழகம் நடத்திய சேலம் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் கருப்புடை அணிந்து புலவர் குழந்தை அவர்கள் வீறுநடைபோட்ட காட்சி கண் கொள்ளாதது.
1938, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவரும் கூட!
எந்த இடத்திலும் தாம் ஏற்றுக் கொண்ட தன்மான இயக்க பகுத்தறிவுக் கருத்துக்களைக் கம்பீரமாகச் சொல்லத் தயங்காதவர்.
வெள்ளக்கோயில் தீத்தாம்பாளையத்தில் 1930இல், “ஞானசூரியன்” நூல் ஆசிரியரான சாமி சிவானந்த சரஸ்வதியுடன் ‘கடவுள் இல்லை’ என நான்கு நாள் நடத்திய சொற்போரில் புலவர் குழந்தை அவர்கள் வெற்றி பெற்றார் என்பதிலிருந்து, அவரின் விவாதத்திறன் பளிச்சிடுகிறது.
இரா. பி. சேதுப்பிள்ளையின் பாராட்டு!
கம்பன் கவிநயத்தை லயித்து, சப்புக் கொட்டிப் பேசும் சொல்லின் செல்வர் என்று போற்றப்பட்ட இரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள்கூட புலவர் குழந்தையின் இராவண காவியத்தில் சொக்கிப் போயிருக்கிறார்.
“தேனினும் இனிய செந்தமிழ்க் குழந்தை!”
நான் கம்பராமாயணக் கவிச் சுவையில் கட்டுண்டு கிடந்தனன். தங்கள் இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது. கருத்து மாறுபாடு வேறு” என்று குறிப்பிட்டதிலிருந்து புலவர் அவர்களின் புலமைத் திறன் குன்றின் மேல் ஒளிர்கிறது.
கம்ப இராமாயண அன்பரான புலவர் அய்யன் பெருமாள்கோனார் ஒருபடி மேலே தாவிப் பாடினார்.
“ இனியொரு கம்பனும் வருவானோ?
இப்படி யும்கவி தருவானோ?
கம்பனே வந்தான்;
அப்படிக் கவிதையும் தந்தான்
ஆனால்,
கருத்துதான் மாறுபட்டது”
என்று கவியால் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார்.
இத்தகைய தமிழ்ப் புலவர் பெருமகனாருக்குத்தான் தமிழக அரசு உரிய சிறப்பினைச் செய்திருக்கிறது.
கம்பனைப் போல் காட்டிக் கொடுத்து காவியம் புனைந்திருந்தால் இவருக்கு இமயப்புகழ் கிடைத்திருக்கும். என்றாலும் காலங் கடந்தாவது ஒரு அரசின் அங்கீகாரம் கிடைத்தது என்பது வரவேற்கத் தகுந்ததாகும்.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், அதன் துணை அமைப்பான பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மூலம், மறைக்கப்படும் தமிழினப் பெரு மக்களைத் (இலக்கியவாதிகளை) தம் தோளில் தூக்கிக் கொண்டாடத் தவறவில்லை.
தமிழ்நாட்டிலேயே இராவண காவியத் தொடர் சொற்பொழிவை அரங்கேற்றிய பெருமை அதற்குண்டு. சிலம்பொலி செல்லப்பனார் அவர்களைக் கொண்டு 29.9.1978-ல் தொடங்கி 7.12.1979வரை 21 சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. அதே போல் பேராசிரியர் அறிவரசன் அவர்கள் 29.9.1998 முதல் 13.11.1999வரை 15 சொற் பொழிவுகளை நிகழ்த்தினார்.
முனைவர் மறைமலை இலக்குவனார் 1.7.2004 முதல் 15.6.2006 வரை 23 தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.
இராவண காவிய மாநாடு
இரண்டு இராவண காவிய மாநாடுகள் நடத்தப்பட்டன; முதல் மாநாடு 5.7.1986 அன்று காலை முதல் இரவுவரை சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இரண்டாவது இராவண காவிய மாநாடு 1.7.1989 அன்று (புலவர் குழந்தை அவர்களின் 83-ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று) சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது.
இவையன்றி, தனித்தனிச் சிறப்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டதுண்டு. இத்திசையில் மொத்தம் 77 நிகழ்ச்சிகள் நடத்திய சாதனை பெரியார் நூலக வாசகர் வட்டத்துக்கு உண்டு.
தீர்மானங்கள்
28.6.2005 அன்று சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விழாவில் நிறைவுரையாற்றினார். அவ்விழாவில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானம் தமிழக அரசு புலவர் குழந்தையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்பதாகும்.
இரண்டாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களின் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்பதாகும்.
மூன்றாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களைப் போற்றும் வண்ணம் அவர்தம் அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்பதாகும்.
இந்தத் தீர்மானங்களை இணைத்து, அவற்றைச் செயல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து அன்றைய தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் கடிதம் ஒன்றை எழுதினார். (15.7.2005)
அந்தக் கடிதம் இன்னும் கோப்பில் குறட்டை விட்டுக் கொண்டுதானிருக்கிறது. காரணம் அந்த அரசுக்குத் தமிழ் உணர்வு இல்லாததுதான்.
மத்திய அரசு தொலை தொடர்பு மற்றும் தொழிற் நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு தயாநிதிமாறனுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் கி. சத்தியநாராயணன் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதினார். புலவர் குழந்தை அவர்களை நினைவுகூரும் வகையில் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது. (12.8.2005).
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் 24.8.2005 அன்று ஒரு கடிதம் எழுதினார். வாசகர் வட்டம் நிறைவேற்றிய தீர்மானங்களை இணைத்து அவற்றைச் செயலாக்கம் செய்ய அதில் வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது.
கலைஞரின் சாதனை!
இப்படி இடை விடாத தொடர் முயற்சிகளைக் கழகம் மேற்கொண்டதற்கு தி.மு.க. ஆட்சியில், மாண்புமிகு மானமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக முதல் அமைச்சர் ஆகியுள்ள நிலையில் வெற்றி கிடைத்திருக்கிறது.
இந்த அரும்செயலைச் செய்த முதல் அமைச்சரைப் பாராட்டி, தமிழக அரசைப் பாராட்டி, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற புலவர் குழந்தை நூற்றாண்டு நிறைவு விழாவில் (29.6.2006) நன்றியைத் தெரிவித்துப் பாராட்டியும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
அஞ்சல்தலை வெளியிடுவது மட்டும் நிலுவையில் உள்ளது. அதனையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றுவார் என்பதில் அய்யமில்லை. புலவர் குழந்தை அவர்கள் மறைந்தாலும் காலத்தை வென்று நம்மிடையே வாழ்கிறார்.
வாழ்க அப்பெருமகனார்!
(நன்றி : விடுதலை 2.7.2006)
புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு
இராவண காவியம் படைத்த புலவர் குழந்தை அவர்கள் கொங்கு நாட்டில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ‘ஓலவலசு’ என்னும் சிற்றூரில், பண்ணையக்காரர் என்னும் பழங்குடியில், முத்துசாமிக் கவுண்டர் - சின்னம்மையாருக்கு 1-7-1906இல் பிறந்தார். இவர்தம் பெற்றோருக்கு ஒரே மகனாக வளர்ந்தார்.
தாம் பிறந்த சிற்றூரில் திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார்; தொடர்ந்து படிக்காமல் இடையிடையே விட்டு விட்டுப் படித்தார். மொத்தத்தில் எட்டு மாதங்களே திண்ணைப் பள்ளியில் பயின்றார். கருவிலே திருவுடையவராகிய இவர் பத்தாம் ஆண்டில் இளம் பருவத்திலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றிருந்தார். யாரேனும் ஒருவர் ஒரு பாட்டைப் பாடக் கேட்டால் உடனே இவர் அப்பாட்டின் ஓசையில் புதுப்பாட்டு ஒன்றினைப் பாடுவார். எப்போதும் ஏதேனும் ஒருபாட்டை எழுதிக் கொண்டே இருப்பார். பாட்டு எழுதுவது இவருக்குக் கைவந்த கலையாக அமைந்து விட்டது.
இவர் காலத்தில் இவர் வாழ்ந்த பகுதியில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை. ஆகவே தானாகவே முயன்று படித்துக் கவிபாடும் திறம் பெற்றிருந்தார். இவர் முதன் முதலில் இசைப்பாடல்களைப் பாடினார். இவர்தம் கல்லாமல் பாடும் கவித்திறனையும், பாடல்களின் சிறப்பினையும் கண்டு வியந்த அறிஞர்கள் சிலர், தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படிக்குமாறு தூண்டினர்; ஊக்குவித்தனர். தாம் பிறந்த ஓலவலசிலோ, அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலோ தமிழ்ப் புலவர்கள் எவரும் அக்காலத்தில் இல்லை. ஆகவே இவர் ஆசிரியர் துணையின்றித் தாமாகவே முயன்று இலக்கிய இலக்கணங்களைப் படித்துத் தமிழில் சிறந்த புலமை பெற்றார். மேலும் இவர் ஆசிரியர் உதவியின்றித் தாமாகவே படித்து 1934ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனித் தேர்வராகத் தேர்வு எழுதிப் புலவர் பட்டயம் பெற்றார்.
இவர் பவானியில் மாவட்டக் கழகப் பள்ளியில் 1924ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். 1940வரை தமிழாசிரியராகத் தொண்டாற்றினார். 1941 முதல் 1962ஆம் ஆண்டுவரை தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மாணவர்கள் வியந்து பாராட்டும்வகையில் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆசிரியர் பணியினின்று ஓய்வு பெற்ற பின்பும் எழுத்துப் பணியினின்று ஓய்வு பெறவில்லை. வாழ்நாள் முழுமையும் தமிழுக்காகத் தொண்டாற்றினார்; பல நூல்களைப் படைத்தார்; தமது கவிதைகள் வாயிலாகச் சமுதாய உணர்வை - பகுத்தறிவை மக்களிடையே பரப்பினார்.
இவருக்கு முன் ஓலவலசில் படித்தவர் எவருமில்லை. அவ்வூரில் உள்ளவர்களுக்குக் கையொப்பம் இடவும் தெரியாது. இளமைப் பருவத்திலேயே பொதுத் தொண்டில் - சமுகாயத் தொண்டில் ஆர்வமுடையவராக இருந்தார். தாமாகத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தம் ஊரிலிருந்த தம்மையொத்த அகவையுடைய இளைஞர்களுக்குக் கல்வி கற்பித்தார். அவர்கள் மூலமாகப் பெரியவர்களுக்குக் கையொப்பம் போடப் பயிற்சியளிக்கச் செய்தார்; கை நாட்டு போடுவதை அறவே ஒழித்தார். அக்காலத்தில் இவரைவிட மூத்தவர் பலர் இவரிடம் கல்வி கற்றனர். ஓலவலசில் கல்லாமை இருளைப் போக்கினார்.
வேளாளஇன மக்களிடையே இருந்த பலபிரிவினரையும் ஒன்று சேர்ப்பதற்காகவும், அவ்வின இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்காகவும் 1946 முதல் 1950வரை ‘வேளாளன்’ என்னும் திங்களிதழை நடத்தினார். அவ்விதழில் இவர் எழுதிய கட்டுரைகள் அவ்வின இளைஞர்களிடையே புத்துணர்ச்சியை வளர்த்தது. விதவை மணம், கலப்புத்திருமணம், சீர்த்திருத்த மணம் முதலியன செய்யவும் அம்மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார்.
வேளாள சமூகத் தலைவரான திரு. வி.சி. வெள்ளியங்கிரி கவுண்டர் தலைமையில், தகடூர் (தருமபுரி) மாவட்டத்திலுள்ள அரூரில் வேளாள மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் புலவர் குழந்தை அவர்கள் ‘விதவை மணம்’ தீர்மானங் கொண்டு வந்தார்; ஒருமனமாக நிறைவேறச் செய்தார். அதன்படி நூற்றுக்கணக்கான விதவை மணங்களைச் செய்து வைத்தார். இச்செயல்கள் இவர்தம் சமூகத் தொண்டிற்குச் சிறந்த சான்றுகளாகும்.
இவர், யாப்பிலக்கணம் படிப்பதற்கு முன்னே 1918இல் ‘கன்னியம்மன் சிந்து’ என்னும் கவிதை நூலை வெளியிட்டார். இவர் பாடிய அச்சாகாத பாடல்களும் நூல்களும் பல உள்ளன; சில நூல்கள் அச்சாகி வெளியிடப்பட்டன. யாப்பிலக்கணம் கற்பதற்கு முன்பு பாடிய பாடல்கள் யாப்பிலக்கணப்படி அமைந்துள்ளன.
இவர் இதுவரை எழுதியுள்ள நூல்கள் : இராவண காவியம் உள்படச் செய்யுள் நூல்கள்-7, உரைநூல்கள் - 3, இலக்கண நூல்கள் -3, உரைநடை நூல்கள் -16 ஆகமொத்தம் 29 நூல்கள் படைத்துள்ளார். தீரன் சின்னமலை நாடகம் இன்னும் அச்சாகவில்லை.
‘விருத்தம் என்னும் வெண்பாவிற்கு உயர்கம்பன்’ என இதுவரையில் போற்றப்பட்டு வரும் புகழுரைக்கு ஈடாகப் புலவர் குழந்தை அவர்கள் இராவண காவியம் பாடிப் புகழ்பெற்றார். ‘காமஞ்சரி’ என்னும் செய்யுள் நாடக நூல், பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்களின் மனோன்மணீயம் என்னும் நூலுக்குப் பிறகு எழுதப்பட்ட சிறந்த நாடக நூலாகும். ‘நெருஞ்சிப் பழம்’ என்னும் நூல் தமிழில் இதுவரை வெளிவராத கற்பனைக் கருவூலமான காதல் கதையாகும்.
புலவர் குழந்தை அவர்கள் பெருங்கவிஞர் மட்டுமல்லர். சிறந்த எழுத்தாளர்; கேட்போர் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் பேசும் பெரும் பேச்சாளர். இவருடைய எழுத்துகள் உறுதியும் அஞ்சாமையும் ஆய்வும் செறிந்த புரட்சிக் கனல் தெறிக்கும் இயல்புடையவை. இவருடைய செய்யுள் நடையும் உரைநடையும் எளிய இனிய தனித்தமிழில் அமைந்தவை. இவர் படைத்த நூல்களெல்லாம் தமிழுக்கும் தமிழர்க்கும் ஆக்கம் தரும் வகையில் அமைந்துள்ளன.
தந்தை பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இவர் அவ்வியக்கத்தில் சேர்ந்தார்; பெரியாரின் அணுக்கத் தொண்டரானார். அன்று முதல் சுயமரியாதை இயக்கம் அதன் மறு பதிப்பான திராவிடர் கழகம், அதன் மறுமலர்ச்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுள் இணைந்து தொண்டாற்றியவர். பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதனையும் செய்யாதவர். பள்ளித் தமிழாசிரியராக இருந்துகொண்டே, அத்தொழிலுக்குச் சிறிதும் இடையூறு இல்லாமல், ‘பெரியார் சீடர்’, ‘கருப்புச் சட்டைக்காரர்’ என்று பொது மக்கள் கூறும்படி கட்சித் தொண்டாற்றியவர். இவரது சுயமரியாதை உணர்ச்சிப் பிழம்பே இராவண காவியம் படைக்கத் தூண்டியது; இவருக்குப் புகழைச் சேர்த்தது.
1948இல் சென்னையில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் திருக்குறளுக்குப் பகுத்தறிவிற்கு ஏற்ப உரை எழுதுவதற்குத் தந்தை பெரியார், நாவலர் சோமசுந்தரபாரதியார் தலைமையில் ஐவர் கொண்ட குழுவை அமைத்தார். அக்குழுவில் புலவர் குழந்தையும் ஒருவர். இவரே தனிஒருவராக இருந்து திருக்குறளுக்கு உரை எழுதி ‘திருக்குறள்-குழந்தையுரை’ என்று வெளியிட்டார். அவ்வுரையை 28 நாட்களில் எழுதி முடித்த பெருமைக்குரியர்.
அறிஞர் அண்ணா அவர்கள் ஈரோட்டில் ‘விடுதலை’ ஆசிரியராக இருந்தபோது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார். காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தடை செய்யப்பட்ட இவர்தம் இராவண காவியத்திந்கு, தமிழக அரசால், தமிழ் வாழத் தாம் வாழும் தமிழவேள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் 17-5-1971இல் தடை நீக்கப்பட்டது. அதைக்கண்டு தமிழகமே அகமிக மகிழ்ந்தது; தமிழவேள் கலைஞரை உளமார வாழ்த்தியது.
புலவர் குழந்தை ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கொண்டவர். இவர் ஒரு புரட்சிப் புலவரே எனினும் அமைதியும் அடக்கமும் உடையவர்; ஆடம்பரமின்றி எளிய வாழ்வு வாழ்ந்தவர்; பழகுவதற்கு இனிய பண்பாளர்; கடமை தவறாதவர்; எதிர்க் கட்சியானாலும், மாற்றுக் கருத்து உடையவராலும் நன்கு மதிக்கத் தக்கவர்.
புலவர் குழந்தை அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் முத்தம்மையார். கல்வியறிவு பெற வாய்ப்பில்லாதவராயினும் பொது அறிவு நிரம்பப் பெற்றவர்; தன்மானக் கொள்கையுடையவர்; தம் கணவரின் கொள்கைக்கேற்ப இல்லறத்தை இனிது நடத்தியவர். இவ்விணையருக்குச் சமத்துவம், சமரசம் என்னும் இரு பெண்மக்கள் உள்ளனர். தமிழுக்குத் தொண்டு செய்து வந்த புலவர் பெருந்தகை தமது 68ஆம் அகவையில் 24-9-1973இல் இயற்கை அடைந்தார். மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் புலவர் குழந்தையிடம் அன்பும் மதிப்பும் உடையவர். அவர் மறைந்த பிறகு, அவர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நூல்கள் 8-7-2006 அன்று அரசுடைமை ஆக்கப்பட்டதாக அறிவித்தார். குழந்தை அவர்களின் மகள்கள் இருவருக்கும் தலா ரூ.5 இலட்சம் பரிவுத் தொகை வழங்கினார்.
முன்னுரை
எதிர் காலக் குடிமக்களாகவும், ஆள்வோராகவும் விளங்கவிருக்கும் தமிழ் இளைஞர்களுக்கு, அவர்தம் நாடு, மொழி, முன்னோரின் வாழ்க்கை முறை, ஆட்சிமுறை, நாகரிகம் முதலியவற்றின் பழமை, பெருமை, சிறப்பு என்பனவற்றை அறிவுறுத்துதல் இன்றியமையாமை என்பது அறிஞர் கருத்து. இந்நூல் அக்கருத்துப்படி எழுதப்பட்டதேயாகும்.
இந்நூலைக் கற்கும் தமிழ் இளைஞர்கள், தங்கள் முன்னோர் தங்களுக்காகச் செய்து வைத்துள்ள பழந்தமிழ் நூல்களைக் கற்க ஆர்வம் கொள்வதோடு, தங்கள் முன்னோரின் நாகரிக நல்வாழ்வின் சிறப்பினை அறிந்தின்புற்று, தாமும் அன்னார்போல் வாழ முயலுவர் என்பது ஒருதலை.
இந்நூல் உயர்வகுப்பு மாணவர்களுக்கேற்ற எளிய இனிய தனித்தமிழ் நடையில், இலக்கியச் சுவையுடன் எழுதப் பெற்றுள்ளது. மாணவருலகிற்கு இந்நூலைப் பயன்படுமாறு செய்தல் மேலோர் கடமையாகும்.
பவானி
15 - 10 - 59.
அன்புள்ள,
குழந்தை.
அணிந்துரை
“அருந்தமிழ் அமிழ்து”
"அருந்தமிழ் அமிழ்து" என்னும் புலவர் குழந்தை அவர்களின் கட்டுரைத் தொகுப்பே இந்நூல். இதில் வள்ளுவர் கண்ட வளநாடு, இயற்கையின் எழுச்சி, தொல்காப்பியர் கால ஆட்சிமுறை, ஆழமும் ஆழ்கடலும், வண்புகழ் மூவர், நனி நாகரிகம் - என்ற கட்டுரைகள் அடங்கியவை இந்நூல்.
வள்ளுவர் கண்ட வளநாட்டுப் பகுதியில் தமிழ்நாட்டின் இயற்கை வளம், நிலவளம், பொன்னி பற்றிப் பாடுகிறார் ஓட்டக்கூத்தர்.
மலைகொன்று பொன்னிக்கு வழிகண்டசோழன்
வரராச ராசன்கை வாளென்ன வந்தே
என்பது தக்கயாகப் பரணி.
பசியும் பிணியும் :
யானை கட்டுந்தறியில் வான்முட்டும் போர் விழும் என்பது நாட்டு மொழி. ‘ஒரு பிடி படியும் கீரிடம் எழு களிறு புரக்கும் நாடு’ என்பது சான்றோர் உரை. நாடு நல்ல விளைநிலங்களை உடையதாக இருக்க வேண்டும். நீர் வளம் பொருந்தி இருக்க வேண்டும். வள்ளுவர் நாட்டு வளர்ச்சிக்கு எடுத்துக் கொண்ட முயற்சி அரியது.
தக்காரும் செல்வரும் :
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் அறியப் படும். தக்கவர், தமக்கென வாழார். பெரியாரைத் துணைக்கோடல், பெரியாரைப் பிழையாமை என்பன அரண்களுக்குக் கூறப்பட்டன.
நாட்டு மக்களின் நல்வாழ்வு இனிது நடைபெற்று வந்தமையால் ‘தக்கார் சேர்வது நாடு’ என்பது வள்ளுவர் வாக்கு. தள்ளா விளையுள் அமைந்து மக்கள் பசி, பிணியின்றித்தக்காரின் தகவுரையால் இனிது வாழவேண்டும் என்கிறார்.
பல்குழுவும் கொல்குறும்பும் :
உறுபசியும் ஓவாப்பிணியும் இன்றித் தக்காரும், தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு என்கிறார் வள்ளுவர். பல்வகைச் சிற்றினங்கள் இல்லாதும், குறும்பு செய்யக்கூடிய அரம்பர்கள் (ரௌடி) இல்லாது இருப்பதும் ஒரு நாட்டுக்கு மிகவும் கட்டாய
மாகும்.
இயற்கையின் எழுச்சி :
“செவிக்குணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்”(412) என்பது வள்ளுவம். பழந்தமிழ்ப் புலவர்கள் இயற்கைக் காட்சியில் ஈடுபாடு உடையவர்கள். புறம், அகம், நற்றிணை முதலியவற்றில் இயற்கை ஈடுபாட்டுப் பாக்களை நிரம்பக் காணலாம்.
தொல்காப்பியர் கால ஆட்சி முறை :
தமிழர் ஆட்சி மனுமுறைக்கு மாறுபட்டது. யூதர்கள் பொருளீட்டக் கூடாது. எந்தத்தொழிலும் செய்யக்கூடாது என்பது செர்மனியின் தனியாட்சிச் சட்டமாக இருந்தது.
வள்ளுவர் செய் திருக்குறளை
மறுவற நன்குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி
ஒருகுலத்துக் கொருநீதி
- மனோன்மணீயம் சுந்தரணார்.
குடி சூட்டு முடியாட்சி :
பழங்காலத்தில் குடி தழுவிய ஆட்சிமுறையே நடந்து வந்துள்ளது. தமிழர்களின் அரசியலறிவைப் போற்ற வேண்டும். நன்கு பழகிய அரசியல் குமரர்க்கு நாட்டு மக்கள் ஒன்று கூடி முடிசூட்டினர்.
மன்னர் இருவர் பகை கொண்டனர். பகையின் முடிவு போர் தானே! எல்லாவகைப் போர்களும் செய்தனர். அரசிளங்குமரன் வெற்றி பெற்றான்.
இருபெரு வேந்தர் தாமும் சுற்றமும்
ஒருவரும் ஒழியாத் தொகைநிலை
என்பது தொல் - புறம்
தொல் - புறத்திணை அனைத்தும் நடந்தவையாகும். நாட்டு மக்கள் தகுதியுடையவனையே அரசனாக்கினர்.
ஆழமும் ஆழ்கடலும் :
கடலும் மலையும் பற்றித் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. தென்கடலைத் தமிழ்க்கடல் என்பது மரபு.
நிலம்படுமுத்தம் என்பது குறிஞ்சி நிலங்களில் விளையும் முத்தை. சிப்பியிடம் முத்துக்கள் உண்டு. அவை கடலில் விளைபவை. வெண்பாப் புலவர் புகழேந்தி. "யானைக் கொம்பிலும், பன்றியின் கொம்பிலும் முத்துக்கள் பிறக்குமாம். கரும்பு, மூங்கில், நெல், தாமரை, கமுகு இவற்றிலும் முத்துக்கள் பிறக்கும் என்பர் பழந்தமிழர். இவை முத்துக்கள் பிறக்கும் இடங்கள். முத்தாரங்கள் பெண்டிர் அணிவர்.
வண்புகழ் மூவர் :
உலகின் முதன்மாந்தர் தமிழர் என்பதும், உலக முதன் மொழி தமிழ் என்பதும் ஆராய்ச்சி அறிஞர்களின் முடிந்த முடிபாகும்! மூவேந்தர்கள் இவ்வழி வந்தவர்களே!
புலவர், முனைவர் இரா. வடிவேலனார்
வள்ளுவர் கண்ட வளநாடு
1. இயற்கை வளம்
நாடு என்பது நான்கு எல்லைக்குட்பட்ட நிலப்பரப் பினை மட்டும் குறிப்பதில்லை. அந்நிலத்தோடு, அதில் வாழும் மக்களையும், அம்மக்கட்குப் பயன்படும் அந்நிலத்திலுள்ள இயற்கை வளத் தினையும் குறிக்கும். எனவே, நாட்டின் இயற்கை வளம், நாட்டு மக்களின் நல்வாழ்வு இவையே நாடு என்னும் சொல்லின் சிறந்த பொருளாகும். ‘ஒரு நிலம் நாடாகவோ, காடாகவோ, பள்ள மாகவோ, மேடாகவோ எதுவாக இருப்பினும் சரி, எங்கு நன்மக்கள் வாழ்கின்றார்களோ அதுவே நல்ல நிலம்’ என்கின்றது புறநானூறு (187).
தாம் பாடும் பாட்டுகளில் நாட்டு வளம் பாடுதலை இன்றியமையாத பொருள்களுள் ஒன்றாகக் கொண்டுள்ளனர் பழந்தமிழ்ப் புலவர்கள். அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து முதலிய பழந்தமிழ் நூல்களில் நாட்டின் நல்வளச்சிறப்பினைப் பரக்கக் காணலாம். அந்நூல் களைப் பழந்தமிழ் நாட்டின் இயற்கைப் படப்பிடிப் பெனவே பகரலாம். புல், மரம், பூ, விலங்கு, பறவை, நீர் முதலிய இயற்கைப் பொருள்களை இறைச்சி எனவும், உள்ளுறையுவமம் எனவும் அகப்பாட்டுக்களில் அமைத்துப் பாடி, அப்பாட்டுக்களைப் படிப்போர் உள்ளமும் உணர்வும் ஒருங்கு இன்பங் கொள்ளும்படி செய்துள்ளனர் அப்புலவர் பெருமக்கள்.
அவர்கள் நாட்டின் இயற்கை வளத்தோடு நகரின் செயற்கை வளத்தினையும் தம் பாக்களில் அமைத்துப் பாடியுள்ளார்கள். பத்துப் பாட்டில் ஒன்றான மதுரைக் காஞ்சி என்பது மதுரை மாநகரின் செயற்கை வளத்தினையும், பட்டினப்பாலை என்பது காவிரிப்பூம்பட்டினத்தின் செயற்கை வளத்தினையும், மணிமேகலை வஞ்சி மாநகரின் அவ்வளத்தினையும் கூறுமுகத்தான், அப்பழந் தமிழ் நாட்டின் தலை நகரங்கள் இவ்வாறு இருந்தன என்பதை நமக்கு அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன. சிலப்பதி காரமும் மாட மதுரையின் மாண்பு மிக்க சிறப்பினை வகைபடக் கூறுகிறது. அப்பழைய நகரங்களின் சிறப்பினை அந்நூல்களிற் கண்டு, தம் முன்னோரின் நாகரிகச் சிறப்பினை அறிந்தின்புறுதல் தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்.
இனி, இடைக்காலப் புலவர்களும், பிற்காலப் புலவர்களும் நாட்டின் இயற்கை வளத்தினையும் நகரத்தின் செயற்கை வளத் தினையும், நன்மக்கள் வாழ்வினையும் நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு எனத் தங்கள் நூல்களில் தனியுறுப்பாகவே கொண்டு தகவுடன் பாடியுள்ளனர். நைடதத்தின் நாட்டுப் படலமும் நகரப்படலமும் படித்தின்புறற்பால தொன்றாகும்.
தமிழர் வாழ்க்கைச் சட்ட நூலாகிய திருக்குறள் செய்த வள்ளுவரோ, மற்றப் புலவர்களைப் போல நாட்டின் இயற்கை வளமும் அந்நாடு வாழ் மக்களின் நல்வாழ்வும் இவ்வாறு இருந்தன என இறந்த காலத்தால் கூறாது, இவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்காலத்தால் கூறுகிறார். ‘இருந்தன’ என இறந்தகால நிகழ்ச்சி யாகக் கூறுவதைவிட, ‘இருக்க வேண்டும்’ என எதிர்கால நிகழ்ச்சி யாகக் கூறுவதே ஏற்புடைத் தாகும்.
அவ்வாறு இறந்த கால நிகழ்ச்சியாகக் கூறின், அன்று இருந்தவை இன்று இல்லையே என எண்ணி வருந்தவேண்டி நேரும். ‘என்னவோ முன்னே அப்படியெல்லாம் இருந்தனவாம்’ என்ற அளவோடு இருந்து விடுவோம். பிறரும், ‘உங்களப்பன் குதிரையேறினால் நீ கைவண்டி தானே இழுக்கிறாய்? அப்படி யிருந்தது இப்படி யிருந்தது எனப் பழம்பெருமை பேசுவதால் பயன் என்ன? இப்போது இருப்பதைப் பேசுவதுதானே அறிவுடைமை?’ என்று ஏளனமாகப் பேசவுங் கூடுமல்லவா?
இனி, ‘இவ்வாறு இருக்க வேண்டும்’ என எதிர்கால நிகழ்ச்சியாகக் கூறினால், அவ்வாறு இருக்கும்படி செய்ய முயற்சி செய்யத் தூண்டும். எனவேதான் வள்ளுவர், இப்படி யிருக்க வேண்டும் அப்படியிருக்க வேண்டும் என எதிர்கால நிகழ்ச்சியாக வற்புறுத்துகிறார். அவ்வாறு வற்புறுத்துவதனாற் பயன், ‘இவ்வாறு நாட்டை நன்னாடாக்க வேண்டும்; நன்னாட்டின் முன்னாட்டும் நாடாக ஆக்கவேண்டும்; இதுதான் நாடாள்வோரின் முன்னிற்கும் முதல் வேலை; இவ்வேலையை உடனடியாகச் செய்து நாட்டு மக்களை நல்வாழ்வு வாழச்செய்யுங்கள்; அதுதான் நல்லரசு எனப்படும்’ என ஆள்வோர்க்கு அறிவுறுத்தலேயாகும்.
2. நிலவளம்
திருக்குறளில் உள்ள நூற்று முப்பத்து மூன்று (133) அதிகாரங் களுள் நாடு என்பது ஒன்று. வள்ளுவர் அவ்வதிகாரத்தில் நாட்டு வளமும் நாடு வாழ் மக்களின் நல்வாழ்வும் பற்றியே கூறுகிறார்; நாட்டுநலம் பற்றி நாட்டு மக்களும் ஆள்வோரும் மேற்கொள்ள வேண்டியவற்றை வற்புறுத்துகிறார். அவ்வதிகாரப் பத்துக் குறளும் உலகில் தலையாய ஒரு நாடு எப்படியிருக்க வேண்டும் என்பதை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன. வள்ளுவர் கண்ட அவ்வளமார் தமிழ் நாட்டை எதிர்காலக் குடிமக்களாகிய, இந்நாட்டின் மன்னர்களாகிய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். நாட்டில் மக்களாட்சி நடப்பதால், தங்கள் ஆட்சிக் காலத்தில் நாட்டை அத்தகு நிலைக்குக் கொண்டு வரலாமல்லவா? வள்ளுவர் கண்ட அத்தகு வளமுடைய நாடாக்கலாமல்லவா? ஆம். ஆக்கலாம். ஊக்கமும் பொது நோக்கமும் இருப்பின் கட்டாயம் ஆக்கலாம். அவ்வாறு ஆக்க வேண்டும் என்பதுதானே வள்ளுவர் நோக்கமும்?
ஒரு நாட்டு மக்கள், ஒரு காலத்தே போதிய முயற்சி யின்றியோ, வேறு ஏதாவது காரணத்தினாலோ தம் நாட்டின் மேம்பாடு குன்றும்படி செய்து விட்டாலும் அடுத்த தலை முறையார் அக்குறைபாட்டைத் தீர்த்து நாட்டை நன்னிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்பது கருதித்தானே வள்ளுவர், ‘இவ்வாறு இருந்தது’ என இறந்தகால நிகழ்ச்சியாகக் கூறாது, ‘இவ்வாறு இருக்கவேண்டும்’ என எதிர்கால நிகழ்ச்சியாகக் கூறியுள்ளார். அடுத்த தலைமுறையினராகிய உங்களை நோக்கியே வள்ளுவர் அவ்வாறு கூறினார் போலும்! வள்ளுவர் வாய்மொழி பொய்யாமொழி எனப் போற்றப்படுவதன் காரணமும் இதுதானே? இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர்க் கூறியன வெல்லாம் இன்றும் அப்படியே நடைமுறையில் இருந்து வருகின்றன அல்லவா? இதுதான் பொய்யா மொழி என்பதன் உட்பொருள். அப் பொய்யா மொழியைப் பொய்யா மொழியாகக் கொண்டு கையாளுவது உங்கள் கடமையாகுமல்லவா?
ஒரு நாடு நல்ல நாடு எனப் பெயர் பெற வேண்டு மானால் அந்நாட்டின் நல்ல விளைவு விளைய வேண்டும். நல்ல விளைவு விளையாத நாடு நாடெனப்படாது. நாடு வாழ் மக்கள் சோற்றுக்குத் துடியாய்த் துடிக்கும்போது உணவுக்கு அயல் நாட்டினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, தம் தாய் நாட்டை விட்டு அண்டை அயல்நாடுகட்குக் குடியோடும் போது எங்ஙனம் அந்நாடு நன்னாடாகும்? நமது வளமார் தமிழ்நாடு, காவிரி பாயும் கன்னித் தமிழ்நாடு ஒரு காலத்தே அந்நிலையை அடைந்த தனாற்றானே? தமிழ்மக்கள் வாழவழி யின்றித் தம் தாய்நாட்டை விட்டு இலங்கை, மலேயா, கடாரம் (பர்மா) முதலிய வெளிநாடு களுக்குக் குடியோடினார்கள்? இன்றும் அவ்வயல் நாடுகளில் அயலார்க்கடிமையாய்க் கூலிவாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்?
கி. பி. 13- ஆம் நூற்றாண்டில் பரராசசிங்கன் என்பவன் இலங்கையை ஆண்டுவந்தான். அப்போது இலங்கையில், உணவுத் தட்டுதல் உண்டானது. இலங்கை மன்னன், உணவுப் பொருள் உதவித் தன்னாட்டு மக்களைக் காப்பாற்றும்படி. சோழநாட்டுத் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல் என்னும் தமிழ்ப்பெருஞ் செல்வனைக் குறையிரந்து வேண்டினான். சடையப்பன் கப்பல் கப்பலாய் நெல் அனுப்பி இலங்கை வாழ் மக்களைக் காப்பாற்றினான். அதே தமிழ் நாட்டினர் அவ்விலங் கைக்குப் பிழைக்க ஓடினர். இன்று அங்குத் தமிழ் மக்கள் சிங்களவரால் சீரழிந்து திகைக் கின்றனர்; தங்கள் பிறப்புரிமைகளை இழந்து பேதுறுகின்றனர். தமிழ் மக்களின் தாய்மொழியாம் இன்பத் தமிழ் மொழி அங்கு இழிவுபடுத்தப்படுகிறது.
இனி அந்நிலைமை இங்கு ஏற்படக்கூடாது. தமிழ் நாட்டு மக்கள் தம் தாய் நாட்டில் வாழ வழியின்றி, உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி அயல் நாடுகளுக்குக் குடியோடக்கூடாது. இது குறித்தே வள்ளுவர், ‘நாடு இவ்வாறு இருக்க வேண்டும்’ என எதிர்கால நிகழ்ச்சியாகக் கூறியுள்ளார். வள்ளுவர் வாய்மொழியைத் தள்ளாது மேற்கொள்ளுவோமாக.
நாட்டு மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டுமானால் அந்நாடு முழுவதும் நல்ல விளைநிலங்கள் அமைந்திருக்க வேண்டும். நிலம் ஒரே ஒப்புரவாக இருக்க வேண்டும். நல்ல மண்வள முள்ளதாக இருக்க வேண்டும். இத்தகைய நிலமே நல்ல விளை நிலமாகும். ‘போகந்தோறும் எரு போட்டுப் போட்டு உழவர்கள் வருந்தாமல் மிகுதியாக விளையும் விளைநிலங்களையுடைய நாடே நல்ல நாடாகும்’ (739) என்கிறார் வள்ளுவர்.
மழைநீர் பரவலாக அப்படியே நின்று நிலத்தை நீர்வள முடைய தாக்க வேண்டும். விழுந்த துளி சற்றும் நிற்காத ஓரணை நிலம் - - - - சரிவான நிலம் - - - - தன் மண்ணை மழைநீருக்குக் கொடுத்துவிட்டுக் கல்லை மட்டும் விடாமல் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டிருக்கும். நாலு துளி துளித்தாலும் அப்படியே அது வேறிடம் செல்லும் ஒருச்சரிவு நிலம் எப்படி வளமுடைய நிலமாகும்? ‘விழுந்த துளி அந்தரத்தே வேம்’ என்பது போல, ‘விழுந்த துளி அப்புறத்தே போம்’ நிலங்களால் யாது பயன்? அத்தகைய ஓரணை நிலங்களை வெட்டிச் சமனாக்க வேண்டும் கல்லுங்கரடுமாய் கிடக்கும் மேட்டு நிலங்களை வெட்டிப் படுகை நிலங்களாக்க வேண்டும். அப்பொழுது தான் நாடு நல்ல வளமுடையதாகும்; நாட்டின் வளமுடைய விளைநிலம் மிகுதியாக உண்டாகும்.
இந் நற்செயலை, நாட்டுப் பொதுப்பணியை இன்னம் ஒரு சில பண்ணையக்காரர்கள் செய்து கொண்டுதான் வருகிறார்கள். ஆனால், அத்தகைய நல்லோர் நூற்றுக்கு இரண்டு மூன்றுபேர் கூட இரார். மற்ற உழவர்கள் இதுபற்றிய நினைவே இல்லாதவர் களாக இருந்து வருகின்றனர். உள்ளவர், இல்லாதவர் நல்வாழ்விற்கு வேண்டிய பொதுப்பணிகள் செய்து நாட்டை ஒப்புரவு செய்து வருவதுபோல, நல்ல நிலத்தில் விளையும் விளைவில் ஒரு பகுதியைக் கொண்டு, வளமில்லாத நிலத்தைக் கொஞ்சங் கொஞ்சமாக வெட்டிச் சமன் செய்து வளமுடைய நிலமாக்கி வரவேண்டும். இந்நற் பணியை எல்லா உழவர்களும் ஒருவாறு தொடர்ந்து செய்து வந்தால், சில ஆண்டுகளில் நாடு நல்ல வளமுடைய விளை நிலங்களையுடைய நாடாகிவிடும். இதற்கு ஆள்வோர் தனி முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்காக ஒரு திட்டந் தீட்டி வேலை செய்து வரவேண்டும். நிலத்தைச் சமனாக்கும் ஒப்புரவி (புல்டோசர்) என்னும் கருவியைக் கொண்டு, ஏழை எளியவர் நிலங்களை அரசினரே ஒப்புரவு செய்து தர வேண்டும்.
ஒரு நிலம் போகம் பத்துப் பொதி விளைய, அதன் பக்கத்தில் உள்ள அதே அளவுள்ள நிலம் ஒரு பொதி கூடச் சரியாக விளைவதில்லை. அத்தகைய நிலங்கள் எவ்வளவுதான் இருந்தும் நாட்டுக்கு அவற்றால் என்ன பயன்? ‘மண் திணிந்த நிலனும்’ என்னும் புறநானூற்றடியும் மண் வளமுள்ள நிலத்தினையே குறிக்கும். அத்தகைய வளமுள்ள நிலத்தினையே வள்ளுவர் தள்ளாவிளையுள் என்கிறார். விளையுள் - விளை நிலம். தள்ளார் விளையுள் - தப்பாது விளையும் நிலம். ‘போட்டது போட்டபடி விளையும் நிலம்’ என்பது நாட்டு வழக்கு. இவ்வளவு விதை விதைத்தால் இவ்வளவு விளையும் என்னும் அளவுப்படி விளையும் நிலம் என்பதாம். இதுபற்றியே நம் முன்னையோர் நில அளவினைப்படி வள்ளம் என முகத்தலளவைப் பெயர்களால் வழங்கி வந்ததும், (படி – ஏக்கர், வள்ளம் – 4 படி கொண்டது.) ஒரு படி விதை விதைத்தால் அந்நிலத்திற்குப் போதும் என்பதாம். ‘ஒரு மிடா விதைப்பாடு’ என்பதும் இப்பொருள் குறிப்பதே. நாட்டில், அத்தகைய மண்வளமுள்ள விளை நிலங்கள் இருக்க வேண்டும் என்பதையே, ‘தள்ளா விளையுள் சேர்வது நாடு’ என்றார் வள்ளுவர்.
3. நீர் வளம்
இனி, நல்ல மண்வளமுடைய தப்பாது விளையும் விளை நிலங்கள் அமையப் பெறினும், அந்நில வளத்துக்கேற்ற நீர்வளம் அமையவேண்டும். ஒரு நாட்டில் எங்குப் பார்த்தாலும் ஏரி, குளம், குட்டை, கிணறு, பள்ளம், ஓடை, வாய்க்கால், சிற்றாறு, பேராறு என நீர்வளம் பொருந்தியிருக்க வேண்டும். விதை விதைத்து விட்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக் கூடாது. மழை நீர் ஒரு துளிக்கூட வீணாகாமல் விளை நிலத்திற்கே பயன்படும்படி செய்யவேண்டும். குடபுலவியனார் என்னும் புறநானூற்றுப் புலவர், நெடுஞ்செழியன் என்னும் பாண்டியனைப் பார்த்துக் கூறுவதைப் பாருங்கள்.
“செழியா. நீ இவ்வுலகில் உன் பெயர் விளங்க விரும்பினும், நின் பகைவரை வென்று வெற்றிச் சிறப்புடன் வாழவிரும்பினும், இவ்வுலகில் பொன்றாப்புகழை நிலை நாட்ட விரும்பினும், அவ்விருப்பம் கைகூடுதற்குரிய வழியினைக் கேட்பாயாக. உணவில்லாமல் மக்கள் உயிர் வாழ முடியாது. உணவு நிலத்தி லிருந்து கிடைக்கிறது. நிலம் நீர்வளமுள்ள போதே நன்கு விளையும். ஆகையால், மாற! விதைத்துவிட்டு வானை நோக்கும் புன்செய் நிலம் எவ்வளவு இருந்தாலும், அதனாற் பயனில்லை. ஆகையால், நிலந்தாழ்ந்த இடத்து நீர்நிலை பெருகும்படி செய். அதுதான் நீ விரும்பும் அம் மூன்றினையும் தரும்” (புறம் - 18) என்கின்றார். இது எத்துணைப் பொருள் பொதிந்த பொன்மொழி! நாட்டின் எந்தப் பக்கம் பார்த்தாலும் தண்ணென இருக்க வேண்டும்.
வள்ளுவர் இதனை, “இரு புனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் சேர்வது நாடு” (737) என்கிறார். புனல் - நீர். இருபுனல் - மழை நீரும் கிணற்று நீரும். வருபுனல் - மலையி லிருந்து வருகின்ற நீர் - ஆற்று நீர். நாட்டில் ஓங்கியுயர்ந்த பெரிய மலைகள் பல இருந்தால்தான் அம்மலைகளிலிருந்து ஆறுகள் தோன்றி வரும். வாய்ந்த மலை - ஆற்று வளம் தரும் மலை. மலை மிக உயர்ந்து மரங்களடர்ந்து இருப்பதனால் அங்கு மழை மிகுதியாகப் பெய்யும். மலை மாரிக்காலத்து உண்ட மழை நீரைத் தன்னிடத்து வைத்திருந்து கோடைக் காலத்து ஆற்று வழியாக நமக்குத் தருகிறது. தமிழ் நாட்டின் மேற்கிலும் வடக்கிலும் மேற்குத் தொடர்ச்சி மலையும் வடக்குத் தொடர்ச்சி மலையும் (கிழக்குத் தொடர்ச்சி) வானளாவ ஓங்கியுயர்ந்து, பல கல்தொலை நீண்டுள்ளன. காவிரி, பவானி, நொய்யல், அமராவதி, வையை, தாமிரபரணி முதலிய ஆறுகளெல்லாம் மேற்குத் தொடர்ச்சி மலையிலும் அதன் கிளை மலைகளிலும் தோன்றித் தமிழ்நாட்டை வளஞ் செய்கின்றன.
சோழ மன்னர்கள் காவிரிக்குக் கரை கட்டியும் அணை கட்டியும் கால்வாய்கள் வெட்டியும் சோழ நாட்டைச் சோறுடைய நாடாக்கினர். சேர நாடு மழை வளமுடையது. கொங்கு நாடு சிறந்த கிணற்று வளமுடையது. கொங்கு நாடு முன்பு வற்றாத நீரோடைகளால் வள மலிந்திருந்தது. அவை யெல்லாம் பிற்காலத்தே அழிக்கப்பட்டன. தமிழ்நாட்டுக்கு இன்று இன்னும் நீர் வளம் தேவையாக உள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் எண்ணிறந்த அருவிகள் தோன்றி வீணாகச் சென்று மேல் கடலில் கலக்கின்றன. அவற்றை யெல்லாம் கிழக்கே திருப்பினால் தமிழ்நாடு சிறந்த நீர்வளமுடைய நாடாகும். காவிரியைப் போல் வற்றா ஆறுகள் பல பாயும்படி செய்யலாம்.
மற்றொன்று, மேற்குப் பருவமழை பாலக்காட்டுக் கணவாயை அடுத்துள்ள தமிழ்நாட்டுப் பகுதியில் நன்கு பெய்கிறது. அக்கண வாயின் தெற்கிலும் வடக்கிலும் அப்பருவ மழை வரமுடியாமல் மேற்குத் தொடர்ச்சிமலை தடுத்து விடுகிறது. ஆகையால், பாலக்காட்டுக் கணவாயில் இரு பக்கமுள்ள மலையை வேண்டிய தூரம் வெட்டித் தாழச் செய்தால் மேற்குப் பருவமழை தமிழ்நாடு முழுவதும் நன்கு பெய்யும். என்னென்னவோ செயற்கருஞ் செயல்கள் செய்யும் இயந்திரங்கள் உள்ள இக்காலத்தே இதைச் செய்வது அரிய தொன்றன்று. ஆள்வோர் இப்பெருந் தொண்டினை மேற் கொள்ளுதல் வேண்டும். இதோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே ஒரு சோழன் செய்த செயற்கருஞ்செயலைப் பாருங்கள்.
காவிரியாறு முன்பு மைசூர் நாட்டின் வழியாய் நேர் கிழக்காகச் சென்றதாம். தென்புறம் பெரிய பாலை மலைத் தொடர் இருப்பதால் அது அவ்வாறு கிழக்கே ஓடிற்று. ஒரு சோழ மன்னன் தென்புறம் உள்ள மலையை வெட்டிக் காவிரியைத் தெற்கே திருப்பிவிட்டுச் சோழ நாட்டிற் பாயும் படி செய்தான். அவன் மலையை வெட்டித் தெற்கே திருப்பி விட்ட இடமே சிவசமுத்திர நீர்வீழ்ச்சி என்பது. இச்செயற் கருஞ்செயலினை,
மலைகொன்று பொன்னிக்கு வழிகண்ட சோழன்
வரராச ராசன்கை வாளென்ன வந்தே!
(- தக்கயாகப் பரணி)
என்று பாராட்டுகிறார் ஒட்டக்கூத்தர். கொன்று - வெட்டி. பொன்னி - காவிரி.
உணவுத் தட்டுதலின்றி மக்கள் உண்டு வாழ்வதற்கு வேண்டிய அளவு நிலம் விளைய வேண்டும். அவ்வாறு விளைவதற்கேற்ற வாறு நிலவளமும் நீர்வளமும் அமைய வேண்டும். அமையும்படி செய்ய வேண்டும். இதனையே வள்ளுவர், ‘தள்ளா விளையுள் சேர்வது நாடு’ என்றார். பழந்தமிழ் மக்கள் இக்குறிப்புப்படியே செய்து வந்தனர். ‘இப்பெருந் தொண்டைச் செய்வதே நாடாள் வோரின் முதல் வேலையாகும். இதற்குப் பிறகுதான் மற்ற அரசியல் வேலைகளைக் கவனிக்க வேண்டும்’ என ஆள்வோர்க்கும் அறிவுறுத்துதலாகும் ‘தள்ளா விளையுள்’ என்னும் குறிப்பு.
4. பசியும் பிணியும்
இனி, நாடு இருவகை வளமும் உடையதாயினும் அதன் பயன் கொண்டு வாழ வேண்டும். விளைநிலங்களில் மிகுதியாக விளைவிக்க வேண்டும். ‘யானை கட்டுந்தூறு வானமட்டும் போர் விழும்’ என்பது நாட்டுமொழி. ‘ஒரு பிடி துஞ்சும் இடம் எழுகளிறு புரக்கும் நாடு’ என்பது சங்கச் சான்றோர் தகவுரை. நிலம் என்னும் நல்லாள் நகும்படி, உழவர்கள் ‘இலம்’ என்று சோம்பி இருத்தல் கூடாது. உழவர்கள் மெய்ம்முயற்சியுடன் உழைத்து மிகுதியாக விளைவிக்க வேண்டும். உணவுப் பற்றாக்குறையினால் மக்கள் பசியால் வருந்தக் கூடாது. அத்தகைய நாடு நன்னாடாகாது. இதனையே வள்ளுவர், ‘உறுபசி சேராது இயல்வது நாடு’ என்றார். உறுபசி - மிக்க பசி. அதாவது நாட்டில் பலர் பசியால் வருந்துதல். நாட்டில் பசியென்னும் பாவி தலைகாட்டக் கூடாது. ‘தனியொரு வனுக் குண வில்லையெனில் சகத்தினை யழித்திடுவோம்’ (பாரதி) என்றதும் இக்கருத்துப் பற்றியே யாகும். உழவர்களுக்கு உதவி, உழவுத்தொழிலில் ஊக்கமுண்டாக்கி, உழவனைப்பெருக்கி, மிகுதியாக விளைவித்து, நாட்டில் உறுபசி அணுகாது பார்த்துக் கொள்வது ஆள்வோரின் கடமையாகும் என்பதே, ‘உறுபசி சேராது இயல்வது நாடு’ என்றதன் கருத்து.
மக்கள் பசியின்றி வாழ்ந்தால் மட்டும் போதாது; ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்றபடி, நாட்டு மக்கள் நோயின்றி வாழவேண்டும். நோய்க்கு இடங் கொடுக்கக் கூடாது. உண்ண உணவு நிரம்ப இருந்தும், உண்ண முடியாது வருந்தும் நோய்வாய்ப் பட்டோர்க்கு அவ்வுணவினாலாய பயன் என்ன? சர்க்கரை நோய் வந்தவர்கள் நல்லுணவாகிய நெல்லுணவையே உண்ண முடிவ தில்லை. நிரம்ப நெல் விளைந்தும் அன்னார்க்கு என்ன பயன்? இருமல் நோய் (க்ஷயரோகம்), மார்ச்சளி (ஆஸ்துமா) முதலிய நோயாளர்களுக்கு வாழ்க்கையில் உண்டாகும் இன்பந்தான் என்ன? அவர்கள் வாழ்வது போலத்தானே வாழ்ந்து வருகிறார்கள்? தொழுநோய் (குஷ்டம்) வந்தவரின் பிறப்பின் பயன்தான் என்னவோ? பெரியம்மை, கக்கல் கழிச்சல் (வாந்திபேதி) பெருவாரி நோய் (பிளேக்) முதலிய தொத்து நோய்களால் மக்கள் படுந் தொல்லையும் துயரமுங்கொஞ்ச நஞ்சமா? எத்தனையோ வகை வகையான காய்ச்சல்கள் வேறு இப்போது வருகின்றன. நாட்டுக்குள் எவ்வகையான ஒரு நோயும் வராதபடி ஆள்வோர் செய்ய வேண்டும். இதனையே வள்ளுவர், ‘ஓவாப்பிணி சேராது இயல்வது நாடு’ என்றார். ‘உறுபசியும் ஓவாப் பிணியும்’ இல்லாது நாட்டைப் பாதுகாப்பது ஆள்வோரின் முதற்கடமை யாகும். ஓவாப்பிணி - ஒழியாத, தீராத நோய்.
நாடு நல்ல விளைநிலங்களை யுடையதாக அமைந்திருக்க வேண்டும். மிக்க நீர்வளம் பொருந்தியிருக்க வேண்டும். அவ்வாறு நிலவளமும் நீர்வளமும் நன்கு அமைந்திருந்தாலும் பயனில்லை. மிகுதியாக விளைவு விளைவிக்க வேண்டும். உணவுப் பற்றாக் குறையினால் மக்களைப் பசி என்னும் பாவி வருத்தக் கூடாது. மக்கள் நோயற்ற வாழ்வு வாழ வேண்டும். அடேயப்பா! நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக வள்ளுவர் எடுத்துக் கொண்ட முயற்சி எத்துணை அரும்பெரு முயற்சி! என்னே வள்ளுவர் பெருமானின் நாட்டன்பு! நாட்டு மக்கள் நல்வாழ்வில் வள்ளுவர் கொண்டுள்ள அக்கறைக்கும் அன்பின் பெருக்கினுக்கும் எதனை உவமை கூறுவது வள்ளுவர் போன்ற உள்ளமுடைய நல்லோர் பலர் இன்று நம் நாட்டுக்கு மிக மிகத் தேவை யுடையராவர்.
5. தக்காரும் செல்வரும்
இனி, நாடு நன்கு விளைந்து, நாட்டு மக்கள் உறுபசியும் ஓவாப் பிணியுமின்றி வாழ்வது மட்டும் வாழ்வெனப்படாது. மக்கள் நல்லொழுக்கமுடையராய் நல்வாழ்வு வாழ வேண்டும். தத்தம் தொழிலைத் தீமை கலவாமல் திறம்படச் செய்ய வேண்டும். அவ்வாறு நாட்டு மக்கள் வாழ, அன்னாரை அவ்வாறு வாழ்விக்கத் தக்க தகுதியுடையார் பலர் நாட்டில் இருக்க வேண்டுமல்லவா? இதனையே, ‘உறுபசியும் ஓவாப் பிணியும் சேராது, தள்ளா விளையுளும் தக்காரும் சேர்வது நாடு’ என்கின்றார் வள்ளுவர். தக்கார் - பொது நலம் புரியும் தகுதியுடைய பெரியார்கள். தகுதியுடையார் - தக்கார்.
இத் தக்கார், தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராய், நாட்டு மக்கட்கு நல்லறிவு புகட்டி, அவர்களை நல்வாழ்வு வாழச் செய்வதே தமது வாழ்க்கைப் பயனெனக் கொண்டவர். ‘இத்தக் காராலேயே உலகம் நடைபெற்று வருகிறது’ என்கின்றார் புறநானூற்றுப் புலவரொருவர் (புறம் 182.) இந்நாட்டு மக்களின் விடுதலைக்காகவே வாழ்ந்து வந்த காந்தி யடிகள் போன்றாரே இத்தக்காராவர். இத்தக்கார் அந்தணர், ஐயர், சான்றோர், பெரியார், நீத்தார் எனப் பல பெயர்களால் சிறப்பித்துக் கூறப்படு கின்றனர். அந்தணர் - அருளுள்ள முடையவர். ஐயர் – பெருமை யுடையவர். பாட்டனை ஐயன் என்பது இப்பொருள் குறிப்பதே. நீத்தார் - துறவுள்ள முடையவர். தன்னல முதலிய தீய ஒழுக்கங் களை நீத்தார் ‘நீத்தார் பெருமை’ என்னும் அதிகாரத்தில், இத் தக்கார் பெருமையைப்பிரித்துக் கூறுகிறார் வள்ளுவர்.
‘பெரியாரைத் துணைக் கோடல்’, ‘பெரியாரைப் பிழை யாமை’ என்னும் திருக்குறள் அதிகாரங்களால் அரசர்கள் இத் தக்காரின் ஆணைப்படியே முன்பு நாடாண்டு வந்தனர் என்பது புலனாகின்றது. பேரரசர்களேயாயினும் தகாதன செய்யப் புகின் இடித்துரைத்து நல்வழிப்படுத்தும் அத்தகு சிறப்புடையவர் இத்தக்கார். பொது மக்கள் இவர்கள் போட்ட கோட்டைத் தாண்டமாட்டார்கள். இவர்களாலேயே நாட்டு மக்களின் நல்வாழ்வு இனிது. நடைபெற்று வந்தமையால், ‘தக்காரும் சேர்வது நாடு’ என்றார் வள்ளுவர். பழந்தமிழ்ப் புலவர்களெல்லாம் அத்தகை யோரே யாவர். அத்தகைய தக்கார் பலர் தமிழ் நாட்டில் தோன்றுவாராக.
இனித் தள்ளா விளையுள் அமைந்து, மக்கள் பசி, பிணியின்றி, தக்காரின் தகவுரையால் இனிது வாழ்ந்து வரினும், அரசியலும் மற்றப் பொதுப்பணிகளும் இனிது நடைபெறச் செல்வம் வேண்டும். ‘பொருளில்லார்க் கிவ்வுல கில்லை’ (குறள் - 247) யல்லவா? அச் செல்வமும் கொடுக்கக் கொடுக்கக் குறையாத செல்வமாக இருக்க வேண்டும். அப்போதுதானே நாட்டுக்குத் தேவையான எல்லாம் குறைவறச் செய்ய முடியும்? இதனையே வள்ளுவர், ‘தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு’ என்கின்றார்.
ஒவ்வொரு குடும்பத்தினரும் ஏதாவதொரு தொழில் செய்து தத்தம் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். தன் மட்டுந் தானாக வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்தினரும் இவ்வாறு தனித்தனி வாழ்ந்து வந்தால் போதுமா? இவ்வாறு வாழும் நாடு இனிது வாழ்ந்து வருகிறது எனப் பொருள் படுமா? பள்ளிக்கூடம், கல்லூரி, மருத்துவச் சாலை முதலிய பொதுப் பணிகள் செய்யத் தனிப்பட்ட சில தாழ்விலாச் செல்வர்கள் வேண்டுமல்லவா? தன் மட்டுந் தானாக வாழ்ந்து வரும் பொது மக்களால் நூறாயிரம், பத்து நூறாயிரம் செலவு செய்து பெரிய பள்ளிக்கூடங்கள், மருத்துவ சாலைகள் முதலியன கட்ட முடியுமா? ஒவ்வோர் ஊரிலும் செல்வர் சிலர் இருந்தால் தானே ஊர்ப்பொதுப்பணிகள் நடை பெறும்? மாரிக் காலத்தில் உட்கொண்ட மழைநீரைக் கோடைக் காலத்தில் உதவி நாட்டை நீர்வளமுறச் செய்யும் மலைகள் இல்லாவிட்டால் வற்றாத ஆறுகள் இல்லை. ஒரு நாட்டிற்கு மலை எப்படியோ அப்படியே செல்வரும், வருவாயுள்ளபோது பணத்தைச் சேர்த்து வைத்து மற்றபோது நாட்டு மக்களுக்கு உதவுதல் செல்வர்தம் கடமையாகும். செல்வர்கள் அருளுள்ளமும் கொடைக் குணமும் நாட்டு நலத்தின் அக்கறையும் உடைய வர்களாய் இருத்தல் வேண்டும். இரக்க மற்றவராய், ஈகைக் குணமிலராய், ‘நமக்கென்ன யாரோ எப்படியோ போகட்டும்’ என்னும் நற்பண்பில்லாதவராய் இருத்தல் கூடாது.
எல்லோரும் செல்வராக முடியாது. ஒரு சிலர்தான் செல்வராக முடியும். அவருள்ளும் மிகச் சிலர்தான் தாழ்விலாச் செல்வராக முடியும். அத்தகைய செல்வர்கள் ‘நம் செல்வத்தை நாம் மட்டும் பயன்படுத்தினால் போதாது. நாம் மட்டும் பயன் படுத்த இவ்வளவு செல்வம் வேண்டியதில்லை. ஓரளவு இருந்தால் போதும். பிறர்க்குப் பயன்படுத்துவதே செல்வத்துப் பயன். ’செல்வத்துப் பயனே ஈதல்’ என்பது ஆன்றோர் அறவுரை யன்றோ? பகுத்துண்டு பல்லுயிரோம் புதல் வேண்டும். நாடு வாழ் மக்களின் வாழ்வியல் இனிது நடைபெற நமது செல்வம் பயன்பட வேண்டும். பயன்படுத்த வேண்டும் என்னும் உண்மையுணர்ந்தவர்களாய் இருத்தல் வேண்டும். உடுக்கை இழந்தவன் கைபோலத் தாமாக முன் வந்து பொதுப்பணிகள் செய்தல் வேண்டும். பச்சையப்ப முதலியார், அரசர் அண்ணா மலைச் செட்டியார், டாக்டர் அழகப்பச் செட்டியார், கோவை கங்கா நாயுடு அறநிலையத்தார் முதலிய தாழ்விலாச் செல்வர்கள் போன்று தம் செல்வத்தைப் பொது மக்கட்குப் பயன்படச் செய்தல் வேண்டும். இதையே வள்ளுவர், ஒப்புரவறிதல் என்றார். ஒப்புரவறிதலாவது – பொதுமக்கள் வாழ்க்கை முட்டின்றி நடத்தற்கேற்ற பொதுப் பணிகள் செய்ய வேண்டும் என்பதைச் செல்வர்கள் அறிதல்; அறிந்து செய்தல். அத்தகைய செல்வர்களால்தான் பொது மக்களின் வாழ்க்கைத் தேர் தங்குதடையின்றி இனிது செல்லு மாகையால், ‘தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு’ என்றார்.
மிகமிகக் குறைவாக மக்களிருந்த வள்ளுவர் காலத்தி லேயே ஒரு நாட்டுக்குத் தாழ்விலாச் செல்வர்கள் தேவைப்படும் போது, இன்று எத்துணைத் தேவை என்பதை உணராதவர் களே, ‘பணக்காரர்கள் ஒழிக’ எனப் பயனில் சொல் பாராட்டுவர். நாட்டு மக்கள் எல்லோரும் உண்டுடுத்து இனிது வாழும்படி செய்ய வேண்டுமே யன்றிப் பணக்காரர்கள் கூடாது என்பது நாட்டு நலமாகாது. ‘நாட்டிலுள்ள ஏரி, அணைகளை யெல்லாம் உடைத்து விட வேண்டும்’ என்பது போன்றதே ‘பணக்காரர்கள் ஒழிக’ என்பதும் ஏரி அணைகளை உடைத்துவிட்டால் நெல் விளையாது. பணக்காரர்களை ஒழித்துவிட்டால் பொதுப்பணிகள் நடைப் பெறா. மேட்டு நிலம் இருந்தால்தானே பள்ளத்திற்குத் தண்ணீர் வரும்? பள்ளத்தில் நீர் தேங்கி நின்றால் தானே விளை நிலத்திற்கு நீர் பாயும்? இவ்வுண்மையை உணர வேண்டும். நாட்டு முன் னேற்றத்தில் நாட்டு மக்கள் நல் வாழ்வில் அக்கறையுள்ள தாழ்விலாச் செல்வர்கள் நாட்டுக்கு மிகமிகத் தேவையாவர். அத்தகைய செல்வர்கள் நம் நாட்டில் பெருகுக!
6. பல்குழுவும் கொல்குறும்பும்
இனி உறுபசியும் ஓவாப்பிணியுமின்றி, தக்காரும் தாழ் விலாச் செல்வரும் சேர்ந்திருக்கினும், நாட்டு மக்களை நல்வாழ்வு வாழ விடாமல் நலிவு செய்வனவும் சில உண்டு. ஊரில் செல்வாக்குள்ள ஒரு சிலர், தங்கள் தலைமையின் கீழ் ஊர்ப் பொது மக்களை வெவ்வேறாகப் பிரித்து வைத்துக் கொண்டு, ஊரைக் கெடுக்கும் ஊர்க்கட்சிகள் இல்லாதிருத்தல் வேண்டும். இக்கட்சிகள் இன்னும் பெரும்பாலும் எல்லா ஊர்களிலும் இருந்துதான் வருகின்றன. தேர்தல் காலத்தில் இவை வளம்பெற்று வளர்ந்து விடுகின்றன. இவை ஊரின் ஒற்றுமையைக் குலைத்துப் பகையை வளர்த்து விடுகின்றன. எத்தகைய கட்டுப்பாடுடைய ஊரும் இக்கட்சி தோன்றினால் சீரழிந்து சின்னா பின்னப்பட்டுப் போய்விடும். இக்கட்சிகளால் பெரும்பாலான ஏழைப் பொது மக்கள் ஒரு சிலரின் கைப் பாவைகளாகிப் பல வகையான தொல்லைகட்காளாகின்றனர். இக்கட்சிகளால் ஒன்றுமறியாத அப்பாவிப் பொதுமக்கள் அடிதடியும் கலகமும் கொள்ளையும் கொலையுங்கூடச் செய்து கொள்கின்றனர்.
இக் கட்சிகள் இல்லாமல் ஊர் மக்கள் ஒரே கட்சியாக ஒன்றுபட்டு வாழவேண்டும். ஊரில் கட்சிகளைத் தோற்றுவித்து, அவற்றால் வாழ்க்கை நடத்தும் ஒரு சில கீழ்மக்களால் ஏற்படுவது இக்கட்சி. இக்கட்சி சில வேளையில் வகுப்புக் கட்சியாக மாறிவிடுவதும் உண்டு. இதனையே வள்ளுவர், ‘பல் குழுவும் இல்லது நாடு’ என்கின்றார். குழு – கட்சி. பல் குழு – ஓருரில் பல கட்சிகள். ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக் கெளிது’ என்னும் பழமொழியின் கருத்தை யுணர்ந்து ஊரில் கட்சிகள் தோன்றவிடாமல் ஊர் மக்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும். ஊர் மக்கட்கு ஊர்ப்பற்று உண்டாக வேண்டும். எல்லாத் தமிழர்க்கும் ‘நாம் தமிழினம்’ என்னும் இனவுணர்ச்சி ஏற்பட வேண்டும். ‘இஃதே பல்குழு இல்லது நாடு’ என்ற வள்ளுவர் நோக்கமாகும்.
இனி இக்கட்சிகள் போலவே நாட்டில் வழிபறிப்போர், கள்வர் முதலியோர் இல்லாதிருத்தல் வேண்டும். இவர்கள் இல்லாமல் இருக்கும்படி செய்வது ஆள்வோர் கடமையாகும். இவர்களை வள்ளுவர், ‘பாழ் செய்யும் உட்பகை’ என்கிறார். பாழ் செய்யும் என்னும் அடைமொழியால், இவர்களால் நாட்டு மக்கள் படும் தொல்லைகட்கு வள்ளுவர் காட்டும் இரக்கம் விளங்குகிறதல்லவா?
ஊர்க் கட்சி, உட்பகை இவற்றைவிடக் கொடியது, பேரரசர்க் கெதிராகச் சிற்றரசர் போர் தொடுப்பது. அதனை, ‘வேந்தலைக்கும் கொல் குறும்பு’ என்கின்றார் வள்ளுவர். குறும்பு -சிற்றரசர். ஆனால், இன்று பேரரசும் சிற்றரசும் இல்லை. நாட்டில் மக்களாட்சி என்னும் கட்சியாட்சி நடைபெறுகிறது. பெரும் பான்மையாகத் தேர்தலில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சிக்கு வரும். அவ்வாறு பெரும்பான்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளும் கட்சி நாட்டுக்கு நல்லது செய்ய முன் வந்தாற் கூடச் சிறுபான்மைக் கட்சியினர், அதாவது எதிர்க் கட்சியினர் அதை எதிர்த்து நாட்டு நலத்தைக் கெடுக்கக் கூடாது. அப்பெரும் பான்மைக் கட்சி ஆட்சியில் உள்ள வரையிலும் அது செய்யும் நல்ல திட்டங்களைப் போற்ற வேண்டும். தீமை ஏதாவது செய்ய முற்பட்டால் அதை எடுத்துக் காட்டி இடித்துரைத்து அத் தீமையைச் செய்யாமல் தடுக்க வேண்டும். இஃதே மக்களாட்சியில், கட்சியாட்சியில் எதிர்க்கட்சிகளின் கடமையாகும். ‘வேந்தலைக்கும் கொல் குறும்பு இல்லது நாடு’ என்னும் வள்ளுவர் கூற்றை, இன்றைய ஆட்சி நிலைக்கேற்ப, ‘ஆளுங்கட்சி செய்யும் நல்லதை எதிர்க்கும் எதிர்க்கட்சி இல்லது நாடு’ எனக் கொள்ளுதல் வேண்டும்.
நாடு நிலவளமும், நீர் வளமும் பொருந்தியிருக்க வேண்டும். விளைவு மிகுதியாக விளைய வேண்டும். மக்கள் பசியும், பிணியும் இன்றி இனிது இன்புற்று வாழ வேண்டும். நாட்டில் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் மிகுதியாக இருக்க வேண்டும். பகைவர் படையெடுக்காமலும், கள்வர் முதலியோர் இல்லாமலும், வலியோர் மெலியோரை நலியாமலும் அரசன் காக்க வேண்டும். இவை நாட்டிற்கு அணியாகும் என்று நல் நாட்டின் இலக்கணங் கூறுகின்றார் வள்ளுவர். நம் நாட்டை அத்தகைய நன்னாடாக்க முயல்வோமாக, வாழ்க வள்ளுவர் கண்ட வளமார் தமிழ்நாடு!
இயற்கையின் எழுச்சி
1. இயற்கைக் காட்சி
இயல்பாகவே நமது மனம் ஏதாவதோர் இயற்கைக் காட்சியினைக் கண்டு களிக்க விரும்புகிறது. ஓரழகிய காட்சி யினைக் கண்டால் அதனை விட்டு வர மனம் விரும்புவ தில்லை. ஏன் மனத்தின்மேல் வீண் பழி சுமத்த வேண்டும்? மனமா காண்கிறது? காட்சி கண்ணின் தொழிலல்லவா? கண்ட காட்சியினை விட்டுவரக் கண்கள் விரும்பாமையால் நெடுநேரம் கால்கடுக்கப் பார்த்துக் கொண்டே நிற்கின்றோம். பசியாவது கூடத் தெரிவதில்லை. “செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்” (412) என்று வள்ளுவர் கேள்வியின் பத்தின் சிறப்பினைக் கூறுகிறார். கேள்வியின் பத்தினும் காட்சியின்பம் சிறந்ததாகும். கண்ணுக்கு உணவில்லாதபோது தான் சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும். கண்காட்சி யின்பத்தில் மூழ்கிக் களித்துக் கொண்டிருக்கும் போது பசியாவது எப்படித் தெரியும்? மற்றையின்பத்தை விடக் காட்சியின்பமே சிறந்ததாகும். இதனாற்றான் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புலன்களுள், மற்றப் புலன்களைப் பற்றிப் பேசும்போது, தொட்டுப் பார், கேட்டுப் பார், மோந்து பார், தின்று பார் எனக் கட்புலனோடு சேர்த்தே பேசுகிறோம். பார்த்தல் - கண்ணின் புலன். மக்களின் இக் காட்சியின்பச் சிறப்பினை அறிந்தே, நகர் மன்றத்தாரும் பிறரும் செயற்கைப் பொருட்காட்சி நடத்தி வருகின்றனர்.
சின்னஞ் சிறிய சிற்றெறும்புகள் ஒன்று கூடிக் கம்பு, சோளம், அரிசி முதலியவற்றை வாயில் கவ்விக்கொண்டு வரிசை வரிசையாக ஊர்ந்து செல்லுங் காட்சியினைக் கண்டு களியாதார் யார்? தன்னைவிடப் பல மடங்கு பெரிய ஓர் அரிசியைத் தனது சிறிய வாயினால் கவ்வி யெடுத்துக் கொண்டு ஒரு சிற்றெறும்பு செல்வதைக் கண்டு, ஏன்? சிலபோது அவ்வரிசி நிலத்தில் படாது அப்படியே தூக்கிக் கொண்டு போவதைக் கண்டு, அவ் வெறும்பின் வன்மையினையும், உள்ளத் திண்மையினையும் வியந்த வண்ணம் தன்னை மறந்து அப்படியே பார்த்துக் கொண்டு இராதார் யார்?
அதே எறும்புகள் பல்லாயிரக் கணக்கில் ஒன்று கூடி, ‘இப்படிச் செய் அப்படிச் செய்’ என்று ஏவுவாரின்றி, ஒவ்வொன்றும் தன் பொறுப்பினையுணர்ந்து கடமையுணர்ச்சி யுடன், வளைக் குள்ளிருந்து வாயினால் மண்ணைக் கவ்விக் கொண்டு வந்து மேலே போட்டுவிட்டுப் போட்டுவிட்டு விரைந்து விரைந்து செல்லுங் காட்சி காண்போர் கண்ணையும் கருத்தையும் கவ்விக் கொள்ளாமலா இருக்கும்? சோம்பலின்மை, சுறுசுறுப்பு, பொறுப் புணர்ச்சி, கூட்டுறவு, ஒற்றுமை, ஒப்புரவு செய்தல் முதலிய வற்றிற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் எறும்புகள் காட்சியின் பத்தினாலும் நம்மைக் களிப்பிக்கின்றன அல்லவா? இத்தகைய இயற்கைக் காட்சிகள் உலகில் எத்தனை யெத்தனையோ!
இத்தகைய இயற்கைக் காட்சிகளில் இளமையிலிருந்தே ஈடுபாடுடையோர்க்குக் கவியுள்ளம் தானாகவே அமையு மென்பது பொதுவான நம்பிக்கை. நம்பிக்கை யென்ன? உண்மையில் இயற்கைக் காட்சியே புலமையின் பிறப்பிடம். கற்பனையின் ஊற்று; கவித் திறத்தின் அடிப்படை யெனலாம். இயற்கைக் காட்சிகள் இல்லையேல் கவிக்குப் பொருளில்லை; கருத்துக்கு விருந்தில்லை.
பழந்தமிழ்ப் புலவர்களெல்லாம் இயற்கைக் காட்சியில் எத்தகைய ஈடுபாடுடையவர் என்பதை அவர்களால் செய்யப் பட்ட பழந்தமிழ் நூல்களில் பரக்கக் காணலாம். புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துப் பாட்டு முதலிய சங்க நூல்களைத் திறந்தால் இயற்கைக் காட்சி இல்லாத இடமே இருத்தல் அரிதாகும். அத்தகைய இயற்கைக் காட்சிகளை நேரில் கண்டு களிக்கச் சிறந்த புலமை வேண்டும். புலவர் காணும் காட்சியைப் புலமையில்லாதார் காணமுடியாது. ஒரே ஒரு காட்சியைப் புலமையுடையார் காண்பது வேறு; புலமையில்லாதார் காண்பது வேறாகும். எனவே இயற்கைக் காட்சியை நேரில் கண்டு களிப்பதைவிட, புலவர் பெருமக்கள் கண்டு களித்துப் பாடல்களில் பெய்து வைத்திருக்கும் இலக்கியக் காட்சியே அறிந்து இன்புறுதற் கேற்ற சிறந்த காட்சியாகும்.
முதலில் குறிஞ்சி நிலம் எனப்படும் மலைக்குச் செல்வோம். இயற்கையிலேயே மலைக் காட்சி இன்பந் தருவ தொன்றாகும். மலையின் உயர்ச்சி முதற்காட்சியாகும். அடுத்தது மலைவாழ் பொருட்காட்சி. இதோ அக்காட்சி:
தமக்கு நீருதவிய நீல வானுக்குப் பூவுங் காயுங் கனியும் உதவுவதுபோல் வானுற ஓங்கி வளர்ந்த பல் வகை மரங்கள், பெரியாரைத் துணைக் கொண்டு முன்னேற முயலும் சிறியார் போல வானுயர் மரங்களைப் பற்றியேறும் பல்வகைக் கொடிகள், தலைவர்க்கு அடங்கி நடக்கும் தொண்டர்கள் போல அம் மரங்களின் கீழ்த் தாழ்ந்து பொலியும் பல்வகைச் செடிகள், இயற்கை யெழிலைக் கண்டு களிப்போரின் அடி வருந்தாமல் இருக்கும் பொருட்டு விரித்த பச்சைப் பட்டுக் கம்பளம் போன்ற பல்வகைப் பசும்புற்கள், ‘வாருங்கள், எமது இயற்கை எழிலினை வந்து பாருங்கள்’ எனக் கைகாட்டி வரவேற்பது போல அசையுங் கொத்துக்களில் பூத்துப் பொலிவுடன் விளங்கும் நறுமணங் கமழும் பன்னிற மலர்கள், ‘செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும்’ தமிழர் தனிப்பண்பாட்டினைப் பயில்வது போல, ‘உண்ணுங்கள், உண்ணுங்கள்’ எனக் கிளைகளாகிய கைகளால் ஏந்தித் தாழ்த்துப் பிடித்திருக்கும் நல்லோர் உள்ளம்போல் கனிந்த இன் சுவைக்கனிகள்! தென்காலின் மென்சாமரம்! என்னே இயற்கையின் எழில் நலம்! மலையருவிகளின் முழவோசை, வான்படர் வேயின் குழலோசை, புள்ளினங்களின் இன்னிசை, பொறி வண்டுகளின் பின்னிசை, நனி விலங்குகளின் நடமாட்டம். இயற்கையரசியின் கொலு வீற்றிருக்கைச் சிறப்பே சிறப்பு!
2. யானையும் குரங்கும்
இத்தகைய இயற்கை வனப்பினையுடைய மலையின் ஒருபக்கம் ஓர் அருவி ஓடுகிறது. ஓர் ஆண் யானை தன் பிடியொடு கன்றையழைத்துக் கொண்டு அங்கு வந்தது. கன்றைக் கரைமேல் நிறுத்திவிட்டு அக்களிறும் பிடியும் அருவியாடின. தன் தாயும் தந்தையும் நீராடுவதைக் கண்டு களித்துக்கொண்டு கரைமேல் நின்றது அக் கரிக்கன்று. தாயும் தந்தையும் குளித்துக் கொண்டு வந்து தம் அரும்பெறல் சேயை எடுத்துக் கொண்டு போய்த் தேய்த்துத் தேய்த்துக் குளிப்பாட்டின. அக் குழக்கன்று குளித்துக் களித்தது. அவ்வருவிக் கரையில் ஒரு யாமரம் வானுற ஓங்கி வளம் பெற வளர்ந்திருந்தது. யாவின் இலை யானைக்கு விருப்பமான உணவு. அக்களிறு யாக்கொத்துக்களை ஒடித்துப் பிடிக்குக் கொடுத்தது. பிடி தன் பிள்ளைக்கு ஊட்டியது. என்னே தாயன்பு! பின்னர் அக்களிறும் பிடியும் தம் காதற் குழவியை முன்னும் பின்னும் பிடித்துத் தூக்கித் தாலாட்டின.
பின் அம் மூன்றும் அங்கு நின்றும் சென்றன. செல்லும் வழியில் ஒரு பாறை குறுக்கிட்டது. அப்பாறை கொஞ்சம் சாய்ந்த செங்குத்தாக இருந்தது. அப்பாறைமேல் ஏறித்தான் அப்புறம் செல்ல வேண்டும். அக்களிறு அப்பாறைமேல் ஏறிவிட்டது. ஆனால் பிடியோ ஏறியேறிப் பார்த்தது. எவ்வள வோ முயன்றும் அதனால் ஏற முடியவில்லை. தாயே ஏற முடியவில்லையென்றால் அதன் இளஞ்சேயால் எங்ஙனம் ஏறமுடியும்? அக் குழக்கன்று தாய் ஏற முடியாமல் தவிக்குங் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்றது. அது கண்ட களிறு மிகவும் வருந்திற்று. ஆனால், அது வருந்திக்கொண்டே சும்மா இருக்கவில்லை. அது காலை உதைத்துக் கொடுத்து நின்று தன் கையை நீட்டிப் பிடியின் கையைப் பிடித்து மேலே தூக்கிற்று. பிடி மெதுவாகப் பாறையின் மேலே ஏறிற்று. ஆனால் அக்கரிக்கன்று தந்தை இழுக்கத் தாய் மேலே ஏறுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கவில்லை. தாயின் வாலைப் பிடித்துக்கொண்டு அக்கன்றும் மேலே ஏறிற்று. இது கண்டு களிக்கக் கூடிய ஒரு கண்கொள்ளாக் காட்சியல்லவா? இதை ஓர் ஓவியன் கண்டால் சும்மாவா இருப்பான்?
இதோ இன்னொரு வியத்தகு காட்சி: சில மரந்தாவும் மந்திகள் மலைச்சாரலின் ஒரு பக்கம் மரத்துக்கு மரம் தாவிச் சென்றன. வழியில் ஓர் அருவி குறுக்கிட்டது. அவ் வருவியைத் தாண்டி அக்கரைக்குச் செல்ல அவை முயன்றன. ஆனால், அருவி அகன்றிருந்தமையால் அம்முயற்சி முற்றுப் பெறவில்லை. ஆனால், அக் குரங்குகள் சும்மா வந்த வழியே திரும்பிப் போகவில்லை. அருவியைக் கடக்க ஒரு தந்திரம் செய்தன. என்ன அது?
அக்குரங்குகள், அருவியின் இரு கரையிலும் நேருக்கு நேராக உயர்ந்த மரங்கள் உள்ள இடத்திற்குச் சென்றன. ஒன்று அம்மரத்தின்மேல் ஏறி, அருவிப் பக்கஞ் சாய்ந்திருந்த ஒரு கிளைக்குச் சென்று அதன் மேல் குப்புறப்படுத்துக் கொண்டது. மற்றொன்று அருகில் சென்றது. சென்றதன் வாலை அது கெட்டி யாகப் பிடித்துக்கொண்டது. இவ்வாறே எல்லாக் குரங்குகளும் ஒன்றையொன்று பிடித்துக்கொண்ட பிறகு, கடைசியில் இருந்த குரங்கு கிளையை விட்டுத் தலை கீழாய்த் தொங்கிற்று. அவ்வாறே எல்லாக் குரங்குகளும் மெதுவாகக் கிளையை விட்டு விட்டுச் சங்கிலி போலத் தொங்கித் தூரியாடின. அப்படி ஆடும்போது கடைசியில் உள்ள குரங்கு அருவியின் அக்கரையில் உள்ள மரத்தின் கிளையை எட்டிப் பிடித்துக் கொண்டது. பின் அது மெதுவாக மேலே சென்று கிளையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. அழகான குரங்குப்பாலம் கட்டப்பட்டு விட்டது. பின்னர் இக்கரையிலுள்ள மரக்கிளையில் இருந்த குரங்கு கிளையை விட்டு விட்டது. குரங்குச் சங்கிலி அக்கரையில் உள்ள மரக்கிளையில் தொங்கிற்று. பின் ஒவ்வொன்றாக மரக்கிளை களைப் பிடித்துக் கொண்டன. பார்த்தீர்களா அருவி தாண்டிய குரங்குகளின் தந்திரத்தை! இது எவ்வளவு வியத்தகு செயற்கருஞ் செயல்! கட்கினிய காட்சி! கண்ணும் கருத்தும் ஒருங்கு களிக்குங் காட்சியன்றோ இக்காட்சி!
இனி வேறு நிலத்திற்குச் செல்வோம். ஒரு கடற்கரை. அதை அடுத்து வயல். கடற்கரை - நெய்தல் நிலம் எனப்படும். வயல் - மருத நிலம் எனப்படும். இங்கு நெய்தலும் மருதமும் ஒன்றை யொன்று வேறு பிரித்தறிய முடியாதபடி அமைந்திருந்தன. மருதமும் நெய்தலும் மயங்கிக் கிடந்தன எனலாம். அவ்விரு நிலமும், ‘நீரும் நிழலும் நிலம் பொதியும் நெற்கட்டும்’ என்றபடி வளம் பொருந்தியிருந்தன.
வயலில் நெல்லும் கரும்பும் செழித்து வளர்ந்திருந்தன. வயலோரத்தில் தென்னை, கமுகு, பலா முதலிய மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. தெங்கிலும் கமுகிலும் காய்கள் குலைகுலையாகத் தொங்கின. பலாவில் பழங்கள் பழுத்து வெடித்துச் சுளைகளில் தேனொழுகிற்று. அம்மரங்களில் குரங்குகள் அங்குமிங்கும் தாவித்தாவி விளையாடிக் கொண் டிருந்தன. இரு குரங்கு பலாச்சுளைகளை எடுத்தெடுத்துத் தின்றது. அது கண்ட வயலை உழுது கொண்டிருந்த உழவன், வயலில் கிடந்த சங்கை எடுத்து அக்குரங்கை எறிந்தான்?. குரங்குக்கு என்ன கையா இல்லை? அது பலாமரத்திலிருந்து தென்னை மரத்திற்குத் தாவினது. அது இளநீர்க் காயைப் பறித்துத் தன் சங்கிட்டெறிந்த உழவனைப் பார்த்து எறிந்தது. உழவன் அக்குரங்கின் செயலைக் கண்டு வியந்த வண்ணம் ஏரோட்டினான்.
3. கானற்காட்சி
கடற்கரைக்குச் செல்வோம். கடற்கரைக்குக் கானல் என்ற பெயரும் உண்டு. அக்கானலில் புன்னை மரங்கள் பூத்துப் பொலிந்திருந்தன. தாழை மரங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து ‘எங்களைப் போல நீங்களும் இணை பிரியாமல் ஒன்று பட்டு வாழுங்கள்’ என்று அங்குச் செல்லும் மக்கட்கு அறிவுறுத்துவது போலக் காட்சியளித்தன.
அங்கே நெய்தல் நில மகளிர் சிலர் உலர்ந்த மீனை வெயிலில் காயவைத்து விட்டுத் தாழை விழுதினால் கட்டப் பட்ட ஊசலில் அமர்ந்து கொஞ்சநேரம் இன்பத் தமிழ்பாடி யாடினர். பின்னர் அத்தாழை நிழலில் இருந்து கடல் வளம் பாடிக்கொண்டு, அம்மானையாடினர். அதன்பின் கழங்காடிக் கொண்டு, காய வைத்துள்ள மீனைப் புள்ளினம் கவராமல் காவல் காத்து வந்தனர்.
ஓர் எருமை வயலில் மேய்ந்து விட்டு வந்து அக்கடற் கரையிலிருந்த ஒரு புன்னை மரத்து நிழலில் கொஞ்ச நேரம் படுத்திருந்தது. பின் எழுந்து வயலுக்கு மேயச் சென்றது அவ் வெருமையின் மேல் புன்னையின் நறுந்தாது விழுந்து இரும்பு போலக் கருநிறமுள்ள அவ்வெருமை பொன்போல மஞ்சள் நிறமாகத் தோன்றியது. கடற்காக்கை யொன்று வந்து அவ்வெரு மையின் மேல் உட்கார்ந்து தன் கூறிய அலகினால் சிறகைக் கோதிக் கொண்டிருந்தது. அப்போது நாரையின் ஒரு வகையான வண்டானம் என்னும் பறவை யொன்று வந்து காய்ந்து கொண்டிருந்த மீனைத் தின்றது. கழலாடிக் கொண்டிருந்த ஒருத்தி தன் காதில் அணிந்திருந்த ஒரு குழையைக் கழற்றி அப்பறவையின் மீது எறிந்தாள். குறி தவறிவிட்டது. அவ்வண்டானம் பறந்து சென்றது. அக்குழை எருமையின்மீது உட்கார்ந்து இறகுலர்த்திக் கொண்டிருந்த அக்காக்கையின்மீது பட்டது. காக்கை ‘கா - கா’ என்று கத்திக் கொண்டு பறக்கமாட்டாமல் பறந்து சென்றது.
மருத நிலத்திலுள்ள தாரா என்னும் பறவையொன்று அக்கடற்கரைக்கு வந்தது. அங்கு ஒரு தாழம்பூ விரிந்தும் விரியாதும் நீண்டு எழிலுடன் விளங்கிற்று. அம்மலரின் நிழல் தரையின்மேல் அழகுடன் தோன்றிற்று. அதுகண்ட அத்தாரா, அந்நிழலைத் தன் பெட்டை என்று எண்ணி அதன் அருகில் சென்று, அன்போடு தன் அழகிய இறக்கைகளால் அந்நிழலைத் தழுவ முயன்றது. தாராவின் அறியாமையைக் கண்டு பக்கத்து வயலில் இருந்த ஆம்பல் மலர் வாய் விட்டுச் சிரித்தது. சிரித்த அவ்வாம்பல் மலரின் வாய் நிறைய அதன் அருகில் இருந்த கோங்கமரம் தன் மலரில் உள்ள பூந்தாதைக் கொட்டினது. அது கண்ட அக்கழங்காடு மகளிர் தாங்களும் தங்கள் ஆம்பல் போன்ற வாயைத் திறந்து சிரித்தனர்.
இதோ கடைசியாக ஒரு வியத்தகு காட்சி. வயலிலுள்ள அழகிய மெல்லிய வெண்மையான சிறகையுடைய ஒரு பெண் அன்னம் அக்கடற்கானலுக்கு வந்தது: அங்கு நறுமணங் கமழும் ஒரு தாழம்பூவைக் கண்டது; கண்டதும் அதற்குத் தன் குஞ்சின் நினைவு வந்தது; உடனே ஒரு பூவின் மடலை எடுத்தது; அதைத் தனது அழகிய குஞ்சு எனக் கொண்டு மடியின் மேல் வைத்துக் கொண்டு கொஞ்சியது; பின்பு அங்குக் கிடந்த ஒரு வலம்புரிச் சங்கை எடுத்துக் குவளை மலரில் நிரம்பியிருந்த தேனை மொண்டு, அதை அக்குஞ்சுக்குப் பாலாக வார்த்தது; பின்னர்ச் செழுமையாக மலர்ந்திருந்த நீண்ட தாமரைப் பூவின் இதழை விரித்து, அதன் மேல் தாழம்பூ மடலாகிய அக்குஞ்சைப் படுக்கவைத்துத் தாலாட்டித் தூங்க வைத்தது. என்னே தாயன்பு! அக்கழங்காடு மகளிர் ஆட்டத்தை நிறுத்திவிட்டு இக்காட்சியைக் கண்டு களித்த வண்ணம் இருந்தனர்.
தமிழிலக்கியச் சுவை, இலக்கிய இன்பம் என்பதெல்லாம் வீண்பேச்சன்று. இத்தகைய இயற்கை யின்பத்தை நுகர்ந்தவர் கூறும் உண்மையுரையேயாகும். ஓய்வு நேரங்களை வீணாக் காமல் பழந்தமிழ் இலக்கியங்களைக் கண்டு இன்புறுங்கள். இத்தகைய இன்பம் உலகில் வேறெதுவும் இல்லை.
தொல்காப்பியர் கால ஆட்சி முறை
1. அரசியல்
இன்று உலக அரசியற் கண்களெல்லாம் ஆட்சித் தலைவர்கள் இருவர் ஒன்று கூடும் கூட்டத்தைப் பற்றியே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றன; அரசியற் காதுகளெல்லாம் அவர்கள் ஒன்று கூடி என்ன பேசுகிறார்கள் என்பதையே உற்றுக் கேட்டுக் கொண்டிருக்கின்றன. உலக மக்களெல்லாம் இன்னு மோர் உலகப் பெரும் போர் உண்டாகாமல் இருக்க வேண்டும் என்று எண்ணிய வண்ணம் இருந்து வருகின்றனர். இன்று உலகிடை இதுபற்றிப் பேசாத நாவொன்றுமே இல்லை எனலாம்.
‘அமெரிக்க நாட்டுத் தலைவரும் இரசிய நாட்டுத் தலைவரும் ஒன்று கூடிப் பேசப் போகிறார்களாம். இரசிய நாட்டுத் தலைவர் அமெரிக்காவுக்குப் போகப் போகிறாராம்.’
‘அப்படியா!’
‘ஆமாம்; இரசிய நாட்டுத் தலைவர் அமெரிக்கா போய்ச் சேர்ந்துவிட்டனராம். அமெரிக்கா நாட்டுத் தலைவர் அவரை அன்போடு வரவேற்றனராம்; அளவளாவினராம்; இருவரும் மனம்விட்டுப் பேசிக் கொண்டார்களாம்.’
‘என்ன பேசினார்களோ? என்ன முடிவு செய்யப் போ கிறார்களோ? நல்ல முடிவு செய்ய வேண்டும். எப்படியாவது மூன்றாவது உலகப் பெரும் போர் உண்டாகாமல் இருக்க வேண்டும். அது அவர்கள் இருவரின் முடிவைப் பொறுத்தது தானே?’
‘ஆமாம்; அவ்விருவரும் ஒன்றுபட்டால் உலகம் ஒன்று பட்ட தாகத் தானே பொருள்! நல்ல முடிவே செய்வார்கள்!’
இதுதான் இன்று உலக மக்களின் பேச்செல்லாம்; எண்ண மெல்லாம்.
முன்னெல்லாம் மண்ணாசை காரணமாக, வலிமை காரணமாக, கொடுமை காரணமாக இரு நாட்டிடையே போருண்டாகும். இரு நாட்டரசரும் மறவரும் வெற்றியை விரும்பி ஒருவரை யொருவர் கொன்று குவிப்பர். அப்போர் இரு நாட்டோடு முடிந்துவிடும். வென்றவர் விளக்கமுறுவர். தோற்றவர் கலக்கமுறுவர்; அவ்வளவே அப்போரின் பயன்.
ஆனால், இன்று உலகிடை நடக்கப் பார்ப்பது, நடக்காம லிருக்க வேண்டும் என உலக மக்கள் விரும்புவது. அதற்காக நாட்டாட்சித் தலைவர்கள் ஒன்று கூடிப் பேசுவது, அத்தகைய போர்பற்றியன்று. இது, பொதுவுடைமை என்னும் அரசியற் கொள்கைக்கும், தனியுடைமை என்னும் அரசியற் கொள்கைக்கும் நேரும் போரேயாகும். இன்று உலக நாடுகளெல்லாம் இவ்விரு அரசியற் கொள்கைகளையும் சார்ந்து நின்றே போர் தொடுக்க முயலுகின்றன. எனவே, இவ்விரு அரசியற் கொள்கைகளும் ஒன்றுபட்டாலன்றி, ஒன்றையொன்று விழுங்கினாலன்றி இன்றைய நிலை மாறாது.
ஒரு காலத்தே வேலும் வாளும் வில்லுங் கொண்டு பொருது வந்தனர். அடுத்து வெடி கொண்டு சுட்டுக் கொண்டனர். இன்றோ அணுகுண்டுக் காலம். யானை, குதிரை, தேர், தானை என்பன நாற்பெரும் படை என்ற நிலை மாறி, தரைப்படை, கப்பற் படை, வானூர்திப் படை என்பன முப்பெரும் படை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு போர்க் கருவிகளும் போர்ப் படைகளும் மாறுதல் போலவே போர் முறையும் மாறுதலடைந்து கொண்டே தான் வருகிறது. இப்போர்முறை போலவே தான் அரசியல் முறையும் மாறிக் கொண்டே வருகிறது. அரசியல் வேறு பாட்டால் தான் பெரும்பாலும் போருண்டாகிறது.
புதிய புதிய அரசியற் கொள்கைகள் தோன்றிய காலம் இன்று நேற்றல்ல. ஒரே அரசியல் முறை என்றும் இருந்து வந்ததில்லை. காரல் மார்க்ஃச் போன்ற அரசியல் அறிஞர் களாலேயே புதிய அரசியல் முறைகள் கண்டு பிடிக்கப்பட வில்லை. பழைய முறைகளையே கிளறி எடுத்துப் புது மெருகிட்டு நாட்டு மக்களுக்குக் காட்டினார் மார்க்ஃச் போன்றார்.
இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே உலக அரசியல் வரலாற்றுப் பேராசிரியர் எனப் போற்றப்படும் கிரேக்க நாட்டுப் பெரியாரான சாக்கரட்டீஃச் என்பார், பலவகைப் பட்ட அரசியல் முறைகளைப் பற்றியும் ஆராய்ச்சி நடத்தியுள்ளார். அதையே தம் வாழ்வின் பயனாகக் கொண்டு வாழ்ந்து வந்த பெரியார் ஆவர் அவர். அதற்காகவே அவர் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டார். அவர் கிரேக்க நாட்டோடு விட்டுச் சென்ற அவ்வரசியல் முறைகளை - சாக்கரட்டீஃசின் அரசியல் கொள்கைகளை - பிளேட்டோ, அரிச்டாட்டில் முதலிய அவர் மாணவர்கள் உலகறியச் செய்தனர்; நூல் வடிவாகச் செய்து உலக முழுவதும் பரவும்படி செய்தனர்.
உலகில் என்றும் ஒரே வகையான ஆட்சிமுறை நிலையாக இருந்ததில்லை. அவ்வாறு இருப்பதும் ஏற்றதன்று. அவ்வாறு ஒரே வகையான ஆட்சி முறை ஒரே நிலையாக இருக்கவும் இருக்காது. காலத்துக் கேற்றவாறு மக்கள் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், அறிவு வளர்ச்சி முதலியன மாறியமைய வேண்டியதே. அப்போது தான் மக்கள் வாழ்வியல் வளம் பெறும். மக்கட் கூட்டம் நலமிக்க நல்வழியில் இனிது செல்லும்.
2. ஆட்சி வேற்றுமை
இன்னின்னார் படிக்கலாம், இன்னின்னார் படிக்கக் கூடாது, இன்னின்னார் பொருளீட்டலாம், இன்னின்னார் பொருளீட்டக் கூடாது, இன்னின்னார் ஆளப்பிறந்தவர், இன்னின்னார் ஆளப்படப் பிறந்தவர் என்னும் மனுமறை ஒருகாலத்தே நடைமுறையில் இருந்து வந்தது.
‘யூதர்கள் பொருளீட்டக் கூடாது; வருவாயுள்ள எந்தத் தொழிலும் செய்யக் கூடாது’ என்று, செர்மனியின் தனியாட்சித் தலைவனான இட்லர் இட்ட கட்டளையை - ஏற்படுத்திய சட்டத்தை - செர்மனி மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றுப் போற்றவில்லையா? யார் ‘அது கொடுமை’ என்று கூறினர்? அது அக் காலத்தையும் நிலையையும் பொறுத்து அந்நாட்டு மக்களால் நல்லரசாகவே கொள்ளப்பட்டது.
எல்லோருக்கும் வாக்குரிமை வழங்குமுன் ஒரு சிலர்தான் வாக்காளராக இருந்து வந்தனர். 1931இல் தான் தாழ்த்தப் பட்ட சிறுவர்களை எல்லாப் பள்ளிகளிலும் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் பிறந்தது. சில ஆண்டுகளுக்கு முன்புதான் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கோவில் நுழைவு உரிமை கிடைத்தது. இவற்றிற்கு முன்னிருந்த முறை நன்முறை யாகத் தானே கருதப்பட்டு வந்தது? இன்னும் பெற்றோர் சொத்தில் சரிபங்குரிமை யின்மையைப் பெண்மணிகள் எதிர்க் கிறார்களா என்ன? இடைக்கால, பிற்காலத் தமிழ் நூல்களி லெல்லாம், ‘அவ்வரசன் மனு முறை தவறாது செங்கோல் செலுத்தி வந்தான்’ என அரசர்கள் புகழப்படுகிறார்கள்.
அது அக்கால நிலை. ஆனால், அதே அரசியல் முறை,
வள்ளுவர் செய்திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி
(- மனோன்மணீயம்.)
என்று, பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களால் கண்டிக்கப்படுகிறது. இது மனோன்மணீய ஆசிரியர் கால நிலை. அவர் காலத்தில் அம்முறை வழக்கத்தில் இன்மையால் அது அவர்க்குத் தகாத முறையாகத் தோன்றியது. அதனால், அவர் அதைக் கண்டித்தார் ‘பிறப்பொக்கும்’ என்ற வள்ளுவர் கொள்கையைச் சுட்டிக்காட்டி, ‘இது கொள்ளத் தக்கது அது தள்ளத் தக்கது’ என்கின்றார்.
ஒரு காலத்தே அரசன் கடவுளாகவே கருதப்பட்டு வந்தான். “திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே” என்றார் ஒரு தமிழ்ப் பெரியார். அரசன் ஆள்வதற்காகவே கடவுளால் படைக்கப்பட்டவன் என்று மக்களால் நம்பப்பட்டு வந்தது. குடிமக்களுக்காக அரசு என்பதை விட்டு, அரசுக்காகக் குடிமக்கள் என அரசர்கள் எண்ணி, அதற்கேற்ப நடந்து கொண்ட காலமும் ஒன்றுண்டு. குடிமக்கள் வாழ்வைச் சிறிதும் கருதாமல், நாடு பிடிப்பதும் தாம் நல்வாழ்வு வாழ்வதுமே அரச வாழ்வு என அரசர்கள் எண்ணி வந்த காலமும் உண்டு. இவையெல்லாம் ஒரு காலத்து அரசியல் முறைகளேயாகும். இவை இன்று கொடுங் கோலாட்சி யெனக் கூறப்படுகின்றன. அக்கால மக்கள் இவற்றை நல்லாட்சி முறையென்றே எண்ணியிருந்திருப்பர். இல்லையேல், அத்தகைய ஆட்சி முறைகள் அரும்பியிருக்க முடியுமா?
உலக மெங்கணும் சமயச் சார்பான ஆட்சி நடந்து வந்த காலமும் உண்டு. அரசர்கள் அடிக்கடி சமயமாறுவர். சமயத் தலைவர்களால் மாற்றப்படுவர். அப்பொழுது அவ்வரசர்கள் தாம் மாறிய சமயத்தைப் பின்பற்றும்படி குடிமக்களை வற்புறுத்துவர்; பின்பற்றாதவர்களைக் கடுமையாகத் தண்டிப்பார். இதுபற்றிய போர்கள் பல நடந்திருக்கின்றன. சமயச்சார்பான படுகொலைகள் பல நடந்திருக்கின்றன. மகேந்திர வர்மன் என்னும் பல்லவ மன்னன் சமணனாக மாறினான். கூன் பாண்டியனும் அவ்வாறே மாறிச் சைவனானான். கூன் பாண்டியனால் எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டன ராம். அஃதும் அக்காலத்தே நல்ல அரசியல் என்றுதான் அக்காலக் குடிமக்களால் கருதப்பட்டு வந்தது. இன்றேல், கொலைக்கஞ்சாத சமயப்பற்று கொண்டிருப் பார்களா? அரசியல் சுவடியைத் திறந்தால் இன்னும் எத்தனையோ அரசியல் முறைகளைக் காணலாம்.
ஓர் அரசனைத் தலைவனாகக் கொண்டதே நாடென்பது. அரசனில்லாத நாடு நாடெனப்படாது என்ற கொள்கை போய், இன்று அரசனில்லாமலே ஆட்சி நடத்தப்பட்டு வருகிறதல்லவா? அரசனுக்கு ஆய்வுரை கூற ஏற்பட்டது அமைச்சு. அரசனில்லையேல் அமைச்சு என்னும் பெயருக்குப் பொருளில்லை. ஆனால், இன்று அரசன் இல்லாமலே அமைச்சர் இருந்து ஆட்சி புரிந்து வருகிறார் களல்லவா? இதுவும் ஒரு வகை ஆட்சி முறையேயாகும். இந்நாடு விடுதலை பெற்றதும், குடியரசு நாடானதும், ஐந்நூற்றுக்கு மேற்பட்ட இந்நாட்டுச் சிற்றரசர்கள் ஒழிக்கப்படவில்லையா? அரசனில்லா விட்டால் யானையை விடுத்து அரசனைத் தேர்ந் தெடுத்ததாகக் கதையும் இருக்க, இருந்த அரசர்களை ஒழித்ததும் ஒருவகை ஆட்சிமுறையேயாகும்.
இவ்வாறு காலத்துக்குக் காலம் ஆட்சி முறையும் மாறிக்கொண்டேதான் வந்திருக்கிறது. எது நல்லாட்சி என்பது அக்கால மக்களின் போக்கையும், உலக அரசியல் நிலையையும் பொறுத்ததேயாகும். மக்கள் மனமாற்றம் அடையும்வரை எத்தகைய கொடிய கொடுங் கோலாட்சியும் நல்லாட்சியாகவே கருதப்படும். ஆகையால், பழைய எத்தகைய ஆட்சி முறை யினையும் ‘கெட்டது, தகாதது’ என்று கூறுதல் கூடாது. அது அக்காலத்து ஆட்சி முறை, இது இக்காலத்து ஆட்சிமுறை என்று கொள்வதே முறை.
இன்று உலகில் பெரும்பாலும் கட்சியாட்சி நடக்கிறது. ஆளுங்கட்சியை ஆளப்படுங் கட்சி எதிர்ப்பதும், ஒரு சார்பினர் ஆட்சிக்கு வந்ததும் முன்னைய ஆட்சியில் இருந்தவர்களைச் சிறையிடுவதும், தூக்கிக் கொல்வதும் கூட அரசியல் முறை யாகவே போற்றப்படுகிறது. அத்தகைய ஆட்சியையும் குடிமக்கள் நல்லாட்சியாகவே தான் கொள்கின்றனர்.
இந்நாட்டை ஒன்றரை நூற்றாண்டுக்காலம் ஆங்கிலேயர் ஆண்டு வந்தனர். ஒரு நாட்டை அந்நாட்டு அரசர் அல்லது தலைவர் ஆள்வதே முறை. அயல் நாட்டார் ஒருவர் ஒரு நாட்டை அடக்கியாள்வது ஆட்சியெனப்படாது. ஆனால் இந் நாட்டு மக்கள் விடுதலை வேட்கை பெறும் வரை ஆங்கில ஆட்சியும் நல்லாட்சியாகவேதான் கருதப்பட்டு வந்தது.
ஆங்கிலேயர் ஆட்சியில் கொஞ்ச காலம் தனியாட்சியும் கொஞ்ச காலம் இரட்டை யாட்சியும் கொஞ்ச காலம் பொறுப் பாட்சியும் நடந்து வந்தன. முடியாட்சி, குடியாட்சி, இரட்டை யாட்சி, பொறுப்பாட்சி, தனியுடைமை யாட்சி, பொதுவுடைமை யாட்சி முதலிய எல்லா ஆட்சி முறைகளையும் சாக்கரட்டீஃச் அன்றே ஆராய்ந்திருக்கிறார். அவர் எல்லா ஆட்சி முறைகளையும் ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்த்து முடிவில், குடிமக்கள் நல்வாழ்விற் கேற்ப ஆட்சி நடத்தப் பயிற்சி பெற்ற ஒருவனால் - குடிமக்களால் ஒப்புக் கொள்ளப் படும் ஒருவனால் - ஆளப்படும் முடியாட்சியே தகுதியான ஆட்சி என்ற முடிவுக்கு வந்துள்ளார். அவ்வாறு அரசியல் பற்றி ஆராய்ந்ததற்காகவே அவரை நஞ்சூட்டிக் கொல்லக்கூடிய அத்தகு ஆட்சி நடந்த காலம் அது.
3. குடி சூட்டு முடியாட்சி
இன்று அரசியல் அறிஞர்களால் குடியாட்சி, குடி மக்களாட்சி, மக்களாட்சி, நம்மாட்சி, பொதுவுடைமை ஆட்சி என்று பேசப் படும் அத்தனை ஆட்சி முறைகளையும் உள்ளடக்கிய ஓர் ஆட்சி முறை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் நாட்டில் நடந்து வந்துள்ளது என்றால் தமிழர்களின் அரசியலறிவுப் பழமையையும் இளமையையும் என்னென்றியம்புவது! மக்கள் நல்வாழ்வு முறையை நன்கு பழகிய அரசிளங் குமரனுக்கு நாட்டு மக்கள் ஒன்று கூடி முடி சூட்டி அவனைத் தங்கள் அரசனாக்கிக் கொண்ட வரலாற்றுக் குறிப்பொன்று தொல்காப்பியத்தில் காணப்படுகிறது. உண்மை யாகவா? ஆம், பொய் சொல்வதற்கென்ன கட்டுக் கதையா? நீங்களே பார்த்துக் கொள்ளலாம். இக்கட்டுரையை எழுத எழுத நமக்குண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை யென்றால், இதைப் படிக்கும் தமிழ் மக்கள் மகிழ்ச்சிக்கு அளவு காண்பதெங்ஙனம்? தமிழ் மக்களின் பழம் பெருமையே பெருமை என்பதுதான் அன்னார் மகிழ்ச்சியின் எல்லை. அவ்வரலாறு ஒரு பெருங்கதைபோலவே உள்ளது. அஃதாவது,
மன்னர் இருவர் தம்முட் பகைகொண்டனர். இருவர்க்கும் பகை முதிர்ந்தது. பகையின் முதிர்வு என்ன? போர்தானே! இருவருக்கும் போர் உண்டானது. இருவர் படையும் ஒரு களத்தே கைகலந்தன. வாட் போர், வேற்போர், விற்போர், யானைப்போர், குதிரைப்போர், தேர்ப்போர், மற்போர் முதலிய எல்லாவகைப் போரும் ஒழுங்காக நடந்தன. போர் பல பகல் நடந்தது. இருபக்கமும் எண்ணிறந்த மறவர்கள் மடிந்தனர். இறந்த கரிகளும் பரிகளும் கணக்கிலடங்கா. போர் கடுமையாக நடந்து கொண்டிருந்தது.
இதுநாள் வரை போர்க்களஞ் சென்றறியாத அந்நாட்டு அரசிளங்குமரன் தும்பை சூடிப் போர்க் களஞ் சென்றான்; களத்தில் குதித்தான்; தான் கற்றறிந்த படைப் பயிற்சியனைத்தையும் திரும்பிப் பயின்றான்; பகைவரை வெட்டி வீழ்த்திக் கொண்டே களத்தின் ஒரு பக்கத்தே சென்றான். பகைவர் கொடிப்படை யொன்று அவனை நோக்கி வந்தது. அது பெரிய படை. அத் தூசிப் படை அவனை வளைத்து மடக்கிக்கொள்ள முற்பட்டது. அது முனைப்புடன் முன்னேறி வந்தது. அது கண்ட அவ்வீர இளைஞன் ஏறுபோல் பாய்ந்தான்; அத்தூசிப் படையைச் சின்ன பின்னப் படுத்தினான். அப்படை புறமுதுகிட்டது.
அதோடு நின்றானா அவ்வரசிளங் குமரன்? இல்லை; வாளையுருவினான்; மாற்றாரோடு வாட் போர் புரியத் தலைப் பட்டான்; வாளை யேந்திக் கொண்டு மாற்றார் படையை நோக்கி நடந்தான். நெடுநேரம் வாட்போர் நடந்தது. அவன் மிடலோடு பாய்ந்து பகைவரை வெட்டி வெட்டித் தள்ளினான். எங்கும் பிணக்காடு. வெட்டுண்ட கைகள் வாளை மீன்கள் போலக் கருதி வெள்ளத்தில் நீந்திச் சென்றன. தலைகள் நுங்குக் காய்கள் போல தரையில் உருண்டன. பகைவர் அவ்வீர இளைஞனின் வாள்வலிக் காற்றாது புறங் கொடுத்தனர். அவ்வேந்திளங் குரிசில் தும்பை மாலையைக் களைந்து வாகைமாலை சூடினான்.
அரசிளங் குமரனின் வெற்றியைக் கேட்ட நாட்டு மக்கள் அளவிலா மகிழ்ச்சி யடைந்தனர்; தங்கள் மன்னிளங் குரிசிலை வாயாரப் புகழ்ந்தனர்; மனமாரப் பாராட்டினர். அக்காளையின் கன்னிப் போர் வெற்றியைப் புலவர்கள் புகழ்ந்து பாடினர்.
ஆனால், போர்க்கொடுமை அத்துடன் ஒழிந்ததா? இல்லை; தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. களத்தில் அங்கங்கே யானைப் போர், குதிரைப் போர், வாட்போர், வேற்போர் எனத் தனித்தனிப் போர் நடக்கும். அவ்வாறு ஒரு பக்கம் நடந்த வாட்போரிற்றான் நம் மன்னிளங் குமரன் வாகை சூடினான். மற்ற இடங்களில் போர் நடந்து கொண்டு தானிருந்தது. இரு பக்கத்துப் படைத் தலைவர்களும் இறந் தொழிந்தனர். இருபெரு வேந்தர்க்கும் படைத்துணை வந்த மன்னரும் மாய்ந்தனர்.
முடிவில் மன்னர் இருவரும் களத்தே குதித்தனர். கொடும் போர் நடந்தது. எங்கும் பிணக்குவியல்! காக்கை, கழுகுகள் தின்று தெவிட்டி அக்களத்தைவிட்டே பறந்து சென்றுவிட்டன. நரிகள் தின்னு தின்னென்று தின்று, வயிற்றைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் தவித்தன. எஞ்சிய பிணங்களைச் செந்நீராறு இழுத்துக் கொண்டு சென்றது. ஒருநாள் ஒரு பகலாயும் வெற்றி தோல்வி உண்டாக வில்லை. வேலும் வாளும் விளையாடின. வளைத்த வில் நிமிர வில்லை. தமிழ் வீரம் தலையெடுத்து நின்றது. முடிவில் இரு பெரு வேந்தரும் ஒருவரை யொருவர் நேருக்கு நேர் எதிர்த்தனர். கண்கொண்டு காணமுடியாத கடும்போர் நடந்தது. முடிவு, இரு பெரும் வேந்தரும் ஒருகளத்தவிந்தனர். இருவரும் ஒருவரை யொருவர் வெட்டிக்கொண்டு இருவரும் வாளுக் கிரையாயினர். இது,
இருவெரு வேந்தர் தாமும் சுற்றமும்
ஒருவரும் ஒழியாத் தொகை நிலை
(- தொல். புறத்திணை - 17)
எனப்படும். சுற்றம் - படைத்தலைவரும், படைத்துணை வந்தோரும்.
இது புறத்திணை ஏழனுள் ஒன்றான தும்பைத் திணையின் ஒரு துறை. தும்பை - போர். இது நல்ல துறை! இருபெரு வேந்தரையும், படைத்துணை வந்தோரையும், படைத் தலைவரையும் ஒருவரைக்கூட வாழவிடாமல் கொன்றொழிக்கும் துறை! போர் என்றால் வெற்றி தோல்வி உண்டாகியே தீரும். அதுவே போரின் இலக்கணம். ஆனால், இப்போரிலோ வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. இது ஒரு புது முறையான போர். உலகம் என்றும் கண்டறியாத போர். வெற்றி தோல்வி இல்லாதது போரெனப்படாது. இது வெற்றியும் தோல்வியும் இல்லாத போராகையால், இல்பொருளு வமையின் பாற்படும். இது தமிழர் வீரச் சிறப்புக்கு எடுத்துக் காட்டாகத் திகழுந் துறையாகும்.
இன்பமும் துன்பமும் இடையீடின்றி வரும் பொருள் களாகும். இளவரசனின் வெற்றி கேட்டு உவந்த நாட்டு மக்கள் தம் பேரரசனின் முடிவை அறிந்து வருந்தினர். என் செய்வது! இன்பத்தின் குறை துன்பம்! வேந்தன் புறங்கொடுக்கவில்லை. வலிய வந்த பகைவனை வெட்டி வீழ்த்தி வெற்றி வீரனாக ஒரு களத் தவிந்தமையை எண்ணி ஒருவாறு மனந்தேறினர்.
நாடு அரசனை இழந்துவிட்டது. தலைவன் இல்லாமல் நாடு தன்னந்தனியாக இருத்தல் கூடாது. அது நாடெனப் படாது. ‘நில வள முதலிய எல்லாச் சிறப்பும் பொருந்தியிருந்தாலும் அரசனில்லாத நாடு நாடாகாது’ (740) என்கின்றார் வள்ளுவர். எனவே, நாட்டுப் பெருங்குடி மக்கள் ஒன்று கூடினர்.; நாட்டுக்குத் தலைவனை ஏற்படுத்துவது பற்றி ஆராய்ந்தனர். ‘அரசிளங்குமரன் இளவரசனாக இருந்து சிறந்த அரசியலறிவும் ஆட்சிப் பயிற்சியும் பெற்றுள்ளான்; நாட்டு மக்கள் நல்வாழ்வில் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டுள்ளான்; முதற் போரிலேயே வெற்றி மாலை சூடிப் பெரு வீரனாக விளங்குகிறான். ஆகையால், அவனையே அரசனாக்கிக் கொள்ளலாம்’ என முடிவு செய்தனர்.
முரசறைந்து முடிசூட்டு விழாவினை நாட்டு மக்கட்கு அறிவித்தனர். நகர் அணி செய்யப்பட்டது. குறிப்பிட்ட நாளில் முரசு முழங்கிற்று. முடிசூட்டுவிழா இனிது நடை பெற்றது, நாட்டு மக்களால் அரசனாக்கப் பெற்ற அவ்வரசிளங் குமரன், தன் தந்தை இருந்த இடத்திலிருந்து நாட்டை இனிது ஆண்டு வந்தான். இதோ வரலாற்றுக் குறிப்பு:
வாள்மலைத் தெழுந்தோனை மகிழ்ந்து பறைதூங்க
நாடவற் கருளிய பிள்ளை யாட்டும்.
(- தொல், புறத்திணை - 5.)
அதாவது வாட்போரில் பகைவரை வெட்டி வீழ்த்தி வெற்றிமாலை சூடிய தங்கள் அரசிளங்குமரனின் வெற்றியைக் கண்டு நாட்டு மக்கள் மகிழ்ந்து, முரசு முழங்க, அவ்வரசிளங் குமரனுக்கு முடிசூட்டி அவனைத் தங்கள் அரசனாக்கிக் கொள்வர் என்பதாம்.
மலைதல் - பொருதல். பறை தூங்க - முரசு முழங்க. பிள்ளை - அரசிளங்குமரன். பிள்ளையாட்டு - இளவரசனைப் பேரர சனாக்குதல். நாடு அருளுதல் - முடி சூட்டுதல்.
‘நாடு அவற்கு அருளிய’ என்பது இங்குக் குறிப்பிடத் தக்கது. அருளுதல் - கொடுத்தல். தந்தையின் அரசு அவன் மைந்தனுக்கு உரியதேனும், அது நாட்டு மக்களின் உரிமைச் சொத்து. அதனை அவர் கொடுக்கத்தான் அவன் பெற வேண்டும். அவன் அதற்கு உரிமை பாராட்டக் கூடாது. அவனாகவே அரசனாக்கிக் கொள்ளக் கூடாது. தானாகவே முடிசூட்டிக் கொண்டு அரசனாகும் முடியாட்சி முறை அன்று இல்லை. குடியாட்சிக் குட்பட்ட முடியாட்சி முறையே அன்று நடைமுறையில் இருந்து வந்தது. ‘நாடு அவற்கு அருளிய’ என்னும் தொடரே அதற்குச் சான்றாகும்.
இதனால், நாட்டு மக்களே அரசனுக்கு முடிசூட்டித் தம் அரசனாக்கிக் கொள்ளும் பொதுமக்களாட்சி முறை, அப்பழங் காலத்தே நம் தமிழ்நாட்டில் இருந்து வந்ததென்பது விளங்கு கிறதல்லவா? இன்று போல் எல்லாக் குடிமக்களும் வாக்குரிமை வழங்கித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் குடியாட்சி முறை போலாது, குடிமக்களின் தலைவர்கள் ஒன்று கூடிப் பேசித் தலைவனைத் தேர்ந்தெடுத்து வந்தனர். அரசியல் என்பதே இன்னதென்றறியாத பெரும்பான்மையான பொதுமக்களின் நேரடித் தேர்தலைவிட, அப்பொது மக்களின் தலைவர் களாகிய அரசியல் அறிவு முதிர்ந்த பெரியோர்கள் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை சிறப்புடைய தாகுமல்லவா?
தொல்காப்பியப் புறத்திணையியல் துறைகள் அனைத்தும் நிகழ்ந்தவை கூறுவனவேயாகும். நாட்டு மக்களிடை நடந்த வற்றை, நடப்பனவற்றைச் சிறப்பித்துக் கூறுவனவே அத்துறைகள். கடைச்சங்க இறுதிக் காலம் வரையிலும் சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடை மூவேந்தரும் இவ்வாறே நாட்டு மக்களால் முடிசூட்டப் பெற்றுக் குடியாட்சிக்குட்பட்ட முடியாட்சியே புரிந்து வந்தனர். சேர சோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர்களின் அரசிளங் குமரர்களில் மூத்தவனிருக்க இளையவன் அரசாண்ட வரலாறு பல உண்டு. மூத்தவன் தகுதியற்றவனாக இருந்தமையால் அவனை விடுத்து, நாட்டுமக்கள் தகுதியுடைய இளையவனைத் தேர்ந்தெடுத்து முடிசூட்டி அரசானாக்கினார் என்பது விளங்கும்.
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன், ‘குடிபழி தூற்றுங் கோலேனாகுக’ என வஞ்சினங் கூறுதல் இதனை வலியுறுத்தும். ‘குடிபழி தூற்றல்’ - குடி மக்கள் இவன் கொடுங்கோலனென்று பழித்துக் கூறி, அவனை, நீக்கிவிட்டுத் தகுதியுடைய வேறொருவனை அரசனாகத் தேர்ந் தெடுத்தல். சங்க நூல்களில் இதற்குச் சான்றுகள் பல உள்ளன.
குடிபழி தூற்றும் கோலனு மல்லான் சிலப்- 23:34
என நெடுஞ்செழியன் குடிகளால் வெறுக்கத்தக்க வனல்லன் என்கின்றாள் மதுராபதி.
மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம்
பிழையுயி ரெய்தின் பேரும்பே ரச்சம்
- (சிலப் 25: 100 - 1)
என்ற செங்குட்டுவன் கூற்றும் இதற்குச் சான்று பகரும்.
இன்று உலக மக்கள் நல்லாட்சி முறை என்று விரும்புகிற ஓர் ஆட்சி முறை, இன்றைய உலக நாடுகளில் பல தோன்றியிராத அக்காலத்தே. இன்று வல்லரசுகளாகத் திகழும் நாட்டு மக்கள் அரசியல் முறை இன்னதென்றே அறியாத அக்காலத்தே - உலகில் ஒழுங்கான அரசு, அரசியல் முறை ஏற்படாத ஐயாயிர ஆண்டு களுக்கு முன்னரே - தமிழ் நாட்டில் நடந்து வந்த தென்றால், உண்மையிலேயே தமிழ் மக்கள் ஒப்புயர் வில்லாத் தனிப் பெருமை உடையவர் என்பதில் ஐயப்பாடும் உண்டோ?
இனி, சங்கப் பிற்காலத்தும், கி. பி. 13-ஆம் நூற்றாண்டிலும் குடிமக்கள் முடி சூட்டி அரசனாக்கிக் கொள்ளும் இவ்வாட்சி முறை நடைமுறையில் இருந்து வந்ததென்பது,
வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபினோர் கொடுக்க வாங்கி
வசிட்டனே புனைந்தான் மௌலி.
என்னும் கம்பர் வாக்கால் தெரிகிறது, கம்பர் தமது காலத்து நடைமுறையிலிருந்த தமிழ்நாட்டு அரசியல் முறையினையே இவ்வாறு கூறினார்.
4. ஆட்சித் திறன்
இனி, ஒரு நாட்டு மக்களிடை வலியோரும் மெலி யோரும் நல்லோரும் பொல்லாரும் இருத்தல் இயல்பே. வலியோர் மெலியோரை நலிதலும், பொல்லார் நல்லார்க்குத் தீங்கிழைத்தலும் ஆகிய குற்றங்குறைகள் நிகழ்தலும் இயல்பே. இவ்வாறு நாட்டு மக்களிடைக் குற்றங் குறைகள் நிகழாமல் காக்கவே அரசு ஏற்பட்டது. இவ்வாறு குற்றங் குறைகள் ஏற்படாமல் காத்து வருவதுதான் அரசின் முதல் வேலை. அதுவே அரசின் கடமையும் பொறுப்பும். அரசு என்பதற்குக் காவல் என்பதே பொருள். அரசன் - காவலன். அரசன் அங்கங்கே அதிகாரிகளையும் அலுவலாளர்களையும் காப்பாளர்களையும் ஏற்படுத்தி அக்காவற் றொழிலை ஒழுங்காக நடத்தி வரவேண்டும். அதற்காகச் செலவு ஆகுமல்லவா? அச்செலவுக்காக அரசுக்கு அரசிறை - வரி - கொடுத்தல் குடிமக்கள் கடமையாகும். தங்கள் நாட்டுக் காவற்றொழில் சரிவர நடத்தற் பொருட்டு வரி கொடுத்தல், தங்கள் நல்வாழ்வுக்காகத் தாங்களே செலவு செய்தலேயாகு மல்லவா? அரசை ஏற்படுத்தியதும் குடிமக்கள் தாமே? தன்னை ஏற்படுத்திய குடிமக்களைக் காப்பது அரசன் கடமை. தம்மால் ஏற்படுத்தப்பட்டுத் தம்மைக் காத்துவரும் அரசனுக்கு வரி கொடுப்பது குடிமக்கள் கடமை.
இன்று காவல், வரிவாங்குதல் என்ற இருவகை அரசியற் காரியங்களும், ஒழுங்காக நடைபெறுதற் பொருட்டு மாநிலம், மாவட்டம், வட்டம், பல்வட்டம் (டிவிஷன்), பகுதி (பிர்க்கா) என நாட்டைப் பல்பிரிவுகளாகப் பிரித்து, அப் பிரிவுகளுக்கு அதிகாரிகளையும் அலுவலாளர்களையும் ஏற்படுத்தியுள்ளமை போலவே, ஐயாயிரம் ஆண்டு கட்கு முன்னரே தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டு நல்லாட்சி நடந்து வந்ததென்பதை எண்ணுந் தோறும் நமக்கு வியப்பும் உவப்பும் ஒருங்கு உண்டாகின்றன வல்லவா? ஆம், வியப்பும் உவப்புங் கொள்ள வேண்டிய செய்திதான்.
பழங்காலத்தே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனத் தமிழகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது; இயற்கை யாகவே பிரிந்திருந்தது. காடும் காடு சார்ந்த இடமும் முல்லை எனப்படும். காடு என்பது இன்றுள்ள மலைப்பகுதி யன்று; சமநிலத்தில் இருந்த மரங்களடர்ந்த பகுதியேயாகும். காடு - மரங்களடந்த பகுதி. காடு சார்ந்த இடம் - அதனை யடுத்திருந்த புன்செய்க் காடுகள், குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும், மலைசார்ந்த இடம் - மலைச் சாரல், மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும், வயல் சார்ந்த இடம் - வயலை அடுத்துள்ள தோட்டங்கள். நெய்தல் - கடலும் கடற்கரையும். கடலிலும் உப்பு மீன் முதலிய பொருள்கள் உண்டாவதால் அது நிலம் எனப்பட்டது. இதனால் தமிழகம் நானிலம் எனப்பட்டது.
இவ்வாறு காடு, மலை, வயல், கடல் எனப் பிரித்ததன் நோக்கம், அந்நிலங்களின் இயல்பு, மக்களின் பழக்க வழக்கம், தொழில், பண்பாடு, தட்ப வெப்பம் முதலியன பற்றியே யாகும். இன்றும் ஆட்சி முறைக்கேற்ப நீலமலைப் பகுதியைத் (நீலகிரி) தனி மாவட்டமாகப் பிரிந்திருப்பதும், ஒரே ஊரகத்தை (கிராமம்) நன்செய்க் காளமங்கலம், புன்செய்க் காளமங்கலம் எனப் பிரிந் திருப்பதும் இதற்குச் சான்றாகும். முல்லை முதலிய நிலங்கட்குத் தனித் தலைவர்களும் அலுவலாளர்களும் ஏற்பட்டிருந்தனர்.
நாட்டின் ஒரு பகுதியில் அரசியல் குழப்பம், வகுப்புக் கலகம், கொள்ளை போன்ற ஏதாவது சீர்கேடுண்டானால் அதைச் சீர்திருத்தி, மீண்டும் அத்தகைய சீர்கேடுண்டாகாமல் காப்பது ஆள்வோர் கடமையாகும். இனி, அரசியல் அலுவலாளர்களில் ஒரு சிலர் கைக்கூலி பெற்றுக் கொண்டோ, வேறு காரணத் தினாலோ முறை தவறி நடத்தலும், முறைதவறி வரிவாங்குதலும் கூடுமல்லவா? அத்தகைய குற்றங்கள் நேராமலும் ஆள்வோர் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். இதற்காகவே இன்று மாவட்டத் தலைவரும், பல்வட்டத் தலைவரும் (R. D. O), வட்டத் தலைவரும் அடிக்கடி தத்தம் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளைச் சுற்றிப் பார்த்து வருகின்றனர்; அலுவலாளர்கள் செய்யும் வேலையை மேற்பார்வை யிடுகின்றனர். குடிமக்கள் கூறும் குறை கேட்டு முறை செய்கின்றனர். இவ்வாறே தொல்காப்பியர் காலத்திலும் நடந்து வந்ததென்றால் தமிழ் மக்களின் அரசியல் சிறப்புக்கும் பழமைக்கும் வேறு என்ன சான்று வேண்டும்?
இனிக் குடிமக்கள் குழப்பம் செய்து கொண்டால் அதை அடக்கச் செல்லும் மேலதிகாரிகளில் ஒருசிலர், ஒரு கட்சி யாரிடம் கைக் கூலி வாங்கிக் கொண்டோ, வேறு காரணத் தினாலோ மேலும் குழப்பத்தை வளர்த்தலும், ஓரவஞ்சனை யாக நடந்து கொள்ளுதலும் கூடுமன்றோ? ஒரு சிலரிடம் அதிக வரி வாங்குதலும் கூடும். எனவே, இத்தகைய குற்றங் குறைகள் ஏற்படாமல் இருத்தற் பொருட்டுப் பழந்தமிழ் அரசர்கள் அடிக்கடி நாட்டைச் சுற்றிப் பார்த்து நல்லாட்சி நிலவும்படி செய்து வந்தனர். பொறுப்புணர்ந்து, கடமையிற் றவறாது, காவலர் என்பதன் பொருளை அறிந்து நாட்டு மக்களை நன் முறையில் காத்துவந்த அன்னாரின் பெருமையே பெருமை!
“மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய” (அகத். 28) என்னும் சூத்திரத்தில், தொல்காப்பியர் இவ்வரசியல் முறை யினைக் காவற் பிரிவு, பொருட் பிரிவு என இரு கூறாக்கிக் கூறுகிறார். காவற் பிரிவு - அதிகாரிகளும் அலுவலாளரும் காவலில் தவறாமல் இருக்கும்படி செய்ய அரசன் பிரிதல். பொருட்பிரிவு - அரசிறை வாங்குவதில் தப்புத்தவறு நேராமல் இருக்கும்படி செய்ய அரசன் பிரிதல். பழந்தமிழரசர்கள் ஆட்சிப் பொறுப்பில் எவ்வளவு அக்கறையுடன் இருந்திருக்கிறார்கள்! இல்லையென்றால் அத்துணை நீண்ட காலம் மூவரசர் மரபு நிலைத்திருக்க முடிந்திருக்குமா? நமது முன்னோரின் அரசியற் பெருமையையும் பழமையையும் அறிந்தின்புறுவதோடு, அத்தகைய ஆட்சிமுறை நிலவும்படி செய்தலும் நமது கடமை யாகுமன்றோ?
ஆரமும் ஆழ்கடலும்
1. கடலும் நிலமும்
ஒருநாள் பிற்பகல். இளவேனிற் காலம். குளிர் தென்கால் தமிழ் மணங்கமழ வீசிக் கொண்டிருந்தது. வான வெளியில் அங்குமிங்கும் வெண்முகிற் கூட்டம் நிலவுலகின் இயற்கை யெழிலுருவங்களைக் காட்டிக் காட்டிக் காண்போர் கண்ணையும் கருத்தையும் ஒருங்கு கவர்ந்து கொண்டிருந்தது. வானையும் நிலத்தையும் வாழ்விடமாகப் பெற்ற வன்ன வன்னப் புள்ளினங்கள் தமிழ் மக்களிடம் பெற்ற இனிமைப் பண்பைத் திருப்பித் தந்து செய்ந்நன்றி மறவாச் செம்மைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தன. ஏன்? அவை தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழ் மொழியைக் கேட்டு வாழ்பவை அல்லவா? அப்பண்பு அவற்றிற்கு அமைவது இயற்கைதானே! நிலத்தியல்பால் நீர் திரிவது போல, வாழும் இடத்திற்கேற்றவாறு குணம் செயல் மாறுபடுவது இயல்பாகும். வண்ண வண்டினங்கள் ஏழிசைபாடிப் பழைய யாழிசையை நினைப்பூட்டின. கடற்கானல் மலரையும் மணத்தையும் தூவி மகிழ்வித்தது.
தமிழ்க் கடற்கரை மணல் வெளி. தென்கடலைத் தமிழ்க் கடல் என்பது தமிழ் மரபு. அம் மணல்வெளி வெண்ணில வொளிபோல் வெளேரென விளங்கிற்று. நிலவில் உள்ள களங்கம் போல் ஒவ்வோரிடத்தில் அறல் என்னும் கருமணல் இருந்து அதற்கு அழகு செய்தது. அத்தமிழ்க்கடல், “அன்னாய், நான் அன்று தமிழுண்டது தவறென்கிறாய். இல்லை. நான் தவறுடை யேனல்லன். நீயே தவறுடையை. எங்ஙனமெனில், கண்டோர் விரும்புதற்குக் காரணமான இனிய பொருள்களை மறைத்து வைப்பதுதானே அப்பொருளுடையோர் கடமை? தமிழர் கடமையில் தவறாதவ ரல்லரோ? பிறர் விரும்பும் பொருள்களை மறைத்து வையாமல் யாவருந் தடையின்றிக் காணுமாறு வைக்கலாமா? அவ்வாறு வைத்தல் தவறன்றோ? நன்கு எண்ணிப் பார்.”
“இனிமையின் இருப்பிடமான தமிழை, ஒளிவு மறைவின்றி அங்காடிப் பொருள் போல வெளிப்படையாக வைத்தது நின் தவறன்றோ? நீ தவறு செய்து விட்டு என்மேல் வீண்பழி சுமத்து கின்றனை. சில தாய்மார்கள், காண்போர் கண்பட்டு விடுமென்று தமது அழகான குழந்தையை வெளியில் விடாமல் வீட்டுக் குள்ளேயே வைத்திருப்பார்கள். வெளியில் எடுத்துப்போக நேர்ந்தால் முகத்தை முன்றானையால் மூடிக் கொண்டு போவார்கள். காண் போர் கண் பட்டுவிடுமென்று பருத்திக்காடு, மிளகாய்க் காடு, நெல்லங்காடுகளுக்குக் கூடத் துணியால் கோமாளிப் பொம்மை செய்து வைக்கிறார்களல்லவா? பயிர் நிலங்களுக்குப் பொட்டுப் பானை வைப்பதைக்கூட நீ பார்த்ததில்லையா?”
“உனக்குத் தமிழின் இனிமை தெரியாது போலும்! இனிமை யென்றால் என்ன, பொதுவான இனிமையா? இவ்வுலகிலுள்ள இனிமைகள் எத்தனையோ அத்தனையும் ஒன்று கூடப் பாக்கி யில்லாமல் ஒருங்கு கூடினால் எவ்வளவு இன்பமாக இருக்குமோ இனிக்குமோ அதைவிடப் பன்மடங்கு இனிமையுடைய தமிழை, ஒவ்வொரு சொல்லையும் தனித்தனியே சொன்னால் இன்பம்; ஒன்றோடொன்று தொடர்ந்தால் ஒரு தனியின்பம்; அச்சொல்லாலும் சொற்றொடராலும் ஆன பாடல்களை மேலாகப் பார்த்தாலே ஒருவகை யின்பம்; நுணுகிப் பார்த்தால் நனிமிகு இன்பம்; நினைக்குந் தோறும் நெஞ்சுக்கு இன்பம்; கேட்குந் தோறும் காதுகளுக்கு இன்பம். ‘தொட்டாலும் கைமணக்கும் சொன்னாலும் வாய் மணக்கும்’ என்றார் ஒரு புலவர். இங்ஙனம் அனைத்தும் இன்ப வடிவமான தமிழைத் தனியே விட்டு வைத்தால் யார்தான் சும்மா இருப்பர்? அவ்வாறு தனியே விட்டு வைத்தது நின் தவறு தானே?”
“இன்பத் தேனொழுகக் கனிந்து நெடுநாளாகியும் அத்தமிழ்க்கனி வாடாமல் வதங்காமல் வற்றாமல் முற்றாமல் உலராமல் உதிராமல் அப்படியே, கனிந்த அன்றேபோல் இருப்பதைக் காணக்காண என் நாவில் நீர் ஊறிற்று. என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. அத்தகு பொறுமையும் அடக்கமும் எனக்கிருந்தால் நானேன். இப்படி உலகப் பழியைச் சுமந்து கொண்டலைகிறேன்? இல்லை, நான் செய்ததே தவறெனில் அத்தவற்றைப் பொறுத்தருள்க” எனத் தமிழ் நில மடந்தையைத் தன் திரைக் கைகளால் தொட்டுத் தொட்டு வணங்கிற்று அத்தென் கடல். அவ்வணக்கமும் கூற்றும் உண்மை யானவை யல்ல; உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதலே யாகும் என்பதைக் கரையைக் கரைக்கும் அலையின் செயலால் காட்டிற்று அக்கருங்கடல்.
அது போழ்து கடலினின்று கரையை நோக்கி ஒரு படகு வந்தது. அப்படகிலிருந்து சிலர் கரையில் இறங்கினர். அவர்கள் கடலிலிருந்தெடுத்துப் பைகளில் கொண்டு வந்த முத்துச் சிப்பிகளைக் கரையில் குவித்தனர்; சிப்பிகளுள் இரந்த ஒளி முத்துக்களைக் கண்டு களித்தனர். உழைப்பின் பயனைக் கண்டால் களிக்காமலா இருப்பர்? களிப்பு உண்டாதல் இயற்கைதானே?
அவர்கள் களிப்பு ஒரு பக்கம் இருக்கட்டும். அம்முத்துக் களைத் தனது உடைமையாக உடைய அக்கருங் கடல், அவ்வில கொளியெழில் முத்துக்களைக் கண்டு உள்ளும் புறமும் ஒருங்கு களித்தது. அக்களிப்பு அதற்குக் கரைபுரண்டது. களிப்பு மிகுதியால் அக் கனைகடல்,
“செந்தமிழ் நிலச் செல்வியே! நான் தமிழுண்டது தவறென்றே வைத்துக்கொள்; இதோ விலைமதிப்பில்லா ஒளிவெண் முத்துக்கள்; இவற்றை அதற்கீடாக எடுத்துக்கொள். நின் தமிழ் என்னிடமுள்ள எத்தனையோ தீவுகளில் உண்டு. ஆனால், உன்னிடம் இத்தகைய முத்துக்கள் இல்லையல்லவா? இனித் தமிழுண்டாய் தமிழுண்டாய் என என்மேற் குற்றங் கூறிக் கொண்டிருப்பதை விட்டு விடு. நானுண்ட அம்மென்றமிழ்க்கு இவற்றை விலையாகப் பெற்றுக் கொள்” என்றது மிக்க எடுப்பாக அவ்விமிழ் கடல்.
2. நிலம்படு முத்தம்
அது கேட்ட தென்றமிழ் நிலச் செல்வி, அவ்வலை கடலின் அறியாமையைக் கண்டு கலகலவெனச் சிரித்து, “புறவுலக அறிவிலாப் பெருந்திரைக் கடலே, இவ்வளவு தான் நீ அறிந்தது போலும்! உன் பெயருக்கேற்ற மடமையை யுடையையாய் இருக்கின்றனை. அது உன்னீர்மை. அத்தன்மை உனக்கு இயல்பாக அமைந்தது. நீ மட்டும் என்ன? உன்போன்றார் எத்தனையோ பேர், என் அருமைத் தமிழ் மொழியிடம் அறிவியற்கலைச் சொற்கள் இல்லை. நான் அத்தகைய குறையுடையவள் என்றெல்லாம்” எனது பெருமை யறியாது தங்கள் வாய்க்கு வந்தவாறு பேசி வருகின்றனர். அவர்களைக் குறைகூறுவதில் பயனென்ன? அவர்கள் அறிந்தது அவ்வளவு தான். ‘நுண்ணறி வின்மை வறுமை அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்’ என்ற நாலடியாரின் நல்லுரை அவர்கட் கென்றே எழுந்தது போலும். அழகிய அலைகடலே! “நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம், மண்மாண் புனை பாவையற்று” என வள்ளுவர் நின் அறியா மையின் பெருக்கை நோக்கித்தான் கூறினாரென எண்ணுகிறேன்.
“அறிவின் கரையறியா ஆழ்கடலே, நின்னிடம் சிப்பி ஒன்றில் மட்டுந்தான் முத்து உண்டு. அம்முத்தை வைத்துக் கொண்டு இவ்வளவு பெருமை கொள்கிறாய். அதையும் எளிதில் பிறர்க்குக் கொடாத ஈயாத் தன்மை யுடையையாய் இருக்கின்றனை. அது நின் இயற்கைக்குணம். மேலும், பிறர் பொருளைக் கொள்ளை யிடுவோர் இருவகை இயல்புடையவராய் இருக்கின்றனர். தாம் கொள்ளை கொண்ட பொருளைத் துய்த்து இன்புறுவோர் ஒருவகையினர். தாம் கொண்ட கொள்ளையைத் துய்க்காது அப்படியே வைத்துக் கொண்டு பார்த்துப் பார்த்து இன்புறுவோர் மற்றொரு வகையினர். நீ இரண்டாவது வகையைச் சேர்ந்தவனாக இருக்கின்றனை. இல்லையேல் என்னைப் பார்த்து நீ இவ்வாறு கூறியிருக்க மாட்டாய்.”
“நேர்மை யில்லா நீர்மைக் கடலே, நீ கொள்ளை கொண்ட என் இன்பத் தமிழ்ப் பாடல்களை ஒரு முறை மேலாகப் படித்துப் பார்த்திருப்பையானாற் கூட என் மனம் புண்படும்படி இப்படிக் கேட்டிருக்கமாட்டாய். இன்றுங் கூட உன்போன்ற ஒரு சிலர், ‘தமிழ் நாட்டில் என்ன இருக்கிறது? இதில்லை அதில்லை’ என்று என்னைக் குறைகூறிக் கொண்டு தானே வருகிறார்கள்? அன்னாரின் அறியாமையைப் பற்றி, ‘ஆறறிவுடைய மக்களாகப் பிறந்திருந்தும் ஆய்ந்தறியும் அவ்வறிவைப் பயன்படுத்தாது இப்படி அறிவிலிகள் போலப் பேசுகிறார்களே!’ என்று எண்ணியிரங்குவதைத் தவிர வேறு என்ன செய்வது! என்னிடம் உள்ள இலங்கொளி முத்துக் களைப் பற்றிப் பேசாத எந்த ஒரு தமிழ் நூலும் இல்லை. ஏதாவது ஒரு நூலை ஒரு முறை திருப்பிப் பார்த்திருந்தால் என் பெருமையை அறிந்திருப்பாய். இவ்வாறு அறிவிலி போலக் கூறியிருக்க மாட்டாய். உனக்குத்தான் அந்நீர்மை இல்லையே!”
“பெருக்கத்து வேண்டும் பணிதல்” என்னும் வள்ளுவர் வாய்மொழியை அறியா வலைக்கடலே! நீ சிப்பி ஒன்றில் மட்டும் முத்தினை உடையையாய் இருக்கின்றனை. என்னிடமோ பலவகைப் பொருள்களில் அம்முத்துக்கள் இருக்கின்றன. இது உலகறிந்த உண்மை. நெடுந்தொலைவிலுள்ள வெளிநாடு களெல்லாம் அறிந்திருந்தும் அண்மையிலுள்ள நீ அறியாதது நின் அறியாமைப் பெருக்கையன்றோ காட்டுகிறது? இதோ தமிழ் நூல்களிலிருந்தே சில சான்றுகள் தருகிறேன்; கருத்துடன் கேள்!"
“தேனினும் இனிய செந்தமிழ் நிலச் செல்வியே! நான் அறியாது சொல்லிய அவ்வுரையினைப் பொறுத்துக் கொள்க. நின்னிடம் முத்துக்கள் இருக்கும் பொருள்களைக் கூறுக. கண்ணுங் கருத்துமாகக் கேட்கிறேன். கேட்டுத் தெரிந்து கொள்ள என் உள்ளந்துடிக்கிறது. உணர்வு பொங்குகிறது. நான் அறியாது கூறியதைப் பொருட் படுத்தாதே. பிறர் கூறும் குறையினைப் பொறுத்துக் கொள்ளுதல் நின் இயல்பன்றோ?”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை" என வள்ளுவர் பொறைக்கு நின்னையன்றோ எடுத்துக் காட்டி யுள்ளனர்? வள்ளுவர் வாய்மொழிப்படி வாழும் வண்டமிழ் நிலமடந்தையே, விளக்கமாகக் கூறுக" என்றது அப்பெருங்கடல்.
“தன் பெருமையை அறியாரிடத்துத் தானே தன்னைப் புகழ்ந்து கூறுதல் தற்புகழ்ச்சி யென்னும் குற்றம் ஆகாது” என்பது இலக்கணம். என் பெருமையை நின்னிடம் கூறித்தானே யாக வேண்டியிருக்கிறது? இதுவரை நான் தற்புகழ்ச்சி பேசியதே கிடையாது. என் செய்வது? பேசவேண்டி வந்தது உன்னால் உன் விருப்பப்படியே விளக்கமாகக் கூறுகிறேன். கேள். வெறும் புகழ்ச்சியன்று; தமிழ்ச் சான்றோர்கள் கூறி யிருப்பதையே கூறுகிறேன்; இலக்கியச் சான்றுடன் எடுத் துரைக்கின்றேன்; அமைதியுடன் கேட்பாயாக;" என நிலமென்னும் நல்லாள் கூறலானாள்.
“அலை பெருங்கடலே, என்பால் உள்ள முத்துப் பிறக்கும் இடங்களைக் கேட்டால் நீ பெருவியப்புறுவாய். நீ மட்டும் என்ன? இவ்வுலகமே வியப்புறும். வியக்கத்தகும் இடங்களி ளெல்லாம் முத்துப் பிறக்கிறது என்பதைக் கண்டறிந்து எடுத்துப் பயன்படுத்தி யுள்ளார்கள் என் அருமைப் பழந்தமிழ் மக்கள். அக் கண்டுபிடிப்புக்கள், இன்று என்னென்னவோ கண்டறியும் அறிவியல் வல்லுநரும், ‘ஆ!’ என்று விரும்பிக் கேட்க அவாவும் அத்தகு கண்டு பிடிப்புக்களாகும்.”
“அறிவ தறியா மறிகடலே, ‘வெண்பாவிற் புகழேந்தி’ என்னும் சிறப்புப் பெயர் பெற்ற புகழேந்திப் புலவர் கூறுவதைக் கேள். அவர் கூறும் அந்த இரத்தினச் சுருக்கத்தை நானும் சுருக்கமாகவே கூறுகிறேன். இருபது இடங்களில் - பொருள் களில் - முத்துப் பிறக்கிறது என்கிறார் புகழேந்தியார். அவ் விடங்கள் யாவை? என்னென்ன பொருள்களில் பிறக்கின்றன இலங்கொளி முத்தங்கள்?” என்று அறிய விரும்புவாயல்லவா? இதோ கூறுகிறேன்.
3. முத்துப் பிறக்குமிடம்
“யானைக் கொம்பிலும் பன்றிக் கொம்பிலும் முத்துப் பிறக்கிறது. இது உனக்கு வியப்பாகத்தான் இருக்கும். உன் போன்ற ஆராய்ச்சி யறிவில்லாதவர்க்கு வியப்பாகத்தான் தோன்றும். பழந்தமிழ் மக்களின் வாழ்க்கை முறையே ஒரு வியப்பானது தானே!” இதை எப்படிக் கண்டறிந்தார்கள் என்பதை அப்புறம் கூறுகிறேன்.
“அடுத்து இப்பி, சங்கு, சலஞ்சலம் என்னும் வலம்புரிச் சங்கு இவற்றில் முத்துப் பிறக்கிறது. இப்பியிலும் சங்கிலும் முத்துப் பிறக்கிறதென்பது உனக்குத் தெரியும்; சலஞ்சலமும் சங்கின் இனந்தானே?”
“அடுத்து முத்துப் பிறக்கும் இடங்களைக் கேட்டால் நீ மிகவும் வியப்புறுவாய். மீன்தலை, முதலைத்தலை, உடும்புத் தலை, பாம்புத் தலை, கொக்குத்தலை, மாட்டுப்பல் இவற்றில் கட்டாணி முத்துக்கள் பிறக்கின்றன. ஏன்! வியப்பாக இல்லையா?”
“சில மரஞ்செடி கொடிகளில் முத்துப் பிறக்கிறது என்றால் நீ நம்பமாட்டாய். நீ எதைத்தான் நம்புகிறாய்? வாழை மரம், கமுகமரம், கரும்பு, மூங்கில், நெல், தாமரை இவற்றில் திகழொளி முத்துக்கள் பிறக்கின்றன. அடுத்து கற்பூரம், முகில், பெண்கள் கழுத்து இவற்றில் பிறக்கின்றன. இலங்கொளி முத்துக்கள். எண்ணிப் பார்த்துக் கொள். இடங்கள் இருபதும் உள்ளனவா” என்று.
“மறிதிரைக் கடலே, உனக்கு மறதி அதிகம் அல்லவா? வேண்டுமானால் புகழேந்திப் புலவரின் இரத்தினச் சுருக்கச் செய்யுளை எழுதிக்கொள்.”
தந்தி வராகம் மருப்பிப்பி பூகம் தழைகதலி
நந்து சலஞ்சலம் மீன்றலை கொக்கு நளினமின்னார்
கந்தரம் சாலி கழைகன்னல் ஆவின்பல்கட் செவிகார்
இந்து வுடும்பு கராமுத்த மீனும் இருபதுமே.
என்பதே அச்செய்யுள்.
“இவற்றுள் இப்பியும் சலஞ்சலமுந்தான் நின்னிடத்தில் உள்ளவை. அவை உனக்குச் சொந்தம். ஏனைப் பதினெட்டும் என்பாலுள்ளவை; எனக்குச் சொந்தம். இப்பியும் சலஞ்சலமும் என் ஆறு குளங்களில் இல்லாமலில்லை. கார் என் மலைகளில் வாழ்வது; என்னைச் சார்ந்து இன்புறவே அது பிறந்தது. சில எடுத்துக் காட்டுகள் வேண்டுமேல் கேள்.”
பார் வளர் முத்தம் (முல்லைக்கலி- 4)
“நிலத்தில் வளர்ந்த முத்தம் எனச் சிறப்பித்துக் கூறுகின்றார் முல்லைக்கலி ஆசிரியர். ‘வளர் முத்தம்’ என்பது மிகுதியாகக் கிடைக்கும் முத்தம் எனப் பொருள் படும்.”முத்து விளை கழனி" (மணிமே. 4) என்கின்றார் மணிமேகலை ஆசிரியர் சாத்தனார்."
-வாலுகத்துக்
குண்டுநீ ரடைகரைக் குவையிரும் புன்னை
வலம்புரி ஈன்ற நலம்புரி முத்தம்.
- (சிலப். 27: 243- 4)
வெண்மணலையுடைய கரைக்கண் உள்ள மிகப் பெரிய அடியினையுடைய புன்னை மரத்தின் நிழலில் வலம்புரிச் சங்கு ஈன்ற அழகிய முத்தம் என்கின்றார் இளங் கோவடிகள். ஏ! ஒலி கடலே! என் பெருமை விளங்குகிறதா? யானை மருப்பில் முத்துப் பிறக்கிறது என்பதை,
- முத்தார் மருப்பு (கலி. 40:4)
- பெருங்களிற்று முத்துடை வான்கோடு (முருகு 304)
- யானை முத்தார் மருப்பு (குறிஞ்சிப் 36)
- யானை முத்துடை மருப்பு (மலைபடு 518)
- முத்துடை மருப்பின் மழகளிறு (பதிற். 32)
- வைந்நுதி வாள்மருப் பொடிய உக்க தெண்ணீர் ஆலி கடுக்கும் முத்தம் (அகம் 282)
எனச் சங்க நூற் சான்றோர்கள் துணிந்து கூறியுள்ளார்கள். ஆலி - பனிக்கட்டி.
- ஓடியடி மருப்பிணைகள் சொரிகுருதி முத்தம் நினையோம். - (குலோத்துங்கன் பிள்ளைத். 8)
என ‘யானைக் கொம்பு ஒடிந்தால் அதிலிருந்து ஒழுகும் குருதியோடு முத்துக்களும் சிந்தும்’ என்பதால், யானைக் கொம்பில் முத்து நிறைய இருக்கும் என்பது பெறப்படும்.
“எருமைக் கூட்டம் கரும்பைக் கடித்துமென்று முத்துக் களை உமிழும்” (நள. 24) என்கிறார் புகழேந்திப் புலவர். இவர் சோழநாட்டில் வாழ்ந்து வந்தவராதலால், நேரில் கண்டதைக் கவியிலமைத்துக் கூறியுள்ளார். அதிவீரராம பாண்டியன், ‘கண்ணுடைக் கரும்பு ஈன்ற வெண் முத்தம்’ (நைட. 8) என்கின்றான். கரும்பின் கணுக்களில் முத்து விளைகிறது; கரும்பில் சர்க்கரை உண்டாகிறது. கரும்பு இரட்டைப் பயன் உடைய தாகும். முதுகடலே, இனி என்பால் உள்ள சில முத்தச் சிறப்பினைக் கேள்.
“வயல்களில் தவழ்ந்து திரிகின்ற சங்குகள் ஈன்ற வெண் முத்துக்களும், கரும்புகளிலிருந்து உதிர்ந்த வெண் முத்துக்களும், தாமரை மலர் சொரிந்த வெண்முத்துக்களும், சேர்ந்து நிலவினது ஒளிபோல ஒளி வீசுதலினால், திங்களைக் கண்டு மலரும் குமுத மலர்கள், அவ்வெண் முத்தொளியைத் திங்களின் ஒளி யென்று எண்ணி மலருமாம்” (நைட. 8). இரவில் மலரும் குமுதம் முத்துக்களின் ஒளியை நிலவொளி யென மயங்கிப் பகலில் மலர்வதால், அம்முத்துக்கள் மிக்க ஒளியையுடையவை என்பது பெறப்படுகிற தல்லவா? உண்மையில் அக்காலம் இனியொருகால் கூடுங் கொல்லோ!
"உழவர்கள் காலையில் நேரமே எழுந்து வயலுழச் சென்றார்கள். வயலில் சங்குகள் ஈன்ற வெண்முத்துக்கள் குவியல் குவியலாகக் கிடந்தன. அவ்வுழவர்கள் அம்முத்துக்களை அரித் தெடுத்துக் கரையில் போட்டு விட்டு உழவோட்டி னார்கள். அங்கு ஒரு பெண் அன்னம் வந்தது; அங்குள்ள மடையில் நீராடினது. பின் அது அம்முத்துக் குவியலின் மேல் போய் உட்கார்ந்து இளவெயில் காய்ந்து கொண்டிருந்தது. அது கண்ட உழவர்கள், ‘அடட! ஏமாந்து போய் அன்னத்தின் முட்டைகளை முத்துக்களென்று எடுத்துக் கரையில் போட்டுவிட்டோம்’ என்று தமது அறியாமையை எண்ணி வருந்தினார்களாம். (சேக்கிழார் பிள்.) உழவர்கள் அன்னத்தின் முட்டையென மயக்கும் அவ்வளவு பெரிய முத்துக்கள்!
“இத்தகைய பெரிய வெண் முத்தங்கள் என்னிடம் இருக்க, பல இடங்களில் பிறக்க, நிரம்ப இருக்க, ஏதோ கொஞ்சம் முத்துக்களை யுடைய நீ, ‘முத்துடையேன்’ எனத் தற்பெருமை கொள்ளும் நின் அறியாமையை என்னென்பது! என்னிடத் திலிருப்பது போன்ற இத்தகைய கட்டாணி முத்துக்கள் நின்னிடம் இருந்தால் உன்னைக் கையால் பிடிக்கவா முடியும்? கரை கடந்த மகிழ்ச்சியால் பொங்கி யெழுந்து குப்புற வீழ்ந்து மண்ணைக் கவ்வுவாயல்லவா?”
“ஒலிகடலே, யானை மருப்பு, பன்றி மருப்பு முதலிய இடங்களில் முத்துப் பிறக்கிறது என்பதைக் கண்டறிய என் பழந்தமிழ் மக்கள் மேற்கொண்ட முயற்சியை நினைக்கின் எனக்கே மலைப்பாக இருக்கிறது. அரிய பொருள் எங்கிருந் தாலும் எங்குக் கிடைத்தாலும் அவை ஆள்வோருக்குச் சேர வேண்டியவை என்னும் சட்டம் அன்றில்லை. அத்தகைய சட்டம் செய்து கள்ளத்தனத்தை வளர்க்க விரும்பவில்லை என் பழந்தமிழ்ச் செல்வர்கள். அன்று நாட்டின் செல்வம் அனைத்தும் நாட்டு மக்களின் செல்வமாக இருந்து வந்தன. அரசன் குடிமக்களின் மூத்த முதற்குடியாகவே இருந்து வந்தான். குடிமக்கள் நாட்டுப் பற்றுடையவராக இருந்து வந்தனர்; நாட்டு முன்னேற்றத்தில், நாட்டுப் பெருமையில் மிக்க அக்கறை யுடையவர்களாய் இருந்து வந்தனர்; அதனால் ஏதாவது அரும்பொருள் எங்கிருந்தாவது கிடைத்தால் உடனே அதை அரசனுக்கு அறிவிப்பர். அரசன் அறிஞர்களைக் கொண்டு அப்பொருள் பற்றி ஆராய்ச்சி செய்து அப்பொருளைப் பெருக்கி நாட்டு மக்களின் நலனுக்குப் பயன் படுத்துவான். இவ்வாறு பல நூற்றாண்டுகள் அரசனும் குடிமக்களும் அரிதின் முயன்று கண்டு பிடித்தவையே முத்துப் பிறக்கும் அவ்விருபது இடங்களும். முத்து, பவழம், மாணிக்கம், மரகதம், கோமேதகம், புட்பராகம், நீலம், வைரம், வைடூரியம் என்னும் ஒன்பான் மணிகளுள் முத்தும் பவழமுமே உன் உடைமை. ஏனைய ஏழும் எனக்கே தனியுடைமையாகும். முத்து நம் இருவர்க்கும் பொதுவுடைமை. அதிலும் உனக்குச் சிறுபான்மை, எனக்குப் பெரும்பான்மை. விரிகடலே, இப்போது தெரிந்ததா என் பெருமை!”
“ஏ ஆழ்கடலே! உனக்குத் தெரியாதது போலவே பெரும் பான்மையான மக்களுக்கு என்பால் முத்துப் பிறக்கிறது என்பது தெரியாது. எல்லோரும், ஏன்? என் மக்களுங்கூட முத்துக்களஞ்சியம் நீதான் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர் இன்னும். முத்து முதலியன போல என்பால் இன்னும் என்னென்னவோ அரிய பொருள்கள் உள்ளன. என் முன் மக்கள்போல அவற்றை ஆராய்ந்து காணுதல் இன்றைய மக்களின் கடமையாகும்.”
4. முத்தாரம்
“இனி ஒரு பொருள் எத்தகைய சிறப்புடையதாக இருந்தாலும் அதைப் பயன்படுத்தாவிட்டால் அப்பொருள் மதிப்புப் பெறுவ தில்லை. ஒருவர் அடிக்கடி நாட்டு மக்களுக்கு ஏதாவது நற்செயல் செய்துகொண்டு இருப்பாரே யானால் அவர் பெயர் நாட்டு மக்கள் நாவில் நடமாடும். ஒரு சில மாதங்கள் ஒன்றுஞ் செய்யா விட்டாலும் மக்களிடை அவர்தம் மதிப்பு மங்கி விடுகிறதல்லவா? இதனாற்றானே ஒரு சிலர் அடிக்கடி ஏதாவது செய்து தம் பெயரை விளம்பரப் படுத்தி வருகின்றனர்? இவ்வாறேதான் பொருள்களின் மதிப்பும். முத்தைப் பலவகையிலும் பயன்படுத்தி அதற்குப் பெருமை தேடித் தந்தவள் நானே. முத்துப் பயிலாமல் எந்த ஓர் அணிகலனும் முன்பு செய்வதில்லை. முத்தில்லையேல் எந்த ஓர் அணியும் முற்றுப் பெறுவதில்லை எனலாம். முத்துக் கொப்பு, முத்துக்குச்சு, முத்து மூக்குத்தி, முத்துச்சரம் என முத்தோடு சேர்த்து நகைகளின் பெயர்கள் வழங்கப் பட்டதே இதற்குச் சான்றாகும்.”
“அணிகலன்களிற் சிறந்தது முத்தாரம். ஆரம் என்பதே முத்தின் பெயர். ஆரம் - மாலை. முன்னர் முத்துக்கள் மாலை யாகவே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதனாலேயே முத்துக்கு மாலை எனப் பொருள்படும் ‘ஆரம்’ என்பது பெயராய் அமைந்தது. ஆரம் என்பது ஹாரம் என்னும் வடசொல்லின் திரிபன்று. தானம் - ஸ்தானம், தலம் - ஸ்தலம் எனத் தமிழ்ச் சொற்கள் வடமொழியில் தற்பவமாக்கப்படுவது போல, ஆரம் என்பது ஹாரம் என வடமொழியில் தற்பவம் ஆக்கப்பட்டது. வடசொல் தமிழின் ஒலியியல்புகளுக் கேற்பத் திரிந்து தமிழில் தற்பவமாவது போல, தமிழ்ச் சொல் வட மொழியின் ஒலியியல் புக்கேற்பத் திரிந்து வடமொழியில் தற்பவமாகும். இதனையறியா தார், ஆரம் என்பது ஹாரம் என்பதன் திரிபெனக் கொள்ளலாயினார்.”
“ஆரம் அல்லது மாலையில் பல சரம் அல்லது கோவை இருக்கும். அது வடம் என வழங்கும். வடம் என்றால் முத்து வடம் என்பதே பொருள். அவ் வடத்திற்குக் காழ் என்னும் பெயரும் உண்டு. காழ் என்பதற்கும் முத்துவடம், முத்துச் சரம் என்பதே பொருள். சரம் என்றால் முத்துச்சரம், வடம் என்றால் முத்து வடம், கோவை என்றால் முத்துக் கோவை, ஆரம் என்றால் முத்தாரம், இது அக்கால மக்கள் முத்தைப் பயன்படுத்தி வந்த பயிற்சியைக் குறிக்கும்.”
முத்தாரத்தை அன்று ஆண் பெண் இருபாலாரும் அணிந்து வந்தனர். முத்து அன்று பெண்மக்களின் போர்வை யாகவே பயன்பட்டு வந்தது எனலாம். பெண்களின் தலையில் முத்தாரம், முடியில் முத்தாரம், காதில் முத்தாரம், கழுத்தில் முத்தாரம், தோளில் முத்தாரம், கையில் முத்தாரம், மார்பில் முத்தாரம், இடையில் முத்தாரம், உடையில் முத்தாயிரம் என எங்கும் முத்தாரமாகவே இருக்கும்.
ஆடையின் கரைளை முத்தாரம் அணி செய்யும். மார்க் கச்சை முத்தாரம் மறைத்து விடும். மேலாடையை முத்தாரம் விளங்கச் செய்யும். இன்று ஆண்கள் இடையில் கச்சு அணிவது போல் அன்று பெண்களும் கச்சு அணிந்து வந்தனர். அதன் அறிகுறியே ஒட்டியாணம் என்பது. மகளிர் இடுப்பில் ஆடையின்மேல் ஆடைய
விழாமல் அணிந்து வந்த அக்கச்சு, அரைக்கச்சு, இடைக்கச்சு என இடத்தின் பெயரால் வழங்காது, அதன் பால் உள்ள முத்தாரத்தின் எண்ணிக்கையின் பேராலேயே வழங்கி வந்தது.
பட்டுக்கச்சின் மேல் அணியாக முத்தாரங்களை வைத்துத் தைத்து அணிந்து வந்தனர். இருகோவை அல்லது இரு முத்தாரம் வைத்துத் தைத்த அக்கச்சு இருகோவை எனவே பெயர் பெறும். இவ்வாறே அக்கச்சின் மேல் வைத்துத் தைத்துள்ள முத்துக் கோவையின் எண்ணிக்கையின் பெயரால் அக்கச்சு வழங்கிற்று.
ஏழு கோவை - காஞ்சி
எண் கோவை - மேகலை
பதினாறு கோவை - கலாபம்
பதினெட்டுக் கோவை - பருமம்
முப்பத்திரண்டு கோவை - விரிசிகை
எனப் பெயர் பெறும். அக்கச்சு, கலையாகிய ஆடையின் மேல் அணிந்து வந்தமையால், மேல்கடை - மேகலை எனப் பெயர் பெற்றது. மேகலை என்பதே பின்னர் எல்லாக் கோவை கட்கும் பொதுப் பெயராக வழங்கலானது. மணிமேகலை என்பது - முத்தாரம் வைத்துத்தைத்த மேகலை எனப் பொருள் படும். மணி - முத்து. மணிமேகலை தான் உனக்குத் தெரியும். உதயணன் மனைவியிலொருத்தி - விரிசிகை.
எண்கோவை மேகலை காஞ்சி எழுகோவை
பண்கொள் கலாபம் பதினாறு - கண்கொள்
பருமம் பதினெட்டு முப்பத்திரண்டே
விரிசிகை என்றுணரற் பாற்று.
இப்பாட்டை மனப்பாடம் செய்துகொள்.
இனி, அரியணை, கொற்றக்குடை, முடி முதலியன வெல்லாம் வழிவழியாக வரும் அரச மரபுக்குரிய பொதுச் சொத்தாகும். அரியணை முதலியவற்றை எந்த அரசனும் அழிக்கவோ இழக்கவோ கூடாது. அங்ஙனமே அரசர் மார்பில் அணியும் முத்தாரம் வழிவழியாக அரச மரபுக்குரிய பொது வுடைமையேயாகும். அரசர்கள் தங்கள் ஆட்சியையே கேட்கினும் கொடுத்து விடுவர். ஆனால், மார்பிலணிந் திருக்கும் முத்தாரத்தை மட்டும் கொடுக்க ஒரு போதும் இசையார். அது வழிவழிச் சொத்து; ஒருவனுக்கு உரியதன்று என்பதே அதன் கருத்து.
‘அரிச்சந்திரனைப் பொய்யனாக்குதற்காகக் கோசிக முனிவர் பல சூழ்ச்சிகள் செய்கிறார். எதற்கும் அவன் மசிய வில்லை. காட்டு விலங்குகளை ஏவி நாட்டு மக்களுக்குத் தொல்லை கொடுத்தார். அரிச்சந்திரன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். முனிவன் அரிச்சந்திரனிடம் இரு பெண்களை ஏவி நடனமாடச் செய்கிறார். அப்பெண்கள் அவ்வாறே சென்று நடனமாடு கின்றனர். அரிச்சந்திரன் மகிழ்ந்து என்ன வேண்டுமென்று கேட்டான். அம்மகளிர் தங்களை மணந்து கொள்ளும்படி வேண்டினர். அரிச்சந்திரன் மறுத்து விடுகிறான். அவ்வாறே கொற்றக்குடை முதலியவற்றைக் கேட்டு, முடிவாக முத்தாரத்தைக் கேட்கின்றனர். அதற்கு அரிச்சந்திரன், ’அது எனக்குரியதன்று. அது எனது அரச மரபுக்குரிய பொதுச் சொத்து. அதைப் பிறர்க்குக் கொடுக்கும் உரிமை எனக்கு இல்லை’ என மறுத்து விடுகிறான்.’ என்கின்றது அரிச்சந்திரப் புராணம்.
“இத்தகைய பெருமையுடைய முத்து , பண்டு எகிப்து, உரோம், சாலடியம், கிரேக்கம், அரேபியா முதலிய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. நமது கப்பல்கள் வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்ற பொருள்களில் பெரும்பான்மை முத்துக்களேயாகும். முத்து அவ்வளவு நிறைய அன்று கிடைத்து வந்தது. மேனாட்டு மகளிர் இந்நாட்டு முத்துக்களை அவ்வளவு ஆர்வத்துடன் வாங்கி யணிந்து வந்தனர். எகிப்து நாட்டின் இளவரசியான கிளியோ பாட்ரா என்னும் பெண்மணி, தமிழகத்து விலையுயர்ந்த கட்டாணி முத்துக்களை மதுவிலே கரைத்துக் குடித்ததாகச் சொல்லப்படுகிறது. முத்தினையுண்டால் மேனியழகு மிகுமாம்.”
“இத்தகைய அரும்பெருஞ் சிறப்பினையுடைய முத் தெடுக்கும் முயற்சி பிற்காலத்தே கைவிடப்பட்டது. கொஞ்ச காலமாக முத்தைப் போல முத்துச் செய்யப்பட்டு வருகிறது. இப்போது அப்போலி முத்துக்களை என் தமிழ்ப் பெண் மணிகள் அணிந்து வருகின்றனர். விலையுயர்ந்த கட்டாணி முத்துக்களை யணிந்து வந்த தமிழினம் போலி முத்தையணிந்து பெருமை கொள்ளும் அத்தகு நிலையில் உள்ளேன் நான். என் செய்வது காலத்தின் கோலம்!”
“அலைமோதும் ஆழ்கடலே, எனது வளமிக்க முத்துச் செல்வத்தை இழந்தனன் எனினும், இப்போது என் தமிழ் மக்கள் உன்னிடம் உள்ள முத்தை எடுத்து வருதலைக் கண்டு ஒருவாறு ஆறுதலடைகிறேன். இனியேனும் என் மக்கள் முத்துச் செல்வந் திரட்டும் முயற்சியில் முனைந்து ஈடுபடு வார்களாக. வாழ்ந்து கெட்டவளின் பழைய நிலையைப் பழம் பெருமையை யார் மதிக்கிறார்கள். நீ மதிக்க?” என்று சலிப்புடன் கூறிமுடித்தாள் தமிழ் நிலமகள்.
“அன்னாய் உன் பெருமையை அறியாது அவ்வாறு கூறிவிட்டேன். அறியாமையினால் செய்த பிழையைப் பொறுத் தருள்க. அதுதான் நின் இயற்கைக் குணம் ஆயிற்றே! ‘பொறுத் தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்’ உண்டன்றோ? இது நம் பொய்யா மொழியின் மெய்யுரையன்றோ? பூப்பூத் திருக்கிறது. அதைப் பறித்துச் சூடிப் பயன் பெறாவிடின் அப்பூங்கொடி யென்ன செய்யும்? நம்மிடம் இன்னும் எத்தனையோ அரிய பொருள்கள் உள்ளன. அவை நம்மிடம் இருப்பதனால் நமக்கு ஒரு பயனும் இல்லை. அதற்காக நாம் வருத்தப் பட்டென்ன செய்வது! அவற்றைப் பயன்படுத்து வோர் எடுத்துப் பயன்படுத் தினால்தானே அவர்க்கும் பயன். நமக்கும் அதனாற் புகழ்!” என, அத் தென் கடலும் வருத்தத்துடன் கூறிற்று.
முத்துச் சிப்பியைக் கொண்டு வந்து கரையில் குவித்து விட்டு இவ்வுரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அப் பாட்டாளர்கள், “எம் தமிழ் நிலத்தாயே! தண் பெருங் கடலே! வருத்தப்படாதீர்கள். இனி உங்கள் பெருமையை முன்போல் உலகறியச் செய்கிறோம். நமது முன்னோர்கள் போல முத்துச் செல்வத்தை ஈட்டி இனிது வாழ்வோம். வாழ்க நம் பெருமை!” என்று முழக்கினர். நிலமும் கடலும் ஒன்றை யொன்று பார்த்த படியே இருந்தன.
வண்புகழ் மூவர்
1. தமிழரசின் பழமை
ஒரு குடும்பத்திற்கு ஒரு தலைவனும், ஒரு பண்ணையத் திற்கு ஒரு பண்ணாடியும், பத்துப் பதினைந்து பாட்டாளர் களுக்கு ஒரு மேலாளும் தேவைப்படுகின்றனர். தலைவன் இல்லாத குடும்பம், தலைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்காமல், குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் அவரவர் விருப்பம்போல் நடந்துகொள்ளும் குடும்பம் ஒழுங்காக நடைபெறாது. குடும்பத் தலைவனுக்குக் கட்டுப்பட்டு நடவாத குடும்பம் குடும்பம் என்னும் பெயருக்கு உரிமையுடைய தாகாது. கட்டுப்பாடின்றி மனம் போனபடி நடப்பவரைக் ‘கயவர்கள்’ என்கிறார் வள்ளுவர்.
இங்ஙனமே பண்ணாடியும் மேலாளும் இல்லாவிட்டால், பண்ணையாட்கள் பண்ணாடிக்கும், தொழிலாளர்கள் மேலாளுக்கும் கட்டுப்பட்டு நடக்காவிட்டால் பண்ணையமும் தொழிலும் ஒழுங்காக நடைபெறா. தலைமையின் இன்றியமையாமை எத்தகைய தென்பது, ‘எத்தகைய வீரர்களையுடைய படை யானாலும் படைத்
தலைவர் இல்லாவிட்டால் அப்படை பகைவரை எதிர்த்து நின்று ஒழுங்காகப் போர் செய்யாது’ (குறள் - 770) என்னும் வள்ளுவர் வாயுரையால் இனிது விளங்கும். இத்தகைய இன்றியமையாமை குறித்து ஏற்பட்ட வரே யாவர் ஆட்சித் தலைவரும். ஒரு குடும்பத்துக்கொரு தலைவன்; பல குடும்பங் களையுடைய ஊர்க்கொரு தலைவன்; பல ஊர்களையுடைய நாட்டுக்கொரு தலைவன் என்ற முறையில் ஏற்பட்டவனே அரசன். “தமிழ் நாட்டின் தெற் கெல்லையான தென் பெருங்கடல் நிலமாக இருந்த காலமும் உண்டு. பன்முறை ஏற்பட்ட கடல் கோளால் அந்நிலப்பரப்புக் கடலில் மூழ்கியது. அந்நிலப்பரப்பு இன்றுள்ள தென் கடற் கரையின் தெற்கில் ஆயிரத்தைந்நூறு கல் பரவியிருந்தது.”
“ஞாயிறு ஓர் ஒளிப்பிழம்பு. அது தன்னைத் தானே சுற்றுகிறது. அவ்வாறு சுற்றும் விரைவினால், அதினின்றும் சிதறிய ஒரு சிறு திவலையே உலகம் என்பது. உலகம் முதலில் ஆவிப் பிழம்பாக இருந்தது. அது தன்னைத்தானே சுற்றும் விரைவினால் மேற்பாகம் குளிர்ந்து நிலம் ஆயிற்று” என்பது நிலநூல் அறிஞர்களின் ஆராய்ச்சி முடிவு.
ஒரு பம்பரம் சுழலும்போது அதன் நடுவட்டமே மிக விரைவாகச் சுழலும். அது போலவே, உலக உருண்டையும் தன்னைத் தானே சுற்றும்போது அதன் நடுப்பாகமே விரைவாகச் சுழலும். எனவே, அந்நடுபாகந்தான் முதலில் குளிர்ந் திருக்கும். கடல் கொண்ட தென்னிலம் நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருந்ததால், அப்பகுதிதான் முதலில் குளிர்ந்து நிலமாகி, உயிர் வகைகள் தோன்றி வளர்தற்கேற்ற தட்ப வெப்பநிலையை எய்தியிருக்கும். அப்பகுதியே பழந்தமிழ் நாடு. ஆகையால், உலக முதன்மக்கள் தமிழ்மக்கள் என்பதும், உலக முதன்மொழி தமிழ் மொழி என்பதும் ஆராய்ச்சி அறிஞர்களின் முடிந்த முடிவாகும்.
அப்பழந்தமிழ் நாட்டையாண்டு வந்த முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னனை “எங்கோ வாழிய குடுமி - நன்நீர்ப் பஃறுளி மணலினும் பலவே” (புறம் - 9) என. நெட்டிமையார் என்னும் புறநானூற்றுப் புலவர் வாழ்த்துதலாலும், அப்பழந்தமிழ் நாட்டு அரசனான செங்கோன் என்பான் மீது, அந்நாட்டுத் தனியூர்ச் சேந்தன் என்னும் புலவர் பாடிய செங்கோன் தரைச்செலவு என்னும் பழந்தமிழ் நூலினாலும், அக்கடல் கொண்ட பழந்தமிழ் நாட்டில் ஆட்சி நடந்துவந்தது என்பது புலப்படுவதால், தமிழரசு உலக முதலரசு என்பது வெளிப்படை. உலக முதல் நாடு தமிழ் நாடு, உலக முதன் மக்கள் தமிழ் மக்கள், உலக முதன் மொழி தமிழ் மொழி, உலக முதலரசு தமிழரசு என்னும் உண்மையை அறியும் தமிழ் இளைஞர்களின் உள்ளம் உவகைப் பெருக்கால் துள்ளி விளையாடும் என்பதில் ஐயமுண்டோ?
உலக நாடுகளின் அரசு மரபுக்கெல்லாம் வரலாறு உண்டு. இன்ன அரச மரபு இன்ன காலத்தே தோன்றியது என்னும் காலவரையறையுண்டு. ஆனால், தமிழரச மரபுக்கோ அத்தகைய காலவரையறையில்லை. அதனால், வரலாறும் இல்லை. வரலாறில்லாத வரம்பு கடந்த பழமையுடையது தமிழரசு. தமிழ் மக்கள், ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தின் முன்தோன்றி மூத்த குடியினராகையால், அன்னாரின் அரசும் அத்தகைய பழமையுடையதே யாமாகையால், கால வரையறை யில்லாத தாயிற்று.’
தந்தை தாய் மக்கள் என்போர் ஒன்றுபட்டு ஒருங்கு வாழ்வது குடும்பம் எனப்படும். பழந்தமிழ் மக்கள் குடும்பம் என்பதைக் குடி என்னும் பெயரால் வழங்கி வந்தனர். குடியின் ஒழுக்கம் - குடிமை எனப்படும். குடியில் உள்ளவர்கள் குடி மக்கள், வள்ளுவர் குடிமக்களின் இயல்பைக் குடியியல் என 13 அதிகாரங்களால் கூறுகிறார். அக்குடியையும் குடிமக்களை யும் குடிப்பிறந்தார், வாய்மைக்குடி, பழங்குடி, இற்பிறந்தார் என்று சிறப்பித்துக் கூறுகிறார்; இல் - குடி. குலம் என்னும் சொல்லையும் குடி என்னும் சொல்லையும் குடி என்னும் பொருளில் வழங்கு கிறார். இல், குடி, குலம் ஒரு பொருட் சொற்கள். அத்தகைய தமிழ்ப் பழங்குடியிலிருந்து தோன்றியதே தமிழ் அரச மரபு.
2. மூவேந்தர்
தமிழகத்தில் ஆட்சி முறை என்று ஏற்பட்டதோ அன்றிலிருந்து தமிழகம் முடியுடை மூவேந்தர் என்று சிறப்பித்துக் கூறப்படும் சேர சோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர்களால் ஆளப்பட்டு வந்தது. இம்முடியுடை மூவேந்தரை வண்புகழ் மூவர் என்பர் தொல்காப்பியர். வண்புகழ் - வளவிய புகழ் - குன்றாத மிக்க புகழ். ‘வண்புகழ்’ என்னும் அடைமொழி, இவர்தம் தொன்றுதொட்டு வரும் நல்லரசியல்பைக் குறிக்கும். இம் மூவரசர் மரபினர் தமிழகத்தை வழி வழியாக மாணரசாண்டு அத்தகு புகழை அடைந்தனர். தொல்காப்பியர் கி. மு. மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட இடைச்சங்க காலத்தவர் என்பது ஆராய்ச்சி அறிஞர்களின் முடிபாதலின், அவர்க்குப் பன்னெடுங்காலத்திற்கு முற்பட்ட பழமையுடையதாகும் இம்மூவர் மரபு. ‘மூவேந்தர்’ என்னும் தொகைக் குறிப்புச் சொல், சேர சோழ பாண்டியர் என இம் மூவரையுமே குறிக்கும். அத்தகு பழமையுடையவர் இம் மூவரும்.
இம் மூவரசர் மரபும் பாண்டிய மரபு, சோழ மரபு, சேர மரபு எனவே வழங்கி வந்துள்ளன. பாண்டியன், சோழன், சேரன் என்னும் குல முதல்வன் பெயரே அம் மரபினர்க்குப் பெயராக வழங்கலாயின. இம்மூவரசர் மரபில் பாண்டியர் மரபே பழைய மரபாகும். பண்டையர் என்பதே பாண்டியர் எனத் திரிந்தது. கொள் + இ - கோடி, செல் + இ - சேறி எனக் கொள், செல் என்னும் முதனிலைகளுடன் இகரவிகுதி சேர, பகுதி முதல் நீண்டு புணர்ந்தது போலவே, பண்டு + இ - பாண்டி என, பண்டு என்னும் பண்புப் பெயருடன் இகர விகுதி சேர, பண்டு என்பது பாண்டு என முதல் நீண்டு புணர்ந்தது. பாண்டி + அன் - பாண்டியன். பாண்டி + அர் - பாண்டியர். பாண்டிய மரபிலிருந்து பிரிந்தவையே சோழ மரபும் சேர மரபும்.
இம்மூவரசர் மரபும் கடல் கொண்ட தென்னாட்டில் முதல் முதல் தோன்றியது. அப்பழந்தமிழ் நாட்டை வளஞ் செய்த பஃறுளியாற்றங்கரையிலிருந்த மதுரையிலிருந்து அத்தென்னாட்டை ஆண்டு வந்தனர் பாண்டியர். பாண்டியர் அந்நாட்டை ஆண்டு வந்தபோது அதன் வடக்கேயுள்ள தமிழகப் பகுதியைச் சோழரும் சேரரும் ஆண்டு வந்தனர். அத்தென்னாட்டைக் கடல் கொள்ளக் கொள்ளப் பாண்டியர் படிப்படியாக வடக்கே வந்தனர். பின் அவ்வடபகுதி மூன்றானது. இம் மூவரசரும், பழந்தமிழ்ப் பெருங்குடிகளில் மூத்த முதற் குடியினராவர் என்பது. “பெரு நில முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒரு தனிக்குடி” (சிலப் 1: 31 - 2) என்னும் இளங்கோவடிகள் வாக்கால் விளங்கும்.
தமிழ் நாட்டின் கிழக்குப் பகுதியில் - சோழ நாட்டில் - முன்பு சோளம் மிகுதியாக விளைந்து வந்தமையால் அது சோழநாடு எனப் பெயர் பெற்றது. பனைநாடு, தெங்கநாடு என்பன கடல் கொண்ட தென்னாட்டின் உள்நாடுகளாகும். பனையும் தென்னையும் மிகுதியாக இருந்தமையால் அவை அப்பெயர் பெற்றன. மாமரத்துப்பட்டி, கொழுஞ்சிவாடி, ஊணாம்பதி, வரகுப் பாளையம் என மரம், செடி, கொடி, பயிர்ப் பெயர்களால் ஊர்ப்பெயர் வழங்குதலும் இதற்குச் சான்றாகும். பவழம் - பவளம் என ழகர ளகரம் ஒன்றுபட்டு வழங்குதல் போல, சோழம் - சோளம் என வழங்கலானது, சோழ நாட்டை ஆண்டதால் சோழர் எனப் பெயர் பெற்றனர்.
சேரர் என்பது இடத்தால் பெற்ற பெயரேயாகும். சேரநாடு மேற்குமலைத் தொடரின் மேற்குச் சாரலில் அமைந்தது. அதனோடு சார்த்து - அதனோடு சேர்த்து, என்னைச் சார்ந்தவர் என்னைச் சேர்ந்தவர் எனச் சார்தல் சேர்தல் என்பன ஒருங்கு வழங்குதல் போல, சாரல் என்பது சேரல் என வழங்கலானது. குமரன் கோட்டம் - குமர கோட்டம் என்றாவது போல, சேரல் நாடு - சேர நாடு என்றாகியது. சேர நாட்டை ஆண்டவர் சேரர். சேரலை ஆண்டவர் - சேரல். சேரல் பெயர் சேரர் எனவும் வழங்குதல், உதியஞ் சேரல், பெருஞ்சேரல் இரும் பொறை என்னும் சேர மன்னர் பெயர்களால் பெறப்படும்.
3. மூவேந்தர் கொடி
இனி, இம்மூவரசர்க்கும் படை, கொடி, குடை, முரசு, முடி, தார், யானை, குதிரை, தேர் என்பன உரியவென்கின்றார் தொல்காப்பியர். (தொல். மரபு. 71). இவற்றுள் கொடியும் தாரும் அல்லாதன வெல்லாம் மூவர்க்கும் பொது. மூவர்க்கும் வெவ்வேறு கொடியும் தாரும் உடையனவாகும். பாண்டியர் மீன்கொடி, வேப்பந்தார். சோழர்க்குப் புலிக்கொடி, ஆத்திமாலை, சேரர்க்கு விற்கொடி, பனந்தார்.
பகைப் புலத்துப் பொருள் அல்லது பகைப் பொருளை அடையாளமாகக் கொள்ளுதல் பண்டைய மரபு. முருகன், சூரபதுமனாகிய பகைவனின் கூறாகிய மயிலை ஊர்தியாகவும், சேவலைக் கொடியாகவும் கொண்டுள்ளான் என்கின்றது கந்த புராணம். சிவன், தாருகா வன முனிவர்களாகிய பகைவர்கள் ஏவிய மழு, மான் முதலியவற்றைப் படையாகவும் அறிகுறி யாகவும் கொண்டுள்ளான் என்பது புராணம்.
இவ்வாறே, தென்படல் பாண்டி நாட்டின்மீது அடிக்கடி பொங்கி வந்து தொல்லை கொடுத்ததனாலும், கேடுண்டாக்கிய தனாலும் பாண்டியர் அப்புகைப் புலமாகிய கடலின் பொருளாகிய மீனைக் கொடியின் அறிகுறியாகக் கொண்டனர் போலும்!
சோழ நாட்டின் வடபகுதி பண்டு பெரும்பாலும் காடாக இருந்தது. கரிகாலன் அப்பகுதியைக் காடுகெடுத்து நாடாக் கினான் என்பர். அக்காட்டிலிருந்து புலிகள் அடிக்கடி நாட்டிற் புகுந்து ஆடு மாடுகளைக் கொன்று தின்று தொல்லை கொடுத்து வந்திருக்கலாம். எனவே, சோழர் அப்பகைப் பொருளான புலியைக் கொடியாகக் கொண்டனர் போலும்.
வாளும் வேலுமே தமிழர்க்குச் சிறப்புடைய படைகளாகும். ‘வாள் நாட்கோள்’ என்பது புறத்திணைத் துறைகளுள் ஒன்றாகும். ஒள்வாட் கோப் பெருஞ்சேரல், வெற்றிவேற் செழியன், வெற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளி என்னும் மூவேந்தர் பெயர்களும் இதனை வலியுறுத்தும். வட நாட்டி னர்க்கு வில்லே முதன்மையான படையாகும். கோதண்ட பாணி, காண்டீபன், வில்லுக்கு விசயன் என்னும் பெயர்களைக் காண்க. விற்படையினர் அடிக்கடி வடக்கிருந்து வந்து சேரர்க்குத் தொல்லை கொடுத்து வந்திருக்கலாம். வடவர் ஓட்டிச் சென்ற ஆடுகளை மீட்டுவந்து ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்று பெயர் பெற்றமை இதற்குச் சான்றாகும். எனவே, பகைவர் படையாகிய வில்லினைச் சேரர் கொடியாகக் கொண்டனர் போலும். இம் மூன்றும் மீன்புலிவில் எனவும், விற்புலிமீன் எனவும், புலிவிற்கெண்டை எனவும் ஒரு சேர வழங்கும். இதனால், சேர சோழ பாண்டியர் மூவரும் இம் மூன்றையும் தமிழகத்தின் பொதுக் குறியாகவும் கொண்டிருந்தனர் என்பது விளங்கும்.
இவ்வில்லையும் புலியையும் மீனையும் மூவரசரும் கொடியாகக் கொண்டிருந்ததோடு அரசமுத்திரையாகவும், அதாவது ஆட்சிக் குறியாகவும் கொண்டிருந்தனர். இன்று போலவே அன்றும் அவ்வரச முத்திரையைப் பயன்படுத்தி வந்தனர் என்பது, காவரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்தில், வெளி நாடுகளிலிருந்து வந்திறங்கிய பொருள்களுக்கும், ஏற்றுமதி செய்யப்படும் உள்நாட்டுப் பொருள்களுக்கும் மூட்டைகளின் மேல் புலிமுத்திரை பொறிக்கப்பட்டதெனப் பட்டினப்பாலை (128 - 137) கூறுவதால் விளங்குகிறது.
தென் தமிழ் நாட்டுச் செழுவில் கயல்புலி
மண்தலை ஏற்ற வரைக. - (சிலப். 25: 171 - 2)
அதாவது, ‘தமிழ் நாட்டு வில்கயல் புலி என்னும் முத்திரையையுடைய ஓலை எழுதுக’ எனச் செங்குட்டுவனுக்கு வில்லவன் கோதை என்னும் அமைச்சன் கூறுதலால், இன்று அரசமுத்திரை அச்சிடப் பெற்ற அஞ்சலட்டையில் கடிதம் எழுதுவது போலவே, அன்றும் வில் முதலிய அரச முத்திரை பொறிக்கப் பெற்ற ஓலையில் எழுதி வந்தனர் என்பது விளங்குகிறது. மண் - முத்திரை.
மேலும் மூவரசரும் வில்லையும் புலியையும் மீனையும் தனித் தனிக் குறியாகக் கொண்டிருந்ததோடு, அம் மூன்றையும் தமிழ் நாட்டுப் பொதுக் குறியாகவும் கொண்டிருந்தமை அறிந்து இன்புறற்பால தொன்றாகும். மூவரசர் தலைநகர்களின் கோட்டைக் கதவுகளில் இக்குறிகள் பொறிக்கப் பெற்றிருந்தன.
4. செங்கோன்மை
சேரசோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர் மூவரும் தாங்கள் குடிமக்களின் பாதுகாவலர் என்னும் உண்மையை யுணர்ந்து, குடி புரந்தருதலே தங்கள் கடனெனக் கொண்டு நல்லாட்சி புரிந்து வந்தனர். கரிகாலன் என்னும் சோழ மன்னன், தன்னிடம் வழக்குரைக்க வந்த முதியோர் இருவர், தன்னை இளைஞன் என்றும், தன்னால் தங்கள் வழக்கை நன்கு ஆராய்ந்து தீர்ப்புக் கூற முடியாதென்றும் கூறக்கேட்டு, ‘இன்று போய் நாளை வாருங்கள். நாளை தக்கார் ஒருவரைக் கொண்டு தங்கள் வழக்கினைத் தீர்த்து வைக்கிறேன்’ என்று இன்சொற் கூறி விடுத்து மறுநாள் நரை முடித்து முதியோன் போல அறங்கூறவையத்தே அமர்ந்து அவ்வழக்கைத் தீர்த்து, அம்முதியோர் இருவரும் மகிழும்படி செய்ததும், ஒரு சோழ மன்னன், அறியாது ஆன் கன்றைக் கொன்ற தன் ஒரே மகனைத் தரையில் கிடத்தித் தானே தேரூர்ந்து தேர்க்காலில் நெருக்கிக் கொன்றதும், கொற்கைப் பாண்டியனொருவன், பிறர் வீட்டுக் கதவைத் தட்டிய தனது கையைத் தானே குறைத்துக் கொண்டு, பொற்கைப் பாண்டியன் எனப் புகழப் பட்டதும், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் என்னும் பாண்டிய மன்னன், ‘நான் என் பகைவரை வெல்லாவிட்டால், குடிபழி தூற்றும் கோலேனாகுக’ என்று வஞ்சினங் கூறியதும், பாண்டியன் நெடுஞ்செழியன், தான் ஆராயாது கோவலனைக் கொன்றது குற்றமெனக் கண்டதும் உயிர் விட்டு, ‘அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ் செழியன்’ எனப் பெயர் பெற்றதும், அவ்வாறு பாண்டியன் உயிர் விட்டானெனச் சாத்தனார் சொல்லக்கேட்ட சேரன் செங்குட்டுவன், ‘குற்றமற்ற கோவலனைக் கொன்று வளைத்த கோலை, பாண்டி யனின் உடலைவிட்டுச் சென்ற உயிர் நிமிர்த்துச் செங்கோலாக்கியது’ என்றதும் முடியுடை மூவேந்தரின் செங்கோன்மைச் சிறப்புக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
செங்கோல் மன்னர்களாய்த் திகழ்ந்த மூவரசர் ஆட்சிக் காலத்தே தமிழ்நாடு நன்னாட்டின் முன்னாட்டும் நாடாகத் திகழ்ந்தது. அம்மூவரும் தத்தம் நாட்டினை இயற்கைப் பிரிவு களான முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் நானில மாகப் பிரித்து, அந்நானிலத்திற்கும் தனித் தனித் தலைவரை ஏற்படுத்தியிருந்தனர். (‘தொல்காப்பியர் கால ஆட்சிமுறை’ என்ற கட்டுரை பார்க்க). இந்நானிலப் பிரிவேயன்றி நாட்டைப் பல கூறாகப் பகுத்தும், தம் கீழ்ப் பல சிற்றரசர்களை ஏற்படுத்தி யிருந்தனர். அச்சிற்றரசர்கள் இப் பேரரசர்களையும் மிஞ்சிய நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும், இனப் பற்றும் உடையவர் களாய்க் கொடைமடம்பட்ட குணப் பெருங்குன்றுகளாய், ஒப்புரவறிதல் என்னும் திருக்குறள் அதிகாரத்திற்கு எடுத்துக் காட்டுகளாய்த் திகழ்ந்தனர். தமிழர்க்கு இயல்பாக உள்ள வீரம் என்பது அவர்தம் உரிமைச் சொத்தாக இருந்து வந்தது. இவர்கள் வேள் எனவும், வேளிர் எனவும் அழைக்கப் பெற்றனர். பாரி, காரி, ஓரி, ஆய், பேகன், அதியன், நள்ளி, எவ்வி, குமணன், பண்ணன், நன்னன், புல்லி முதலிய கொடை மடம் பட்ட வள்ளல்களெல்லாம் ஒரு காலத்தே தமிழகத்தை யாண்டு வந்த சிற்றரசர்களே யாவர். வேளிர்களாகிய இக்குறு நில மன்னர்களோடு, முடியுடை மூவேந்தர்களாகிய பெருநில மன்னர்கள் கொள்வினை கொடுப் பினை யுடையவர்களாய் இருந்து வந்தனர். இவர்களின் மூத்த முதற்குடி தானே அவர்கள்? கரிகாலன் தாய் அழுந்தூர் வேளின் மகள். கரிகாலன் மனைவி நாங்கூர் வேளின் மகள். செங்குட்டுவன் பாட்டி வெளியன் வேளின் மகள். செங்குட்டுவன் மனைவி இளங்கோ வேளின் மகள். சேர சோழ பாண்டியர் என்னும் பெருநில மன்னர்களும் இக்குறுநில மன்னர்களும் குடியும் குணமும் ஒன்றுபட்டுத் தமிழகத்தை இனிது ஆண்டு வந்தனர்.
5. வீரச் சிறப்பு
முடியுடை மூவேந்தரும் மக்கட்குரிய முக்குணங்களாகிய வீரம், கொடை, புகழ் என்னும் மூன்றினும் மேம்பட்டு விளங்கினர். வீரத்தினால் ஈட்டிய பொருளைக் கொடுத்துப் புகழ்பெறுதலான் இம்மூன்றும் ஒன்றைவிட் டொன்றைப் பிரிக்க முடியாதவையாகும். இம்மூவரும் வீரமே உருவானவர் எனச் சுருங்கக் கூறி விளங்க வைக்கலாம். புறநானூறு, பதிற்றுப் பத்து முதலிய சங்கநூல்களில் இவர்தம் வீரத்தை உள்ளங்கை நெல்லிக்கனிப் போல் விளக்கமாகக் காணலாம். அகம், புறம் என்னும் தமிழர் வாழ்க்கைக் கூறுபாட்டில் புறம் என்பது வீரத்தின் திரட்சியே யாகும். அவ்வீரத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்கினர் இம் மூவரும். இம்மூவரும் இமயம் வரை படையெடுத்துச் சென்று, வடவரசர்களை வென்று, தம் வெற்றியின் அறிகுறியாக இமயத்தில் மீனையும் புலியையும் வில்லையும் பொறித்து மீண்ட வெற்றிப் புகழினையுடைய வராவர். இவ்வாறு பலர் பலமுறை இமயத்தில் புலிவிற் கெண்டை பொறித்துள்ளனர். ஆரியப் படைகடந்த நெடுஞ் செழியன், இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் எனும் அன்னார் பெயர்களே அவர்தம் வீரப்புகழை விளக்கிக் காட்டும். கரிகால் வளவன் என்னும் சோழ மன்னன் இமயம்வரை படை யெடுத்துச் சென்று, தன்னையெதிர்த்த வடவர்களை வென்று, மேலும் வடக்கே செல்ல முயன்றான். ஆனால், அது பனிக்கால மானதால் இமயமலையைக் கடந்து செல்ல முடியாமல் இமயநெற்றியில் புலியைப் பொறித்து மீண்டான். மீண்டு வரும்போது வடநாட்டி லுள்ள வச்சிரநாட்டரசன் முத்துப் பந்தரும், மகதநாட்டரசன் பட்டி மண்டபமும், அவந்தி நாட்டரசன் வாயில் தோரணமும் திறையாகக் கொடுக்கப் பெற்று மீண்டனன் என்னும் சிலப்பதிகாரம். (5 : 99 - 104)
இனி, செங்குட்டுவன் தந்தையாகிய இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பான், வடவரசரை வென்று குமரி முதல் வட இமயத்து ஒரு மொழிவைத்தாண்டு வந்தான். (சிலப். 29) ஒரு மொழிவைத்து ஆளுதலாவது - தன் ஆணையின் படி அடங்கி நடக்கும்படி ஆளுதல். மேலும், இவன் மேல்கடல் தீவுகளில் வந்திருந்து கொண்டு அடிக்கடி நாட்டினுள் புகுந்து தொல்லை கொடுத்து வந்த யவனர் என்னும் மேனாட்டினரை வென்று பிடித்து, கைகளைப் பின் கட்டாகக் கட்டி, நெய்யைத் தலையில் ஊற்றித் துரத்தினான் என்கிறது பதிற்றுப் பத்து. இவன் மகன் செங்குட்டுவன் வடநாடு சென்று, தமிழ் பழித்த கனகவிசயரை வென்று பிடித்து, அன்னார் முடித்தலையில் கண்ணகியின் படிமக் கல் ஏற்றி வந்து அப்பழியைத் துடைத்தனன். இத்தகைய வெற்றிப் புகழுடைய வரை வண்புகழ் மூவர் என்றது பொருத்தமுடைய பெயர்தானே?
தமிழரின் வீரச் சிறப்பினை யறியாது தமிழ் நாட்டின் மேல் படையெடுத்து வந்த பிம்பிசாரன் என்னும் மகத நாட்டரசனை, இளஞ்சேட்சென்னி என்னும் சோழ மன்னன், குடகு நாட்டிலுள்ள செருப்பாழி என்னும் இடத்தில் எதிர்த்து வென்று துரத்திச் செருப்பாழி வென்ற இளஞ்சேட் சென்னி என்ற சிறப்புப் பெயரைப் பெற்றனன். அவ்வாறே படையெடுத்து வந்த பிம்பிசாரன் மகனான பிந்துசாரனை, கொங்கு நாட்டுக் குறுநில மன்னனான மோகூர்ப் பழையன் என்பான் முதுகு காட்டி யோடும்படி செய்தனன்.
இனி இத்தகைய வீரமுடையரேனும், சேர சோழ பாண்டியர் என்னும் இப்பேரரசர்கள் மூவரும் ஒருவர்க் கொருவர் போரிட்டுக் கொண்டதாகவோ, ஒருவர் நாட்டை ஒருவர் பிடித்தாண்டதாகவோ தெரியவில்லை. கடைச் சங்கப் பிற்காலத்தே இம் மூவரசர்க்கிடையே இருந்த ஒற்றுமை ஒருவாறு குன்றலானது. அதனால், களப்பிரர் முதலிய அயலார் தமிழரசர்களை வென்று தமிழகத்தைப் பிடித்து ஆள நேர்ந்தது. அதன் பின்னர், அதாவது கி. பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் அம்மூவரசரும் தாங்கள் தமிழினம் என்பதையே மறந்து ஒருவரோ டொருவர் போரிட்டுக் கொள்வதும், ஒருவர் நாட்டை ஒருவர் பிடித்துக் கொள்வதுமே கடமையாகக் கொண்டு, இனைத்தென அறியாத காலந் தொட்டு வழிவழியாக வந்தமுடியுடை மூவேந்தர் மரபையே அழித்துவிட்டனர்.
எடுத்துக்காட்டாக, செங்குட்டுவன் காலத்தே சோழ நாட்டை ஆண்டவன் கரிகாலன் என்னும் சோழப் பேரரசன் என்பது சிலப்பதிகாரத்தால் தெரிகிறது. இவனொரு பெருவீரன்; இமயத்தில் புலி பொறித்த வண்புகழாளன். இவன் காலத்தே பாண்டி நாட்டை ஆண்டவன் பாண்டியன் நெடுஞ்செழியன். இவனும் பெருவீரன்; இமயம் வரை படையெடுத்துச் சென்று, எதிர்த்தவரை வென்று இமயத்தில் மீன் பொறித்த இரும்புகழாளன். செங்குட்டுவனைப் பற்றிக் கூறவேண்டிய தில்லை.
இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்
முதுநீ ருலகில் முழுவது மில்லை.
- (சிலப் 25 : 165 - 7)
என்ற வில்லவன் கோதை கூற்றே போதும். கடல் சூழ்ந்த உலகைத் தமிழ்நாடாக்கக் கருதினால் - வெல்லக் கருதினால் எதிர்ப்பவர் உலகில் யாரும் இல்லை. ஆம். அத்தகைய எதிரிலா வீரன்தான் அவன்.
இங்ஙனம் ஒப்புயர்வற்ற வீரர்களாக இருந்தும் மூவரும் ஒருவரை யொருவர் பகைத்துக் கொண்டதாகவோ, போர் புரிந்து கொண்டதாகவோ தெரியவில்லை. இவர்கள் ஒற்றுமை யாகவே இருந்து வந்தனர் என்பது, ‘பாண்டியன் நெடுஞ்செழியன் குற்றமற்ற கோவலனைக் கொன்றுவிட்டான் என்ற சொல், என் காதிலும் சோழன் காதிலும் புகுமுன், அவ்வாறு கொன்றது குற்றமெனக் கண்டதும் அவன் உயிர் விட்டு வளைத்த கோலை நிமிர்த்துச் செங்கோலாக்கி விட்டான் என்னும் சொல் புகும்படி செய்து விட்டான்’ (சிலப். 25 : 95 - 9) எனச் செங்குட்டுவன் பாண்டியனைப் பாராட்டுவதும், கனகவிசயர் தென்றமிழ் பழித்தனர் என்றது கேட்ட செங்குட்டுவன் “அருந்தமிழ் ஆற்றல் அறியாராகி” (சிலப். 25 : 161) என மூவரையும் ஒன்றாகவே குறிப்பதும் அம்மூவரும் ஒற்றுமையாக இருந்தமைக்குச் சான்று பகரும்.
இனிப் புறநானூறு, தொல்காப்பியப் புறத்திணையியல் முதலிய புறப்பொருள்கள் இலக்கிய இலக்கணங்களில் கூறப்படும் போர் முறைகள் நடவாதனவற்றைப் பொய்படப் புனைந்து கூறுவனவோவெனின், இல்லை; அவையெல்லாம் உண்மை கூறுவனவேயாம். ஒரு சிலரிடை ஒரேவொரு காலத்தே நிகழ்வதை மிகுத்துக் கூறுதலே நூன்மரபாகும். அவ்வாறு நடந்த போர்களைச் சிறப்பித்துக் கூறுவனவே அப்புறத்திணைத் துறைகள்.
பழந்தமிழரசர்கள் கொடுங்கோலுக் கஞ்சிச் செங்கோலை உயிரினும் பெரிதாக மதித்துப் போற்றி வந்தன ரெனினும், அவருள்ளும் கொடுங்கோலரும் சிலர் இல்லாம லிருந்திரார். அத்தகைய கொடுங்கோல் வேந்தனொருவன் தன் குடி மக்களுக்குக் கேடு விளைத்தால், அந்நாட்டுப் பெரியோர்கள் ஒன்றுகூடி அக்கொடுங்கோலனிடம் சென்று அவ்வாறு கேடு செய்யாமல் இருக்கும்படி கூறுவர். அவன் அவர்கள் சொல்லைக் கேளானாயின், அப்பெரியார்கள், அவனிலும் வலியுடைய அடுத்த நாட்டு அரசனிடம் சென்று கூறுவர். அவன், ‘ஆள்வோனால் கலக்குற்ற’ (கலி. 5) அந்நாட்டு மக்களைக் காத்தற்பொருட்டு அந்நாட்டின் மேல் படை யெடுத்துச் சென்று கூறுவர். அக்கொடி யோனொடு பொருது வென்றடிப் படுத்து, தன் ஆணையின் கீழ்ப்பட்டு ஆளும்படி செய்து மீள்வான். ஒரு சிலர் மண்ணாசையால் அடுத்த நாட்டின் மீது படையெடுத்தலும உண்டு. தமிழர் திறமறியாது பகை கொண்ட அயல் நாட்டினரோடு செய்த போர்களும் உண்டல்லவா? இவ்வாறு நடந்த போர்த்துறைகளே அவை.
இவ்வாறன்றித் தமிழரசர்கள் ஒருவர்க்கொருவர் நேரிடையாகப் பகைகொண்டு போர் புரிந்து கொள்ள வில்லை. அவ்வாறு கொண்டிருந்தால் மூவரசர் மரபு ஏற்பட்டதிலிருந்து பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் சேர நாடு பாண்டிய நாடு என்னும் நாட்டுப் பிரிவு அப்படியே இருந்திருக்க முடியுமா என்ன? என்றோ அழிந்த ஒன்றாகி யிருக்குமல்லவா? அவ்வாறு தமிழரசர்கள் பகைகொண்டு போர் செய்திருந்தால், கடைச் சங்கத்திறுதிக் காலம் வரை எந்த ஒரு வெளிநாட்டினரும் தமிழ் நாட்டின் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்காமல் இருந்திருப் பார்களா என்ன?
6. தமிழ்ப் பற்று
இவ்வாறு இம் முடியுடை மூவரும் ஒற்றுமையாக இருந்து தமிழகத்தைச் சீருஞ் சிறப்புடன் ஆண்டு வந்ததன் காரணம், தமிழினப் பற்றும், தமிழ் மொழியால் ஒன்றுறப் பிணிக்கப் பட்டிருந்ததுமே யாகும். இம்மூவரச மரபினரும் சிறந்த தாய் மொழிப் பற்றுடையராய் இருந்து வந்தனர்; தம் தாய் மொழியால் தம்மைப் புலவர் பாடுவதை அத்துணைப் பெருமையாக மதித்து வந்தனர்; புலவர்களால் பாடப் பெறாமை இழிவென எண்ணி வந்தனர்.
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாகப்
புலவர் பாடாது வரைகவென் நிலவரை.
(-புறநானூறு - 72)
என்னுந் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் கூற்றால் விளங்குகிறதல்லவா? தன்னாட்டைப் புலவர் பாடாமையை எவ்வளவு இழிவாக எண்ணுகிறான் இவன்? இம் மூவரசர்களும் தம்மீது பாடிய பாடலுக்காகப் புலவருக்குக் கொடுத்த பரிசிலை நினைக்கின், இவர்கட்கு தமிழ் மொழிமீது இருந்த பற்றின் எல்லை இனிது விளங்கும். எடுத்துக்காட்டாக:
பத்துப் பாட்டில் ஒன்றான பட்டினப்பாலை என்னும் பாட்டைத் தன் மீது பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவருக்குப் பதினாறு நூறாயிரம் (16, 00, 000) பொன் பரிசளித்துப் பெருமைப் படுத்தினான் கரிகால் வளவன் என்னும் சோழ மன்னன். நரைமுடித்து முறை செய்த நல்லரசன் இவனே! இமயத்தில் புலி பொறித்த இணையில்லான் இவனே! 301 அடிகளையுடையது பட்டினப் பாலை என்னும் அப்பாட்டு. ஓர் அடியின் விலை ரூ. 5315 - 8 - 0 ஆகிறது. என்னே இவ்வளவனின் தமிழ்ப்பற்று!
எட்டுத் தொகை என்னும் சங்க நூல்களுள் ஒன்றான பதிற்றுப் பத்து என்பது சேர மன்னர்கள் பத்துப்பேரின் மேற்பாடப்பட்ட நூறு பாடல்களைக் கொண்டது. முதல் பத்தும் பத்தாம் பத்தும் நமக்குக் கிடைக்கவில்லை. 2- 9 ஆகிய எட்டுப் பத்தும் நூல் வடிவில் வெளிவந்துள்ளன. பத்துப்பாட்டுக்களால் தன்னைப் பாடிய புலவர்க்கு அச் சேர மன்னர் ஒவ்வொருவரும் கொடுத்த பரிசிலை நோக்கினால் அன்னாரின் தமிழ்ப் பற்றும் கொடைத்திறனும் நம்மனோரால் எண்ணமுடியாத அத்தகு பெருமை யுடையனவாகும்.
தன்மீது இரண்டாம் பத்தைப் பாடிய குமட்டூர்க் கண்ணனார் என்னும் புலவர்க்கு, இமய வரம்பன் நெடுஞ் சேரலாதன் என்னும் சேரமன்னன் உம்பற்காட்டு ஐந்நூறு ஊர்களோடு, 38 ஆண்டு தன்னாட்டு வருவாயுள் பாகமும் கொடுத்துப் பெருமைப் படுத்தினான். உம்பல் - யானை. உம்பல் காடு - யனைக் காடு. இது மேற்கு மலைத் தொடரின் மேல் சாரலில் உள்ள ஒரு வளமிக்க காட்டுப் பகுதி. யவனரை வென்று துரத்தியவனும், குமரி முதல் வடவிமயத்தொரு மொழி வைத் தாண்டவனும் இவனே. சேரன் செங்குட்டு வனின் தந்தையும் இவனேதான்!
தன்மீது நான்காம் பத்தைப் பாடிய காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்க்கு, கழங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல் என்னும் சேரமன்னன் நாற்பது நூறாயிரம் (40,00,000) பொன்னும், தான் ஆள்வதிற் பாகமும் கொடுத்துப் பெருமைப்படுத்தினான். இவன் இமயவரம்பன் மகன். இப்பத்துப் பாட்டும் 178 அடிகளே. ஓர் அடியின் விலை ரூ. 22, 528 ஆகிறது. வருவாயுள் பாகம் வேறு! இவனது கொடைக் குணத்தின் பொருளே நமக்கு விளங்கவில்லை. தன் மீது எட்டாம் பத்தைப் பாடிய அரிசில் கிழார் என்னும் புலவர் பெருமானுக்கு, பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னன் கொடுத்த பரிசிலை நினைக்கின் நெஞ்சம் திடுக்கிடுகிறது. அப்பரிசின் தொகை என்ன? அது தொகையற்ற பரிசில்! 181 அடிகளே உடைய அப்பத்துப் பாட்டுக்கும் தன் அரசையே கொடுத்தான் அச்சேரல். அரசு என்றால் நாடு, நகர், வீடு, பொருள் எல்லாம் கொடுத்ததாகத்தானே பொருள்? இவனே முறுகிய தமிழ்ப் பற்றினால், அறியாது முரசுகட்டி லேறிய மோசி கீரனார் என்னும் புலவர் தூங்கியெழும் வரை கவரி வீசி, கவரி வீசிய காவலன் என்ற பெயர் பெற்றவன். அத்தகைய நிலையைத் தமிழ்நாடு இனியொருகால் அடைதலுங் கூடுமோ! இத்தகைய தமிழ்ப் பற்றுடைய சேரநாடு, இன்று மலையாள நாடு என வேறு பெயர் பெற்றதோடு, வேற்று மொழி நாடும் ஆகிவிட்டது.
இனிப் பாண்டியர் தமிழ்ப் பற்றுக்கு முதல் இடைகடை என மூன்று சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்து வந்ததே சாலும். இம் முடியுடை மூவேந்தரும் இவ்வாறு புலவரைப் போற்றித் தமிழ் வளர்த்து வந்ததோடு, தாமும் தமிழ்ப் புலவர்களாகத் திகழ்ந்தனர். வாழ்க வண்புகழ் மூவர் தண் புகழ்!
நனி நாகரிகம்
1. நாகரிகம்
காலத்துக் கேற்ற ஆடையணிகள் அணிந்து கொண்டு தெருவிடைச் செல்லும் நகரமக்களைக் கண்ட நாட்டுப்புற மக்கள், ‘எவ்வளவு நாகரிகம் பாரு! என்ன இருந்தாலும், நகரம் நகரந்தான், நாட்டுப்புறம் நாட்டுப்புறந்தான்! உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?’ எனத் தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்கிறோம் என்பதை அறியாது அந்நகர மக்களைப் புகழ்ந்து சென்றனர்.
அந் நகர மக்களோ, ‘என்ன நாகரிகமற்ற பட்டிக்காடு; உடையையும் நடையையும் பாரு! காலம் போற போக்கே தெரியாதவர்கள். இத்தனை படக்காட்சிகள் வந்தும் இன்னுமா இப்படி இருப்பது?’ என அந் நாட்டுப் புற நல்லார்களை இகழ்ந்த படி கேலிச் சிரிப்புச் சிரித்துக் கொண்டு சென்றனர். இதுதான் இன்றைய நாட்டு நடப்பு; நாகரிகப் போக்கு.
நாகரிகம் என்பது காலப்போக்குக்கு ஏற்றவாறு ஆடை யணிகள் அணிவதும், உண்பதும், உறைவதுமேயாம் என்பது ஒரு சாரார் கருத்து; காலத்துக்கேற்ற கருத்து மாற்றமே, பழக்க வழக்கங்களின் மறுமலர்ச்சியே நாகரிகம் என்பது மற்றொரு சாரார் கருத்து.
ஒரு காலத்தே நாகரிகம் என நன்கு போற்றப்பட்டு வந்தது. பின்னொரு காலத்தே நாகரிக மற்றதாகி விடுகிறது. இது இயற்கையின் போக்காகும். காலச் சூழலின் கருத்து மாற்றமாகும்; பழக்க வழக்கத்தின் பரிமாற்றமாகும். எனவே, இதுதான் சிறந்த நாகரிகம் என நாகரிக நல்வாழ்வை வரையறுத்துக் கூற முடியாது, காலப் போக்கே நாகரிகத்தின் நல்லியல்பைக் கணித்தறியும் கட்டளைக் கல்லாகும். காலப் போக்கென்னும் கட்டளைக் கல்லில் உரைத்துப் பார்த்தே நாகரிகம் என்னும் பொன்னின் மாற்றினை மதிப்பிட முடியும். இது நாகரிகம், இது நாகரிகம் அன்று எனத் தீர்ப்புக் கூறும் ஆற்றல் காலப்போக்குக்கே உண்டு.
முன்னெல்லாம் ஊர்ப்பொதுவில் பணம் வாங்கிக் கொண்டு கூத்தாடுவார்கள். அக்கூத்துத் தெருவில் போடப் பட்ட சிறு பந்தலில் நடக்கும். அது இன்று திறந்த வெளி அரங்கு எனப்படு கிறது. தெருவில் ஆடுவதால் அக்கூத்துத் தெருக்கூத்து எனப்படும். பழங்காலத்தே அது பொதுவியற் கூத்து எனப் போற்றப் பட்டு வந்தது. வள்ளுவரும், ‘கூத்தாட்ட வைக் குழாம்’ என்கின்றார். ஆனால், அக்கூத்து இன்று நாகரிகமற்றதாகக் கருதப்படுகிறது. இது காலத்தின் போக்கு. காலப்போக்கென்னும் பாவியே தமிழ் இசை, நாடகங்களை யெல்லாம் கொன்று விட்டான்.
நாற்பதாண்டுகளுக்கு முன்னெல்லாம் மைசூர்க் கூத்தாடிகள் தமிழ் நாட்டில் வந்து கூத்தாடுவார்கள். அக் கன்னடியர் தமிழை ஒருவாறு கொச்சையாகப் பேசிப் பாடி ஆடுவார்கள். பெரும் பாலும் அரிச்சந்திர நாடகந்தான் ஆடுவார்கள். புதிதாக ஒரு நடிகர் வரும்போது, இருவர் வேட்டியால் திரையைப் பிடித்துக் கொள்வர்; நடிகர் திரைக்குள் இருந்து பாடுவார். அவர் பாடுவதைப் பலர் தொடர்ந்து பாடுவர். அவர்க்குப் பின் பாட்டுக்காரர் என்பது பெயர். இவ்வாறு பாடுதல் பண்டு ‘வாரம் பாடுதல்’ (சிலப்: 6 - 19) என வழங்கிற்று. அந்நடிகர், திரையைத் தாழ்த்தித் தாழ்த்திக் கூட்டத்தினர்க்கு முகத்தைக் காட்டிக் காட்டிப் பாடிக்கொண்டே திடீரென்று திரையை நீக்கிக் கொண்டு ஆடாடென்று ஆடுவர். பின்பாட்டுக்காரர் பாடுவர். இதோ ஒரு காட்சி; அரிச்சந்திரன், சந்திரமதி, லோகிதாசன் ஆகிய மூவரும் திரைக்குப்பின்,
காரிக் கருக்கானி மின்னுரு மின்னுரு
மாரிப் பரக்கானி ரொங்குரு ரொங்குரு
ராசாதி ராசெ வந்திச்சு
சந்திரமதிப் பொம்மெ வந்திச்சு
லோகிதாசக் குட்டி வந்திச்சு - காரிக்
எனப் பாடுவர். கூட்டம் கொல்லென்று சிரிக்கும். காதில் கடுக்கன் மின்னுது மின்னுது, மார்பில் பதக்கம் தொங்குது தொங்குது என்னும் தமிழ்தான் கன்னடியரிடம் அந்தப் பாடு படுகிறது! இது அக்கால நாகரிகம். இன்று நாடக உலகம் எத்துணை மாறுபாட்டினை அடைந்துள்ளது என்பதை நோக்கினால், நாகரிகம் இன்னவென்பது தெற்றென விளங்கும்.
காலில் வீரக்கழலும், கையில் மணிப் பொன் காப்பும், தோளில் வாகுவளையமும், மார்பில் பதக்கமும், முத்தாரமும், காதிற் கடுக்கும், மேற்காதில்முறுகும், ஒரு காலில் வெள்ளிக் காரையும் அணிதல் ஒரு காலத்தே ஆடவரின் நாகரிகமாகக் கொள்ளப்பட்டது. ஆறுமுழ வேட்டியைக் கோவணம் போட்டு உடுத்து, அவ் வேட்டிக்கு மேல், குறுமத்தங்காய் போன்ற அரை மூடிக் காயோடு கூடிய வெள்ளி அரை ஞாணைப் போட்டு, தலையில் பெரிய உருமாலைக் கட்டி, தோளில் ஒரு நீண்ட துண்டைப் போட்டுக் கொள்வது பெரிய வர்களின் நாகரிகமாகக் கருதப்பட்டது. அன்று சட்டை போடுவது மிகமிக அரிது. வேட்டியுந் துண்டுந்தான் ஆடவரின் பொதுவான உடை. மேல் துண்டு ஆடவரிடத்திலிருந்து விடைபெற்றுக் கொண்டது. பெரும்பாலும் அதன் தொழிலைக் கைக்குட்டை கவர்ந்து கொண்டது. தலைக்குத் துண்டு கட்டும் பழக்கம் பெரும்பாலும் ஒழிந்துவிட்டது. இன்று சட்டை போடாதது நாகரிகமற்ற தாகிவிட்டது, கால்வழிய வேட்டி, அரையுடை (நிக்கர்), மெய்யுறை (பனியன்), சட்டை, கைக்குட்டை என்பவை இன்று ஆடவரின் உடை நாகரிகம்.
கழுத்தில் மலர் மாலை யணிந்துகொள்வதும், குடுமியில் மலர்மாலையைச் சுற்றிக் கொள்வதும் முன்பு ஆண்களின் நாகரிகமாகக் கொள்ளப்பட்டது. சேர சோழ பாண்டியர் முறையே பனைமாலை, ஆத்திமாலை, வேப்பமாலையை அடையாள மாலையாகக் கொண்டிருந்ததும், வீரர்கள் வெட்சி, தும்பை முதலிய திணைப் பூக்களைச் சூடிவந்ததும் மாலையணிதல் பண்டைய நாகரிக மென்பதைப் பெற வைக்கும். இன்று தலைவர்களுக்கு அணியும் மாலையைக் கழுத்தில் போட்டதும் எடுக்காவிட்டால் நாகரிகமற்றதாகக் கருதப்படுகிறது.
ஒரு காலத்தே முடியும் மீசையும் தாடியும் வளர்ப்பது ஆடவரின் நாகரிகமாகக் கொள்ளப்பட்டது. புராணங்களிற் கூறப்படும் முனிவர்கள் என்போர் இவ்வாறுதான் இருந்து வந்ததாகத் தெரிகிறது. மற்றொரு காலத்தே குடுமியும் முறுக்கு மீசையும் நாகரிகக் குறியாகக் கொள்ளப்பட்டன. (குஞ்சி என்பது - தலைமயிரைப் பிடரிவரை விட்டு நறுக்கிக் கொள்ளுதல் - பாகவதர்கள் போல) பழைய அரசர்களும் போர்வீரர்களும் பெரும்பாலும் குஞ்சிதான் வைத்திருந்தனர். காரணம் பகைவர் பின்னால் வந்து வாளால் வெட்டினால் அது தடுத்து விடும். மயிரில் வாள் பாயாது; அதற்காகவே அவ்வாறு நறுக்கிக் கொண்டிருந்தனர். ‘குஞ்சியழகும்’ என்பது நாலடியார் காலத்து நாகரிகம். இன்றோ, ‘வாலுப் போச்சுக் கத்தி வந்தது டும் டும்’ என்பது போல, மீசை போய்க் குறுங் குஞ்சியும் (கிராப்), மழித்த முகமும் நாகரிகமாகி விட்டன. ‘மழித்தலும் நீட்டலும்’ (குறள்) என்பதால், மயிரைச் சிரைத்துக் கொள்ளுதல் வள்ளுவர் காலத்த நாகரிகமாகும். குஞ்சியைக் குறுகலாக வெட்டிக் கொள்வது குறுங்குஞ்சி. எனவே, இதுவே மேனாட்டு நாகரிகப் போலியன்று. தமிழர் பழைய நாகரிகமேயாகும்.
முன்னர் ஆண்கள் பத்துப் பன்னிரண்டாண்டு வரை மகளிர் போல முடிவைத்துக் கொண்டிருந்து அதன் பின்னர்ச் சிரைத்துக் குடுமி வைத்துக் கொள்வது வழக்கம். தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன் பன்னி ரண்டாண்டுக்கு மேல் முடித்தலையுடன் இருந்து, பின் குடுமி வைத்துக் கொண்டு போருக்குப் புறப்பட்டதாகப் புறநானூறு (77) கூறுகிறது. முப்பதாண்டுகட்கு முன் வரை குடுமி ஆண்களின் அடையாளமாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் இன்று அது ‘சிண்டு’ எனப் பழிக்கப்படுகிறது. சிண்டு போய்ச் சீப்புக் கண்ணாடி வந்தன. இவ்வளவும் ஆடவர் நாகரிக மாற்றம். இன்னும் என்னென்ன மாறுபட இருக்கின்றனவோ!
2. மகளிர் நாகரிகம்
தமிழ் நூல்கள் மகளிர் காதுகளுக்கு வள்ளை இலையை உவமை கூறுகின்றன. அவ்விலை நீண்ட வளையம் போல் இருக்கும். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் எனப் பெண்கள் பருவம் எழு வகைப்படும். 8 முதல் 11 ஆண்டு வரையுள்ள நாலாண்டுகளும் பெதும்பைப் பருவகாலமாகும். சிறுமியர் முன்பெல்லாம் இப் பருவம் தொடங்கும் வரை மயிர்த் தலையுடன் இருப்பர். எட்டொன்பதாண்டானதும் காது குத்தி பஞ்சு போட்டுப் போட்டுக் காதின் துளையைப் பெரிதாக்குவர். குறவன் அல்லது குறத்திதான் பஞ்சு போடுவது வழக்கம். ஒரு மாதத்திற்கு மேல் நாடோறும் பஞ்சு போடுவர். பஞ்சை ஒவ்வொரு நாளும் பெரிது பண்ணிக் கொண்டே போவர். துளை பெரிதாகிப் புண் ஆறின பிறகு வறண்ட சோளத் தண்டுகளை ஒன்று சேர்த்துக் கசக்கிச் சிறிதாக்கிப் போட்டுத் தண்ணீர் விடுவர். அத்தண்டு உதித்துப் பெரிதாகும். அத்தண்டு தக்கை அல்லது குதம்பை எனப்படும். குதம்பையணிந்த பெண்ணும் குதம்பை எனப்படுவாள்.
மாங்காய்ப்பால் உண்டு மலைமே லிருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி.
என, இப்பருவப் பெண்ணை விளித்து முன்னிலை யாக்கிப் பாடியதனாற்றான் அச் சித்தருக்குக் குதம்பைச் சித்தர் எனப் பெயர் ஏற்பட்டது. எவ்வளவு பெரியகுதம்பை கோட முடியுமோ அவ்வளவு பெரிய குதம்பைப் போட்டுத் துளையைப் பெருக்கித் துளை பெரிதான பிறகு, ஈயத்தால் உருண்டையாக வளையம் போல் செய்யப்பட்ட இரண்டு மூன்று குணுக்குகளைப் போடுவர். அவை கீழே இழுத்துக் காதை நீட்டி வள்ளை இலைபோலச் செய்யும். காதுகள் தோளைத் தொடும்படி நீளும். காது குத்தும் போது ஆண்களுக்குப் போல அப் பெதும்பையர்க்குத் தலை மயிரைச் சுற்றிலும் சிரைத்துக் குடுமி வைப்பர்; குணுக்குப் போட்ட பின் மயிர் வளர்த்துச் சடையோ கொண்டையோ போடுவர். பெதும்பைப் பருவம் தாண்டி மங்கைப் பருவம் வரும்வரை குணுக்குப் போட்டிருப்பர்; பின் காது நகை போடுவர். முடுச்சு, நாகபடம், பூச்சிக் கூடு என்னும் காது நகைகள் அன்று அணிந்து வந்தனர். நடக்கும் போது அந்நகையணிந்த காதுகள் முன்னும் பின்னும் ஆடுவதற்குப் பொன்னூசல் ஆடுதலை உவமை கூறியுள்ளனர் புலவர்கள். செங்குட்டு வனால் செய்யப் பட்ட கண்ணகி சிலைபோல இலங்கைக் கயவாகு மன்னன் செய்த சிலையொன்று வெள்ளையரால் கொண்டு போகப்பட்டு இலண்டன் பொருட்காட்சியில் வைக்கப் பட்டுள்ளது. அச்சிலையின் காதுகள் வள்ளை இலைபோல் நீண்டுள்ளன. ‘சேரன்செங்குட்டுவன்’ என்னும் நூலில் அப்படம் உள்ளது. இன்றும் மதுரை திருநெல்வேலிப் பகுதியில் அத்தகைய காது களையுடைய பெண்கள் இருப்பதும் இதற்குச் சான்றாகும்.
ஆனால், குதம்பை போட்டுக் குணுக்குப் போட்டு இலக்கியச் சிறப்புப் பெறும்படி வளர்த்த அக்காதுகள் இன்று நாகரிக மற்றவையாகி விட்டன. அத்தகைய காதுகளை யுடைய மகளிர் இன்று அக்காதுகளை வெட்டிக் குறுகலாக ஒட்டவைத்துத் தோடு போட்டுக் கொள்கின்றனர். மகளிர் காதுக்குவமையாகக் கூறும் சிறப்புப் பெற்றிருந்த வள்ளையிலை இன்று மதிப்பிழந்து விட்டது. இக்காலப் பொற் கொல்லருக்கு அந்தக் காது நகைகள் செய்யவே தெரியாது.
மேலும், அன்று மேற்காது குத்தி அதிர் சேகண்டி போன்ற கொப்புப் போட்டுக் கொள்வர். அது காதுக்குள் காற்றுப் புகாது மறைத்துக் கொள்ளும். பின்னர் அது பூவரசம்பூக் கொப்பாகி இன்று ஒழிந்து விட்டது. கொப்புக்காது குத்தும் வழக்கமே நின்றுவிட்டது. அல்லைக் காது குத்திக் கிராம்புத் தளுக்கும், முருந்துக்காது குத்தி மொட்டுத்தளுக்கும் போடுவதும் இன்று ஒழிந்து விட்டன.
‘பணங்காசு கூடவா வருகிறது? செத்தாக்கூட வருவது இது தானே?’ என்று பெண்கள் உடம்பில் பச்சைக் குத்திக் கொள்வதை நாகரிகமாகக் கருதினர் ஒருகாலத்தே. பெண் களுக்கு நாலைந் தாண்டானதும் நெற்றிப் பச்சை குத்துவார்கள். அது புருவத்தின் நடுவிலிருந்து நெற்றியில் தலைமயிர்வரை நேர்கோடு போல் இருக்கும். பின்னர் நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தில் பொட்டுப்போல் குத்தி வந்தனர். செக்கச் செவேலென்ற உடம்பைப் பச்சைப் பசேலென்று செய்வது அழகுக்கழகு செய்யும் நாகரிகமாகக் கருதப்பட்டது. செந்நிற முடையவர்களே உடல் முழுவதும் பச்சைக் குத்தி உடம்பைப் பச்சை நிறமாக்கிக் கொள்வர். சிலர் கை கால்களில் சிறு சொட்டை கூட இல்லாமல் குத்திக் கொள்வர். சரம், வங்கி, தெப்பக்குளம், மீன், கிளி, யானை, சிங்கம், கங்கணம், மோதிரம் என அந்தந்த இடங்களுக் கேற்ற பச்சை குத்தி வந்தனர். ஐந்தாறாண்டிலிருந்து முப்பத்தைந் தாண்டு வரை அப்பச்சை குத்தி முடிப்பர். எல்லாப் பெண்களும் கட்டாயம் நெற்றிப் பச்சை குத்திக் கொள்வார்கள். அது பேதைப் பருவத்திலே குத்துவர். இதுவே பச்சை குத்துகிற பருவமெனப் படும். இன்றும் திருச்சி மாவட்டத்தில் துறையூர் முதலிய வட்டங் களிலுள்ள வேளாள வகுப்பு ஆடவர் நெற்றிப் பச்சைக் குத்திக் கொள்கின்றனர்.
முன்பெல்லாம் தெருக்கூத்து அல்லது நாடகத்தில் பச்சைக் காரி வருதல் ஒரு பாகம். இன்று பச்சை குத்துதல் நாகரிகமற்ற தாகிவிட்டது. பச்சைக்காரர் என்னும் ஒரு கூட்டத்தினரே இன்று வேலையில்லாத் திண்டாட்டத்திற் குள்ளாகி விட்டனர்.
முன்பு மஞ்சட் பூசிக் கொள்ளுதல் மகளிர்க்கு மங்கல மாகக் கருதப்பட்டு வந்தது. கணவனை யிழந்த கைம்மைகள் மங்கல மிழந்ததற்கு அறிகுறியாக மஞ்சட் பூசிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், இன்றோ மஞ்சட் பூசுதல் நாகரிகமற்ற தாகிவிட்டது. ‘மஞ்சள் அழகும் அழகல்ல’ என்ற நாலடியார் வாக்கை இன்று மகளிர் உண்மையாக்கி விட்டனர். “மஞ்சள் பூசும் முகத்தை மறைத்ததே சோப்புக் கற்றை” என்று இரங்கிப் பாடும் நிலையை அடைந்துவிட்டது இன்று மகளிர் மஞ்சள்.
கோவலனைக் கொல்வித்து, பாண்டியன் நெடுஞ் செழியனை உயிர்விட்டுத் தமிழர் செங்கோன்மையை உலகறியச் செய்யும்படி செய்து, பாண்டியன் கோப்பெருந் தேவியை உடனுயிர் நீத்துத் தலையன்பிற்கு எடுத்துக்காட்டாகத் திகழும்படி செய்து, கொன்று, செங்குட்டு வனால் தமிழைப் பழித்த கனகவிசயரை வென்று இமயத்தி லிருந்து கற்கொணர்ந்து கண்ணகிக்குச் சிலை செய்து கோவில் எடுத்து வழிபாடும் செய்யும்படி செய்து, பத்தினிப் பெண்டிரின் பெருமையை உலகறியச் செய்து, மணிமேகலை என்னும் இளமங்கையைத் துறவு பூணச் செய்து, காஞ்சனன் என்னும் கந்தருவனைக் கொண்டு உதய குமரன் என்னும் சோழ இளவரசனைக் கொன்று சிலப்பதிகாரம் மணிமேகலை என்னும் இரு செந்தமிழ்க் காப்பியங்களைத் தமிழர்க்குத் தந்து, இலக்கியத்தின் பெயரொடு சிறப்புற்ற சிலம்பு எனக்கேன் அத்தனை தொல்லை என்று, இன்று மகளிர் காலை விட்டே விடைபெற்றுக் கொண்டுவிட்டதல்லவா?
பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை, அரியகம், குறங்கு செறி, முத்தரை, கண்டிகை, தோள்வளை, சூடகம், மத்தகமணி, பொன்வளை, அரியகம், வால்வளை, பவழப்பல்வளை, வாளைப் பகுவாய், பீலி, நெளி, மாணிக்கபீடம், தாள்செறி, வீரச்சங்கிலி, நுண்டொடர், பூண் ஞாண், சவடி, சரப்பளி, சந்திரபாணி, கடிப்பிணை, தெய்வவுத்தி, வலம்புரி, தொய்யகம், புல்லகம், (சிலப் 6: 84 - 107) முதலிய மாதவி யணிந்த அணிகளை இன்று எந்த மகளிர் அணிகின்றனர்? இல்லை யாருக்கு இவை அணியும் இடங்கள் தெரியும்? இன்றும் கூறிக்கொண்டே போகலாம் நாகரிக மாற்றத்தினை?
உண்பதினும் உடுப்பதினும் பூண்பதினும் பூசுவதினும் இன்னும் எத்தனையெத்தனையோ காலத்துக்கேற்ற மாறு பாடுகள்! நாகரிகம் என்பது சகடக்கால்! அது மாறி மாறி வந்துகொண்டேதான் இருக்கும். இவ்வுண்மை யறியார், ’இன்று தமிழ் மக்கள் மேற்கொண்டுள்ள நாகரிகம் மேனாட்டார் நாகரிகம். இத்தகைய நாகரிக நல்வாழ்வு தமிழ் மக்கள் ஒரு காலத்தும் வாழ்ந்ததில்லை’என வாயும் மனமும் கூசாது கூறுகின்றனர். பழந்தமிழர் வாழ்க்கை முறையினை, நாகரிக நல்வாழ்வினை, நனி நாகரிகத்தை அறியாது கூறும் அவர் தம் பொய்க் கூற்றை என்னென்பது! பழங்காலத் தமிழ்மகளிரின் நாகரிக நல்வாழ்வைப் பாருங்கள்! எது நாகரிகம், எது போலி நாகரிகம் என்பது வெளிப்படும்.
3. மேனியும் கூந்தலும்
உடலின் இயற்கை யழகினை மிகுதிப்படுத்திக் கொள்வது மகளிரின் இயற்கைக் குணமாகும். இது அவர்கட்கே யுரிய தனிப் பண்பு எனவுங் கூறலாம். உடலின் இயற்கை யழகை, பளபளப்பைக் கெடுப்பது உடலில் விழும் திரைகளேயாகும். உடம்பின் மேல் திரை விழாமல், உடற்றோல் சுருங்காமல் இருக்கும்படி செய்ய அறிந்து கொள்வது நாகரிக நல்வாழ்வாகும். பழந்தமிழர் மகளிர் இதனை நன்கு அறிந்திருந்தனர். உடலின் மேற்றோல் முறுக்கமாக இருந்தால் சுருக்கம் விழாது. தோலை முறுக்கி இழுத்துப் பிடிக்கும் ஆற்றல் துவர்ப்புக்கு உண்டு இவ்வுண்மையைப் பழக்கத்தில் அவர்கள் அறிந்திருந்தனர். பாக்கு முதலிய துவர்ப்பான பொருள்களை வாயில் போட்டால் அவை ஊறினதும் நாக்கு மந்தமாகி விடுகிறதல்லவா? எளிதில் இனிமையாகப் பேச முடிவதில்லை யல்லவா? அவ்வாறே ஏன் உடம்பின்மேல் உள்ள தோலும் ஆகாது? எனப் பயன்படுத்தி ஆராய்ந்து கண்டதாகும் இவ்வுண்மை அஃதென்ன?
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், நாவல், அத்தி, இத்தி (இச்சி), ஆல், அரசுப்பட்டைகள், முத்தக்காசு, மாந்தளிர் என்னும் பொருள்கள் துவர்ப்புடையவையாகும். இவை பத்துத் துவர் எனப்படும். இவற்றை ஒரு பெரிய கொப்பறையில் ஊற வைப்பர். அவை ஊறிய நீரில் மூழ்கிக் கொஞ்சநேரம் கழித்து நீராடுவர். அதனால், தோல் முறுக்கேறி மேனி பள பளப்பாகத் திகழும்.
அன்னார் அஃதோடு அமையவில்லை, உடல் மினு மினுப்பாக இருந்தால் மட்டும் போதுமா? கெட்ட நாற்றமின்றி நறுமணங் கமழ வேண்டுமல்லவா? அவ்வாறு மேனி மணக்க வேண்டுமென்று விரும்பினர். அவ்வாறு விரும்புவது அவர்க்கு இயற்கைதானே? மணத்தை விரும்புங் குணம் இயல்பாகவே மகளிர்க்கு அமைந்ததோர் அருங்குணமல்லவா? இது பற்றியே யன்றோ மகளிர் நறுமண மலர்களைச் சூடிக் கொள்வதும், சாந்து, புனுகு முதலிய மணப் பொருள்களைப் பூசிக் கொள்வதும், அப்பத்துத் துவரோடு ஐந்து விரையையும், முப்பத்திரு வகை ஓமாலிகையையும் கலந்து ஊறவைப்பர். அவ்வாறு அந்நாற்பத்தேழு பொருள்களும் ஊறிய நன்நீரிலே அவர்கள் முழுகி வந்தனர்.
பத்துத் துவரினும், ஐந்து விரையினும்,
முப்பத் திருவகை ஓமா லிகையினும்
ஊறிய நன்னீர் உரைத்தநெய் வாசம்
நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டி.
- (சிலப். 6. 76 - 9)
என்பது இளங்கோவடிகள் வாக்கு. கோட்டம், துருக்கம், தகரம், அகில், சந்தனம் என்பது ஐந்து விரையாகும். விரை - மணம், “கடலிடைக் கோட்டம் தேய்த்துக் கழிவது கருமமன்று” என்னும் கம்பர் வாக்கால், கோட்டம் முதலிய ஐந்தும் அத்தகைய அருமையான நறுமணப் பொருள்கள் என்பதும், கம்பர் காலத்தும் (கி. பி. 13 ஆம் நூற்றாண்டு) தமிழ் மகளிர் அவற்றைப் பயன்படுத்தி வந்தனர் என்பதும் விளங்குகிறது.
முப்பத்திருவகை ஓமாலிகையாவன: இலவங்கம், பச்சிலை, கச்சோலம், ஏலம், நாகணம், கோட்டம், நாகம், அதாவரிசி, தக்கோலம், நன்னாரி, வெண்கோட்டம், கத்தூரி, இலாமிச்சம், கண்டில், வெண்ணெய், கடுக்காய்ப்பூ, நெல்லிப்பூ, தான்றிப் பூ, துத்தம், வண்ணக் கச்சோலம், அரேணுகம், ஆஞ்சி, சயிலேகம், புனுகு, புன்னைத்தாது, புலியுகிர், பூஞ்சாளம், தமாலம், வகுளம், பதுமுகம், நுண்ணேலம், கொடுவேரி என்பன.
இவை எத்தகைய கண்டுபிடிப்புகள்! இன்றும் கத்தூரி மஞ்சள், பூலாங் கிழங்கு, பச்சிலை முதலியவற்றை அரைத்துத் தேய்த்துக் குழந்தைகளுக்குக் குளிப்பாட்டுவதுண்டு. இவ்வாறு பத்துத் துவரும் ஐந்து விரையும் முப்பத்திரு ஓமாலிகையும் ஊறிய நீரில் மூழ்கிப் பின் நறுமணக் கலவை தேய்த்து நன்னீரில் குளிப்பர் என்பது, “விதியாற்றான் ஆக்கிய மெய்க் கலவைபோல்” என்னும் பரிபாடலால் (7 : 20) தெரிகிறது. இதனாற்றான் அக்காலத் தமிழ் மகளிரின் மேனி மினு மினுப்பாக இருந்ததோடு, நறுமண முடையதாகவும் இருந்தது போலும்!
யோசனை கமழும் வாச மேனியர். - (பரிபாடல் - 12: 25)
முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம். - (குறள் - 1113)
வெறிநாற்றம் - நறுமணம்.
அனுமன் சீதையைத் தேடிக் கொண்டு இலங்கை மகளிர் இருந்த அந்தப்புரம் சென்றானாம். பூங்காவுக்குட் புக்கதுபோல் இயற்கை மணம் கமழ்ந்ததாம். - கம்பர்.
நறுமணப் பொருள்கள் பல கலந்தரைத்த சிவந்த கலவையைப் பூசி ஒருத்தி ஆற்றில் நீராடினாள். அதனால் அந்த ஆற்றுநீர் செந்நீரானது. ஆற்றிலுள்ள வெண்டாமரை செந்தாமரை மலரானது. மடையிலிருந்த கொடிகளெல்லாம் பவழக் கொடிகளாயின என்கிறார் ஒரு புலவர். இது உயர்வு நவிற்சியாய் இருந்தாலும் மகளிர் நறுமணக் கலவை தேய்த்துக் குளித்தனர் என்னும் உண்மை பெறப்படுகிற தல்லவா?
அம் மகளிர் இவ்வாறு நீராடும்போது தலைக்கு நறுமண எண்ணெய் (தைலம்) தேய்த்துக் குளிப்பர். மயிர் நீளமாக வளர்வதற்காகவே அந்நறுநெய் தேய்த்துக் குளிப்பர். பெண்களுக்குத் தனியழகைத் தருவது தலைமயிரே. நீளமான மயிரை விரும்பாத பெண்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மிக நீண்ட மயிரைப் பெண்கள் மிகவும் விரும்புகின்றனர் என்பது.
அல்லார் தலைமயிரும் ஐந்துமுழம் ஆறுமுழம்
ஆரணங்கு கூந்தலதோ அறுபத்து நான்குமுழம்.
- (அல்லியரசாணி மாலை.)
என்னும் புகழேந்திப் புலவர் வாக்கால் விளங்கும். இது, எவ்வளவு நீளமயிர் இருந்தாலும் பெண்கள் போதுமென்று அமையாத விருப்பமுடையவர் என்பதைக் குறிப்பதாகும். மயிர் கொஞ்சமாக உள்ளவர் சில்லோதி எனவும், மயிர் அடர்ந்து நீண்டுள்ளவர் பல்லோதி எனவும் பிரித்து அழைக்கப் பட்டு வந்தனரென்றால், மயிர்க்கு அக்கால மகளிர் கொடுத்த மதிப்புச் சொல்லுந் தரத்ததாமோ? ஓதி - மயிர். மேலும் மயிர் நீண்டு சுருண்டிருக்க வேண்டுமாம். நீண்டு சுருண்ட மயிரையடைவர் சுரிகுழல் என அழைக்கப்பட்டனர். சுரிதல் - சுருளுதல். சுரிகுழல் - சுருண்ட குழலையுடையவள், குழல் - மயிர்.
மயிர் இவ்வாறு நீண்டு சுருண்டிருப்பதோடு முடிந்தால், சடைபின்னினால் பெரிதாகவும் இருக்க வேண்டுமல்லவா? மயிர் மொறுமொறென்று இருந்தால் தான் முடிந்தால் பொது பொதென்று பெரிதாக இருக்கும். அவ்வாறு பெரிதாக மட்டும் இருந்தால் போதுமா? நறுமணங் கமழ வேண்டாமா? இதற்காகவே, நீராடியபின், புனுகுநெய் தேய்த்துக் கூந்தலை உலர்த்தி, அதன்பின் கூந்தலுக்கு அகிற் புகை யூட்டி, மொறு மொறென்று நறுமணங் கமழும்படி செய்வர்.
மாடிமீதிருந்து மகளிர் கூந்தலுக் கூட்டும் அகிற் புகை மேலே சென்று முகிலொடு கலத்தலால், மழை பெய்யும்போ தெல்லாம் அகில் மணங்கமழும் என்கின்றார் புகழேந்தியார். அந்த அழகான கருத்துடைய பாட்டைப் பாடஞ்செய்து கொள்ளுங்கள். இதோ அப்பாட்டு:
நின்றுபுயல் வானம் பொழிந்த நெடுந்தாரை
என்றும் அகில்கமழும் என்பரால் - தென்றல்
அலர்த்தும் கொடிமாடத் தாயிழையார் ஐம்பால்
புலர்த்தும் புகைவான் புகுந்து. - (நள வெண்பா- 13.)
புயல் - மேகம். வானம் நின்று - வானத்திலிருந்து. ஐம்பால் - கூந்தல். முதலில் புனுகுநெய் தேய்த்து அகிற்புகை யூட்டினர். அகிற்புகை யூட்டியதனால் நறுமணம் குறைந்துவிடு மல்லவா? அவ்வாறு எண்ணிய அம்மகளிர், அகிற்புகை யூட்டிய பின்னர்க் கத்தூரிக் குழம்பினைத் தடவி நறுமணங் கமழச் செய்வர்.
புகையிற் புலர்த்திய பூமென் கூந்தலை
வகைதொறு மான்மதக் கொழுஞ்சே றூட்டி.
-r- (சிலப்: 6: 80 - 1)
மான்மதம் - கத்தூரி. சேறு - குழம்பு. பழந்தமிழ் மகளிர் கூந்தலழகுக்காக எடுத்துகொண்ட முயற்சியை நோக்கினால், இன்றைய மகளிர் நாணத்தினால் தலைகுனிய வேண்டும்போ லன்றோவுள்ளது? நறுநெய் தேய்த்துக் குளிக்கிறார்கள். பின்பு புனுகு நெய் பூசுகிறார்கள்; பின் அகிற் புகை ஊட்டுகிறார்கள்; மேலும் கத்தூரிக் குழம்பைத் தடவுகிறார்கள். அம்மம்ம! எத்தகைய அரும்பெரு முயற்சி!
4. அழகுக் கலை
மேனாட்டு மகளிர்தாம் அழகுக்கலையில் தேர்ச்சி பெற்ற வர்கள். தமிழ் மகளிர் அழகுக் கலையொன்றும் அறியாதவர்கள். இன்று தமிழ் மகளிர் மேற்கொண்டுள்ள அழகுச் செயல்கள் மேனாட்டு மகளிரைப் பார்த்துச் செய்வனவேயாம். எனவே, மேனாட்டினரின் நாகரிகப் போலிதான் தமிழர் நாகரிகம் என்று கூறுவது அறியாமைக் கூற்றேயாம் என்பது, மேல் எடுத்துக் காட்டியவறறால் விளங்குகிற தல்லவா? தங்கள் முன்னோரின் அத்தகைய நனிமிகு நாகரிக நிலையை அறியும் நிலையில், அறிந்தின்புறும் நிலையில் இன்றைய தமிழ்ப் பெண்மணிகளிற் பெரும்பாலோர் இல்லையே என்பதுதான் வருந்தத் தக்கது.
இன்று தமிழ்ப் பெண்கள் இதழுக்குச் செஞ்சாயம் பூசுவது மேனாட்டு நாகரிகப் போலியாகக் கருதப்படுகிறது. அவ்வாறே கூறவும் அஞ்சுவதில்லை. அவ்வாறு கருதுவதும் கூறுவதும் தவறு. அவர்கள் நாகரிகந்தான் போலி. அதுவும் தமிழர் நாகரிகத்தின் போலி. பழந்தமிழர் மகளிர் இதழுக்கும், கைகால் நகங்களுக்கும் செஞ்சாயம் பூசித்திகழ்ந்தனர். இச்செஞ்சாயம், பஞ்சால் தோய்த்துப் பூசியதால் செம்பஞ்சு, செம்பஞ்சுக் குழம்பு எனப் பெயர் பெற்றது. இச்செம்பஞ்சுக் குழம்பை மருதோன்றி இலையை அரைத்துச் செய்தனர். மருதோன்றி நோயணுகாமல் தடுக்கும் ஒரு மருந்துப் பொருளாகும். அது பற்றியே அதனால் செய்தனர் போலும். அச்செம்பஞ்சுக் குழம்பை உள்ளங்கைக்கும் பூசிக்கொள்வர். அதனால் செக்கச் செவேலென்றிருந்த அவ் வங்கைக்கே செங்காந்தட் பூவை உவமை கூறினார் புலவர். கன்னத்துக்கும் பூசுவர் அச் செம்பஞ்சை.
உகிரும் கொடிறும் உண்டசெம் பஞ்சியும்..
- (பரிபாடல் - 6: 17.)
உகிர் - நகம். கொடிறு - கன்னம். இதழ், கன்னம், கை, கால், நகங்கள், உள்ளங்கை ஆகியவற்றுக்கெல்லாம் செம்பஞ்சு பூசி, இதழுக்குப் பவழமும் கோவைப்பழமும், கன்னத்திற்குச் செந்தாமரை மலரும், உள்ளங்கைக்குச் செங்காந்தள் மலரும், நகங்களுக்குக் கிளிமூக்கும் பவழமும் உவமையாகும்படி விளங்கினர் அக்காலத் தமிழ் மகளிர்.
இன்று தமிழ் மகளிர் பூசும் முகப்பூச்சும் மேனாட்டினர் நாகரிகப் போலி என்கின்றனர். இல்லை. அது தமிழ் நாகரிகப் போலியேயாகும். முகத்துக்குப் பூசும் பொடி - பொற்சுண்ணம், சுண்ணம் எனப்படும். “வண்ணமும் சுண்ணமும்” (சிலப்: 5. 13). இது பூசு சுண்ணம் எனவும் வழங்கும். சுண்ணம் - பொடி. பொற் சுண்ணம் - அழகிய பொடி. சுண்ணம் பூசிய முகத்திற்கு வெண்முழுமதி உவமை கூறப்பட்டுள்ளது. முகத்தின் வட்ட வடிவத்திற்கு வட்ட மதியும், பொற்சுண்ணப் பொலிவுக்கு மதியின் வெண்ணிலவும் உவமை. மணிவாசகர் திருவாசகத்தில் பொற் சுண்ணம் என்னும் பாடற்பகுதி யொன்றைப் பாடியுள்ளார். அது மகளிர் பொற் சுண்ணம் இடித்துக் கொண்டு பாடுவதுபோல் பாடப்பட்டதாகும்.
இனி, மேனாட்டினர் இன்றளவும் அறியாத அழகுக்கலை யொன்றைப் பழந்தமிழ் மக்கள் அறிந்திருந்தது, தமிழ் மக்களால், ஏன்? உலக மக்களால் அறிந்து இன்புறற் பால தொன்றாகும். அது தான் தொய்யில் என்னும் தோட்கோல மாகும். அதாவது மகளிர் நம் தோளிலும் மார்பிலும் நறும் பொருள் பல கலந்தரைத்த குங்குமச் சந்தனக் குழம்பினைக் கொண்டு மலர்க்கொடிகள், கரும்பு முதலியன போன்ற பல்வகைக் கோலங்கள் எழுதி அழகு செய்து கொள்வர். அத்தொய்யில் அழகுக் கழகு செய்வதொன்றாகும். பெரும் பாலும் கொடிவகைகளே எழுதுவதால் அது தொய்யிற் கொடி எனவும் வழங்கும். இது வள்ளி எனவும் வழங்கும்.
“வண்டே இழையே வள்ளி என்றா.”
(- தொல். களவு - 4.)
என்பது தொல்காப்பியம். வள்ளி - தோளில் எழுதும் தொய்யிற் கொடி என்பர் நச்சினார்க்கினியர்.
கரும்பின் அணைமென்றோள்.
(- பரிபாடல் - 7 : 85.)
தொய்யிற் கரும்பினை யுடைய பஞ்சணை போலும் மெல்லிய தோள். எல்லோரா, அசந்தாச் சிற்பங்களில் தொய்யில் செதுக்கப்பெற்றிருப்பது தமிழர் நாகரிகப் போலியே யாகும். ஐயாயிர ஆண்டுகட்கு முற்பட்ட நாகரிக மன்றோ இது?
இத்தொய்யில் எழுதுவதில் மகளிரே யன்றி ஆடவரும் சிறந்த பயிற்சியுடையராய் இருந்து வந்தனர் என்பது வியத்தற் குரிய செய்தியொன்றாகுமன்றோ? தலைவன் தலைவிக்குத் தொய்யில் எழுதி அழகுபடுத்தும் வழக்கம் தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே உண்டென்பது, “அணிநிலை உரைத்தல்” (கற் - 27) என்னும் தொல்காப்பியர் கூற்றால் தெரிகிறது. அணிநிலை யுரைத்தலாவது - தலைவிக்குத் தொய்யி லெழுதும் வகையினை கூத்தர் தலைவற்குக் கூறுதலாகும். இது எத்தகு நனிமிகு கழி நாகரிகம்! தொய்யில் எழுதும் அத்தொய்யிற் குழம்பு - வண்ணம் எனப் பெயர் பெறும். வண்ணம் - நிறமும் அழகும் செய்யும் பொருள் எனப்படும்.
இனி இன்று தமிழ் மகளிர் போடும் இரட்டைச் சடையும் அயலார் நாகரிகப் போலியன்று; பழந்தமிழ் மகளிர் கூந்தலை எவ்வெவ் வகையெல்லாம் முடிந்தால் முகத்திற்கு அழகு தருமோ அவ்வவ் வகையெல்லாம் முடிந்து அழகு செய்து கொண்டனர். பெண்கட்குக் கல்வியின் இன்றி யமையாமை பற்றிக் கூறவந்த சிறுபஞ்சமூல ஆசிரியர், ‘மயிர் வனப்புங் கண் கவரும் மார்பின் வனப்பும்’ (37) என, மயிர் மகளிர்க்கு அழகு தரக்கூடிய தொன்றென்கின்றார்.
கருங்குழல், மென்குழல், மெல்லோதி, சில்லோதி, பல்லிரு கூந்தல், சுரிகுழல், புரிகுழல், தாழ்குழல், நீள்குழல், தாழ்சடை, பின்னருங்குழல், சோர்குழல், சரிகுழல், மொய் குழல், விரிகருங் கூந்தல் எனப் பழந்தமிழ்ப் புலவர்கள் கூறும் இவ்வன்மொழித் தொகைப் பெயர்களெல்லாம் மகளிர்க்குக் கூந்தலழகின் இன்றி யமையாமைச் சிறப்பினைக் குறிக்க எழுந்தவையேயாம். மகளிர் மயிரைப் பலவகையாக முடிந்து அழகு செய்து கொண்டதில் முடி, கொண்டை, குழல், சுருள், பனிச்சை என்னும் ஐந்தும் சிறந்தவையாகும். இதனால், மகளிர் கூந்தல் - ஐம்பால் எனப் பெயர் பெற்றது. ஐம்பால் - ஐந்து வகையாக முடிக்கப்படும் மயிர். மற்ற எல்லா வகையும் இவ்வைந்தனுள் அடங்கும் போலும். பெண்டிரை ஐம்பாலர் என்பதும் இதனை வலியுறுத்தும்.
முடி - ஆண்கள் குடுமி முடிவதுபோல் நேராக முடிவது. கொண்டை - மயிரை முடிந்து வலப்புறமாவது இடப்புற மாவது செருகிக் கொள்வது. குழல் - பிடரிக்குங் கீழ் முடிந்து தொங்க விடுவது; நுனிமயிரை முடிந்து தொங்க விடுவதும் குழல் எனவே படும். இது கோடாலி முடிச்சு, கோடாலி என வழங்குகிறது. சுருள் - மயிரை இரண்டாக அள்ளிச் செருகிக் கொள்வது. பனிச்சை - சடை.
சீவிச் சிணுக்கெடுத்துச் சிமிழ்போலக்
கொண்டையிட்டார்
வாரி மயிர்முடித்து வலப்புறத்தில்
கொண்டையிட்டார்
சுற்றி முடித்தகொண்டை சூரியனைப்
போலிருக்கும்.
(- அல்லியரசாணிமாலை)
என்பர் புகழேந்திப் புலவர். புரிகுழல் - முறுக்கிய மயிர். சுற்றிமுடித்த மயிர் சூரியன்போல் வட்டமாக இருக்கும் என்பதால், இன்று போல் மயிரை முறுக்கி வட்டமாகச் சுற்றி முடிந்து வந்தமை பெறப்படும். விரிகருங்கூந்தல், சோர்கூந்தல், சுரிகுழல் என்பன - அடிமயிரில் கட்டி மயிரை விரித்துப் போட்டிருந்தமை பெறப்படும். இன்றைய நனிநாகரிகர் எனப்படுவோர்க்குத் தெரியாத எத்தனையோ வகையில் முடிந்து அழகுடன் விளங்கினர் அக்காலத் தமிழ் மகளிர்.
ஈங்கு எடுத்துக்காட்டியவற்றால் தமிழர் நனி நாகரிகத்தின் தனிப்பெருமை இனிது விளங்கும். பழந்தமிழ் நாகரிகமே உலக மெல்லாம் பரவி, இன்று அயலார் நாகரிகம் என்னும் பெயரில் திரும்பி வந்து வழங்குகிறது. அழகுக் கலைகளே நாகரிகத்தின் சிறந்த உறுப்புக்களாகும். அழகுக் கலைகளில் பழந்தமிழ் மக்கள் மிகவும் தேர்ச்சி பெற்றுச் சிறந்து விளங்கினர்.
நாகரிகம் என்பது வண்டிச் சக்கரத்தின் ஆரக்கால் போன்றது. அடிக்கடி மாறும் இயல்புடையது. ஒரு காலத்தே நாகரிகம் எனப்பட்டது பின்னொரு காலத்தே நாகரிகமற்ற தாகிவிடும். மறுபடியும் அதுவே நாகரிகமாகக் காட்சியளிக்கும். காட்டாக மகளிர் முன்பு தலைமயிரை மூக்குக்கு நேராக வகிர்ந்து சீவி முடிந்து வந்தனர். சில ஆண்டுகளாக ஒரு பக்கமாக நேரெடுத்து வந்தார்கள். இப்போது ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்பது போலப் பழையபடி மூக்குக்கு நேராகவே நேரெடுத்து வருகின்றனர். முன்பு ஆடவர் வெண்கல வட்டிலில் உண்டு வந்தனர். அது நாகரிக மற்றதாகிப் பின் இலையில் உண்டு வந்தனர். மீண்டும் அந்த வட்டிலே உண்கல மாகிவிட்டது. பீங்கான் தட்டமாக இருந்து, இப்போது எவர்சில்வர்த் தட்டமாக மாறியிருக்கிறது. வெண்கலம், எவர்சில்வர் - பெயர்தான் வேறு.
தமிழர் நாகரிகம் மிகப் பழமையானது. இன்றைய உலக நாகரிகங்கட் கெல்லாம் அடிப்படையானது. அதை உலகம் அறியாமையினால் தமிழினம் தாழ்வுற்றுக் கிடக்கின்றது. ஆகையால், பழந்தமிழராகிய நமது முன்னோர் நனி நாகரிகத்தை உலகறியச் செய்வது நமது தனிப்பெருங் கடமையாகும். வாழ்க தமிழர் நனிநாகரிகம்!